‘பரப்புரைகள் தொடர வேண்டும்’

(பயணத்தில் குழுவினர் சந்தித்த நிகழ்வுகளை குழுவின் தலைவர்கள் மாநாட்டு மேடையில் விளக்கினர்.)
நாகர்கோவில் அணியின் தலைவர் நங்கவள்ளி கிருஷ்ணன் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
அதிக எண்ணிக்கையிலான தோழர்கள் பங்கெடுத்த அணி நாகர்கோவில் அணி! குறிப்பாக சேலம் தோழர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பரப்புரைப் பயணத்தில் முழுமையாக இருந்தனர். முன்னேற்பாடு குழுவினரும், பரப்புரைக் கூட்ட ஏற்பாட்டுக் குழுவினரும் உணவு, தங்குமிடம் ஆகியவற்றை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

தென்மாவட்டங்களில் 20-க்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தினோம். பொதுமக்கள் பலர் அடிக்கடி இதுபோன்ற கூட்டங்களை நடத்த வேண்டும் என்று பல இடங்களில் கேட்டுக் கொண்டனர்.

இரண்டு இடங்களில் பரப்புரை தடைபட்டது. பாஜக இந்துத்துவா கும்பல் சமூக வலைதளங்கள் வழியாக ஆட்களைத் திரட்டி ஒரு பதற்றத்தை நாகர்கோவில் பகுதியில் ஏற்படுத்தினர். திருப்பரங்குன்றம் பகுதியில் பாஜக மாநில பொறுப்பாளர் ஒருவர் பிரச்சாரத்தை புகைப்படம் எடுத்ததோடு காணொலியாகவும் எடுத்தார். திருப்பரங்குன்றம் காவல்நிலைத்திற்கு முன்பு தான் கூட்டம் நடைபெற்றது. கலவர முயற்சிகள் தோல்வியடைந்தன.

காவல்துறை 10 நிமிடங்கள் மட்டுமே பேச வேண்டும் என்று நிபந்தனை விதித்தது. ஆனால் 40-நிமிடங்களுக்கு மேல் கருத்துகளைப் பேசினோம். பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் காவல்துறையிடம் சமரசம் செய்து சரிபடுத்துவார்.

கழக வெளியீடுகள் ரூ.4615 விற்பனையானது. கடைவீதி வசூல் வழியாக ரூ.22,636 கிடைத்தது. கடைசியாக நடைபெற்ற கூட்டத்தில் மழையைப் பொருட்படுத்தாமல் நிழற்குடை போல் அமைத்து பரப்புரை மேற்கொண்டோம் என்றார்.

நாகர்கோவில் அணியில் பங்கேற்க மேலும் பல தோழர்கள் ஆர்வத்துடன் முன்வந்தனர். எண்ணிக்கையைக் கருதி பால்.பிரபாகரன் தவிர்த்தார்.
தோழர்.கணபதி இலக்கிய நயத்துடன் உரையாற்றினார். கோபி தோழர்கள் துண்டறிக்கை மற்றும் நிதி வசூல் பணிகளை சிறப்பாக மேற்கொண்டனர். பயணம் மிகுந்த மனநிறைவைத் தந்தது.
போராவூரணி பயணக்குழுத் தலைவர் நிர்மல்குமார் தனது உரையில் குறிப்பிட்டதாவது….
அனைத்து தோழர்களும் பேச்சாளர்களாகவும், களப்பணியாளர்களாகவும் வலம் வந்தனர். தினமும் ஒவ்வொரு தலைப்பிலும் தோழர்கள் உரையாற்றினர்.

பரப்புரைப் பயணத்தில் திருவேங்கடம், கலைச்செல்வன், மாரிமுத்து, கவிமணி ஆகியோர் தங்குமிடம், உணவு ஏற்பாடுகளை சிறப்பாக மேற்கொண்டனர். போராவூரணி, பட்டுக்கோட்டை ஆகிய பகுதிகளில் ஒருசில தோழர்களே இருக்கின்றனர். இருந்தாலும் பெரியாருக்கு எப்படி அஞ்சா நெஞ்சன் அழகிரியோ அப்படிபட்ட தளபதிகள் தான் நமது தோழர்கள்.

