கழகத் தோழர் இலக்கம்பட்டி குமார் விடைபெற்றார்!

சேலம் மாவட்டம், கொளத்தூர் , இலக்கம்பட்டி கழகத் தோழர் குமார் (52) 01.08.2026 அன்று மாலை 6.00 மணியளவில் மறைவுற்றார். தோழரின் இறுதி நிகழ்வு 02.08.2026 காலை 10.00 மணிக்கு இலக்கம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்றது. அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த தோழரின் உடலுக்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் அணிவகுத்து கழகக் கொடி மற்றும் மாலை அணிவித்து இறுதி மரியாதை செலுத்தப்பட்டது. கழகப் பெண் தோழர்களே குமார் அவர்களின் உடலைச் சுமந்து இறுதி ஊர்வலத்தை தலைமை ஏற்று நடத்தினர். இறுதி நிகழ்வை சடங்கு, சம்பிரதாயங்கள் இன்றி நடத்த தோழரின் குடும்பத்தார் முழு ஒத்துழைப்பு வழங்கினர். கழகத் தலைமைக்குழு உறுப்பினராக செயல்பட்டவர் தோழர் குமார்.

நிகழ்வில் கொளத்தூர், காவலாண்டியூர், மேட்டூர், மேட்டூர் ஆர்.எஸ், சேலம் மாநகரம், நங்கவள்ளி, வனவாசி, இளம்பிள்ளை, ஏற்காடு, திருப்பூர், குருவரெட்டியூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கழகத் தோழர்கள் மற்றும் மாநில மாவட்ட நிர்வாகிகள் உறவினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கழகத் தலைவர் கொளத்தூர் மணி இரங்கல் அறிக்கை:

அவருடைய பெற்றோர்கள் இருவரும் சென்னையில் 1972 மே 27, 28 ஆகிய நாட்களில் நடந்த மாநில பகுத்தறிவாளர் மாநாடு, சமூக இழிவு ஒழிப்பு மாநாடு, மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாடுகள் முதல், திராவிடர் கழகத்தின் அனைத்து மாநாடுகளிலும் பங்கேற்றவர்கள். அவரது தந்தை தோழர் மு. அர்த்தனாரியோ மண்டல் குழு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற மாநாட்டிலும், பின்னர் நடந்த டெல்லி போராட்டத்திலும் பங்கேற்றவர். அவரது தாயார் சந்திராவும் தாலி, நகைகள் அணியாத கழகக் கொள்கைப் பற்றாளராகவே வாழ்ந்து வருபவர் ஆவார்.தமிழீழ விடுதலைப்புலிகள் பயிற்சி முகாமுக்கு இடம் தேடியபோது அவர்கள் வசித்து வந்த நிலம் காடுகளுக்கு அருகில் இருந்ததாலும், மற்றொரு நிலம் காவிரி ஆற்றின் கரையில் (மேட்டூர் தேக்கத்தின் பின்புறத்தில்) இருந்ததாலும் முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டது. அதன் பின்னர் தான்இடமாற்றம் நிகழ்ந்தது.

அவரது தந்தை தன் மகனுக்கு ஜாதி மறுப்புத் திருமணமே செய்வது என்பதில் உறுதியாக இருந்தவர். அவ்வாறே திராவிடர் கழகத்தின் மேச்சேரி ஒன்றியத் தலைவராக இருந்து, தோழர் மேச்சேரி கோபால் முடிவெய்திய பின்னர் அவரது மகள் கோ. தமிழரசியுடன் நடத்தியும் வைத்தார். அந்தத் திருமணத்திற்கு கழகப் பொதுச் செயலாளர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தேதி கிடைக்காத காரணத்தால், மணமக்களின் இரு குடும்பத்தாரும் ஒற்றைப் பேருந்தில் பயணத்து, பெரியார் திடலில் அன்னை மணியம்மையார் அரங்கில் நிகழ்த்திக் கொண்டனர். வழங்கப்பட்ட இனிப்பும். காரமும் வீட்டிலேயே செய்து எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு வாங்கிய தேநீர் விருந்தோடு நிகழ்ச்சி நிறைவு பெற்றது. ஆசிரியர் அவர்கள் பாராட்டிப் பேசிய ஒரு விழாவாகவும் அது இருந்தது. மீதமான மணவிழாச் செலவை கழகத்துக்கு நன்கொடையாகவும் வழங்கினார் அவருடைய தந்தையார். தோழர் குமாரும் தொடக்கத்தில் தன் கல்லூரி நாட்களில் ஈரோடு மாவட்ட மாணவரணிச் செயலாளராகப் பணியாற்றியவர். பின்னர் திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலாளராக திண்டுக்கல் தோழர் தி. தாமரைக்கண்ணனும் இவரும் நியமிக்கப்பட்டனர். இரண்டு ஆண்டுகளில் தாமரைக்கண்ணன் தன்னை திராவிடர் கழகத்திலிருந்து விடுவித்துக் கொண்டதன் பின்னர், தந்தை பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்படும் வரை திராவிடர் கழக மாநில மாணவரணிச் செயலாளராக நான்காண்டு காலத்துக்கு மேலாகப் பணியாற்றி வந்தார். அவர் விளிம்பு நிலை மக்களிடம் கொண்டு இருந்த ஈடுபாடு காரணமாக அவரது ஆய்வியல் அறிஞர் (M.Phil.,) ஆய்வு பழங்குடி மக்களை குறித்ததாகவே இருந்தது.

அவரது தந்தைக்கு நிகழ்ந்த இதய அறுவை சிகிச்சையின் காரணமாக முழுவீச்சில் ஈடுபட முடியாமல் உள்ளூர் அளவில் அவரது கழகப் பணி குறுக நேர்ந்தது. தன் மகன் த.கு.இனியனை வில்வித்தைப் பயிற்சியில் ஈடுபடுத்தி தேசிய அளவிலான முதல் இடம் பெறும் அளவு வளர்த்தெடுத்தார். அவரது முன்னெடுப்பே கொளத்தூர் பகுதி கழகக் குடும்பங்களிலும் பலர் அந்த்த் துறையில் வளர்ந்து மாநில அளவிலான வெற்றிகளையும், இந்திய அளவிலான போட்டிகளில் பங்கேற்பும் நிகழச் செய்தது.

அப்போட்டிகள் நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் வல்வில் ஓரி விழாவில் அனைத்திந்திய அளவிலான போட்டிகளாக ஆண்டுதோறும் நடைபெறும். தமிழ்நாடு வில்வித்தைப் பயிற்சியாளர் சங்க செயலாளராக அப்போட்டியின் முன்னேற்பாடுகளுக்காக ஒரு நாள் முன்னதாகவே சென்று போட்டி ஒழுங்குகளில் ஈடுபட்டிருந்தபோது திடீரென ஏற்பட்ட மயக்கத்தின் காரணமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோதுகூட மருத்துவமனைக்குள் நடந்தே உள்நுழைந்த தோழர் குமார் மருத்துவம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உயிரிழந்தார். முதன் முறையாய் ஏற்பட்ட மாரடைப்பு அவரது மரணத்தில் முடிந்த நிகழ்வு அவரை அறிந்த அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
பெரியார் முழக்கம் இதழ் 06082026

You may also like...