அதேபோல் நாச்சியார்கோவில் தோழர்.வெங்கடேசன் இல்லத்திற்கு சென்றபோது அவரது இணையர் வைக்கம், அவரது உறவினர்கள் சந்தனம், குங்குமம் வைத்த கடவுள் நம்பிக்கையாளர்கள். ஆனால் அவர்களது நெருங்கிய உறவினர்களைப் போல் கழகத் தோழர்களை கவனித்துக் கொண்டனர். குடும்ப உறுப்பினர்கள் போல் தோழர்களை அரவணைத்துக் கொண்டது நெகிழ்ச்சியாக இருந்தது.

ஜாதி எதிர்ப்பை நாடக வடிவில் நாங்கள் பரப்புரையை மேற்கொண்டோம். பாடகராக வந்த தோழர் வீரமணி ஜாதி சங்கத் தலைவராகவும், ஜாதி எதிர்ப்பாளர்களாக நிர்மல், திருவேங்கடம், தேன்மொழி ஆகியோரும் நடித்தனர். வடசேரி கூட்டத்தில் ஜாதி சங்கத் தலைவராக நடித்த வீரமணி, ஜாதி எதிர்ப்பாளராக நடித்த திருவேங்கடத்தை அடித்த போது, நாடகம் பார்த்துக் கொண்டிருந்த யாரென்றே தெரியாத ஒருவர் ஆவேசத்துடன் மேடை ஏறி ஜாதி சங்கத் தலைவராக நடித்த வீரமணி அவர்களை சட்டையைப் பிடித்து அடிக்கப் பாய்ந்தார். தோழர்கள் விவரம் சொன்னபிறகு அமைதியானார். நாடகம் இந்த அளவுக்கு மக்களிடம் கருத்துகளைக் கொண்டு சென்றது.

வழிநெடுக பரப்புரைக்கு மக்களிடம் ஆதரவு இருந்தது. பட்டுக்கோட்டை கூட்டத்தில் நாடகத்தைக் கண்டுகளித்த ஒரு பாட்டி சொன்ன கருத்து “தம்பி நீங்க சொல்றது உண்மைதான்; வேற ஜாதியில் திருமணம் பண்ணா, அப்படி ஆகிடும், இப்படி ஆகிடும்ன்னு சொல்றாங்க நான் தேவர் ஜாதி; என்னோட பேரன் தாழ்தப்பட்ட ஜாதி பெண்ணை திருமணம் பண்ணிக்கிட்டான். இரண்டு பேரும் நல்ல வேலையில், நல்லா இருக்காங்க. குடும்பத்துடன் நல்லா இருக்கோம்” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

பரப்புரையில் பேசிய கருத்துக்களின் நியாயத்தை உணர்ந்து பலரும் வாழ்த்தினார்கள். தங்களால் இயன்றதை நன்கொடையாக வழங்கினார்கள். கடந்த ஏழு நாட்களில் கடைவீதி வசூலாக 28,300 தொகையாக கிடைத்தது. எனது நண்பர் திடீரென தொலைபேசி செய்து பரப்புரைப் பயணம் நல்லா இருக்கு. நன்கொடை தருகிறேன் என ரூ.5000 வழங்கினார். கழகத் தலைவர், பொதுச் செயலாளர் குறித்த செய்திகளைத் தொடர்ந்து கவனிக்கிறேன். உங்கள் அமைப்பு தொடர்ந்து சமரசமில்லாமல் செயல்படுவது எனக்குப் பிடிக்கும், என்னால் வர இயலவில்லை. ஆகவே சிறுபங்களிப்பை தருகிறேன் என்றார்.

பரப்புரையில் கழகத் தோழர்கள் சிறப்பாகப் பணியாற்றினார்கள் நமக்கான ஆதரவு கழக எல்லைகளைக் கடந்து இன்றும் மக்களிடம் இருக்கிறது. திமுக தோழர்கள், ஈழ விடுதலையில் ஆர்வம் உள்ள தோழர்கள் பல இடங்களில் ஆதரவு தந்தனர். உணவு, தங்கும் இடம் உள்ளிட்ட ஏற்பாடுகளைச் செய்தனர்.

அதிராம்பட்டினத்தில் பெயர் சொல்லவிரும்பாத இருவர், பரப்புரையை கவனித்து ரூ.1000, 500 என நன்கொடை வழங்கினார்கள். முன்னாள் ’நாம் தமிழர்’ கட்சித் தோழர் ஒருவர் கழகத் தலைவரை எனக்கு பிடிக்கும்; பெரியார் தான் எனக்கு தலைவர் என்றுகூறி தோழர்களுக்குத் தேநீர் வழங்கினார்.

பேராவூரணி பயணக்குழு இவ்வளவு சிறப்பாக பணியாற்றியதற்குக் காரணம் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி அவர்கள்தான். அனைவரையும் தங்கள் குழந்தைகள் போல் கவனித்துக் கொள்வார். எவ்வளவு செலவு ஆனாலும் அவரே தருவார். அனுபவம் வாய்ந்த கழகத்தின் மூத்த தோழர் அய்யனார் ஆகியோரின் வழிகாட்டுதலில் கூட்டு முயற்சியில் இந்தப் பரப்புரையை நாங்கள் சிறப்பாக செய்து முடித்தோம். துவரங்குறிச்சியில் பாஜக, சங் பரிவார் கும்பலைச் சேர்ந்த ஒருவர் கூட்டத்திற்கு காவல்துறையில் அனுமதி வாங்கினாலும், ஊராட்சியில் அனுமதி வாங்க வேண்டும் என்று புதிய நிபந்தனையைக் கூறி சலசலப்பை ஏற்படுத்தினார். அதை முறியடித்து பரப்புரையை எழுச்சியுடன் நடத்தினோம்.

தோழர் சின்னப்பத் தமிழர் (தமிழ் வழிக் கல்வி இயக்கம்) பரப்புரைப் படையை வரவேற்பு பதாகையுடன் தனது ஆதரவாளர்களுடன் வந்து பயணக்குழுவுக்கு தேவையான உதவிகளைச் செய்தார். பயணத்தில் தொடர்ந்து வந்தார்.
அதிராம்பட்டினத்தில் மூன்று தோழர்கள் பொருளாளர் துரைசாமி முன்னிலையில் கழகத்தில் தங்களை இணைத்துக் கொண்டனர். பயணத்தில் மக்களிடமிருந்து அனுபவங்களை பெற்றோம். மிகுந்த உற்சாகத்தைத் தந்தது.
திருச்சி பரப்புரை அணியின் தலைவர் சென்னை உமாபதி பேசுகையில் குறிப்பிட்டதாவது..
இந்த பிரச்சாரப் பயணம் குறித்து தலைமைக் குழுவில் விவாதிக்கும்போது தென் மாவட்டங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரையை நாம் மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தேன். எனது கோரிக்கையை பரிசீலித்த கழகத் தலைமைக்கு நன்றி.

மக்களிடம் இந்தப் பரப்புரை நோக்கத்திற்கு பெரிய ஆதரவு இருக்காது. கடுமையான எதிர்ப்பு வரும் என்று எதிர்பார்த்தே சென்றோம். எங்கள் அணி சென்ற ஒரே இடத்தில் மட்டும் எதிர்ப்பு வந்தது. மற்றபடி மக்கள் ஆதரவு மிகுந்து இருந்தது.

தலைமைக்குழு உறுப்பினர் திருச்சி மனோகர் தொடக்க விழா பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்தார். தொடக்க பொதுக்கூட்டமாக திருச்சி மாவட்டக் கழகம் ஏற்பாடு செய்திருந்தது. பயணம் என்றால் சென்னை தோழர்கள் உற்சாகத்துடன் இருப்பார்கள். எங்கள் அணியில் இரண்டு பெண்கள் முழுமையாக பயணித்தனர். ஒருவர் பாடகர் லதா, மற்றொருவர் இரண்யா.

புத்தக விற்பனை 12,585, கடைவீதி வசூல் ரூ.35,000 வழியாக கிடைத்தது.. புத்தக விற்பனையை தோழர் எட்வின், மயிலாப்பூர் இராவணன் ஆகியோரும் கவனித்துக் கொண்டனர்.

திருச்சியில் பெரியார் பெருந்தொண்டர் தமிழ்ச்சுடர் அவர்கள் இரண்டுநாள் தங்குவதற்கான எற்பாடுகளைச் செய்து கொடுத்தார். மிகுந்த அக்கறையுடன் கவனித்துக் கொண்டார். பெரியார் பிஞ்சு திராவிட மகிழன் பாடல்களைக் கேட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.

“எனக்கு 85 வயதாகிறது, தற்போதைய சூழலில் யார் பெரியார் கொள்கையைக் கொண்டு செல்வார்களோ என்ற கவலை இருந்தது. இந்தச் சிறுவன் திராவிட மகிழன் பாடல்களைக் கேட்ட போது அந்தக் கவலை நீங்கியது” என்று கண் கலங்கினார்.

பெரம்பலூரில் விஜயேந்திரன் (தி.க மாவட்டச் செயலாளர்) இல்லத்தில் தான் இரண்டு நாட்கள் தங்கி இருந்தோம். அவர் சிறப்பாக கவனித்துக் கொண்டார். குறிப்பாக இந்தத் தலைப்பில் பயணம் மேற்கொள்வது அவர்களுக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அவர் தனது ஒலிப்பெருக்கியை பரப்புரைக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கொடுத்துள்ளார். திராவிடர் கழகத் தோழர்கள் போகிற இடங்களில் எல்லாம் நல்ல வரவேற்பை வழங்கினர்.

கடைவீதி பிரச்சாரம் செய்த போது துண்டறிக்கை வாங்கிய ஒரு நபர் ஜாதி இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். உங்களுக்கு நன்கொடை கிடையாது என்று நேரடியாக மறுத்தார். இத்தகைய எதிர்மறை அனுபவங்களும் உண்டு. இன்னோரு இடத்தில் கடைக்காரர் நன்கொடை தருகிறார். ஆனால் கூட இருக்கிற நபர் கொடுக்கக் கூடாது என்று மிரட்டுகிறார். அங்கே தோழர்களுக்கு இடையில் வாக்குவாதம் உருவானது. ஜாதிய மனநிலையில் இருப்பதை உணர முடிந்தது. பரப்புரைக்கு ஆதரவாக பல நிகழ்வுகள் நடந்தன.
மன்னார்குடியில் பரப்புரையைக் கவனித்த அதிமுக பிரமுகர் பரப்புரை முடிந்ததும் தோழர்களைப் பாராட்டி தேநீர் செலவுகளுக்கு ரூ.500 வழங்கினார். மீண்டும் தோழர்களை அழைத்து உணவுக்கு ஏற்பாடு செய்ய முன்வந்தார். தோழர்கள் ஏற்கெனவே ஏற்பாடு செய்துள்ளனர் என்றனர். மீண்டும் ரூ.500 கொடுத்து உணவுச் செலவுகளுக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்றார்.

பெரம்பலூரில் ஒரு வயதான அம்மா ரூ.100 நன்கொடை வழங்கினார். அவர் ‘என் பையன் இந்த பெரியார் கட்சியில் தான் இருந்தான், அவன் உடல் நலமின்மையால் இறந்துவிட்டான். அவன் உயிரோடு இருந்திருந்தால் உங்க கூட்டத்துக்கு வந்திருப்பான். அவன் நினைவாக உங்களுக்கு கொடுக்கிறேன்” என்றார். இப்படியும் பல இடங்களில் நெகிழ்ச்சியான நிகழ்வுகள் இடம்பெற்றன. ஜாதி எங்கே இறுக்கமாக இருக்கிறதோ அங்கே நாம் பரப்புரைகளை நடத்த வேண்டும். எனவே பெரியாரியக்கத்தின் அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்புக்கு ஆண்டுதோறும் ஒரு பிரச்சாரத்தைத் தென் மாவட்டத்தில் நடத்த வேண்டும்.
தோழர்கள் சத்யா-லதா அவர்களின் முன்னெடுப்பில் இந்தப் பயணத்துக்காக சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மூன்று பரப்புரைப் பாடல்களை உருவாக்கினோம். அவர்களுக்கு நன்றி. தோழர் யேசுகுமார் கொடிகாத்த குமரன் போல் கொடியுடனே இருப்பார். தோழர் சூர்யா பரப்புரை வாகனத்தை 600 கி.மீ கடந்து ஓட்டி வந்தார். தோழர் சுகுமார் ஒலிபெருக்கி அமைக்கும் பணிகளை மேற்கொண்டார். தோழர்கள் கோபி, அருண் கடைவீதி வசூல் பணிகளை மேற்கொண்டனர். தோழர் வேலு குழுவை ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொள்ளச் செய்தார். புதுக்கோட்டை பழனிவேல் ஆசிரியர் மூன்று நாட்களாக எங்களுடன் இருந்தார். பரப்புரைப் பயணம் புதிய உற்சாகத்தைத் தந்தது.
பெரியார் முழக்கம் இதழ் 20082026

You may also like...