சுயமரியாதைச் சுடரொளி வை.சு.சண்முகம் பெயரில் காரைக்குடி மாநாட்டு மேடை!
காரைக்குடியில் ஆக-12,ல் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பயண நிறைவு விழா மாநாட்டின் மேடைக்கு சுயமரியாதைச் சுடரொளி வை.சு. சண்முகம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. காரைக்குடி பகுதியில் செல்வவளம் மிக்க நகரத்து செட்டியார் சமூகத்தினர் வாழ்ந்த பகுதியில் சுயமரியாதைக் கொள்கைகளை முன்னெடுத்த பெரியாரின் உற்ற தோழராக விளங்கியவர் கானாடுகாத்தான் வை.சு.சண்முகம். ஜாதிக்குள் திருமணத்தையும் இந்துமத பார்ப்பனியத்தையும் எதிர்த்து நின்ற அந்த சுயமரியாதைச் சுடரொளி பெயரை மிகப் பொருத்தமாக மாநாட்டு அரங்கிற்கு சூட்டியுள்ளோம்.
முகவை மாவட்டம் கானாடுகாத்தானில், 1883ஆம் ஆண்டில் பிறந்த வை.சு. சண்முகம் அவர்கள். காங்கிரசில் இருந்தபோதே சேரன்மாதேவியில் நடந்த குருகுலப் போராட்டத்தில் பெரியாருக்கு பெரும் ஒத்துழைப்பு நல்கியவர். “பார்ப்பனரல்லாதார்” உணர்வு நிரம்பியவராகையால், வகுப்புரிமைக்கு பெரியார் சுயமரியாதை இயக்கம் அமைக்கையில் இவரும் உடன் தோழராய்த் தோள்கொடுக்க முன்வந்தார்.
இவரது நேர்மையும், ஆர்வமும், தகுதியும் உணர்ந்த சுயமரியாதைத் தலைவர்கள் செங்கற்பட்டு மாநாட்டிலேயே இயக்கத்தின் பொருளாளராகத் தேர்வு செய்தார்கள். நாட்டின் பல பகுதிகட்கும் சென்று பல்வகை நடவடிக்கைகளின் வாயிலாக இயக்கத்தை வளர்த்தார். ஜாதி மறுப்பு திருமணங்களையும், புரோகிதமற்ற திருமணங்களையும் நிறைய நடத்தியதுடன், தம் முதல் மனைவியார் மறைவுற்ற பின் கைம்பெண்ணாய் இருந்த மஞ்சுளாபாய் அம்மையாரை வாழ்க்கைத் துணைவியாக ஏற்று, வழிகாட்டியாய் விளங்கினார்.
மரபுகளையும் வேண்டாத பழைய சடங்குகளையும் விடாப்பிடியாய்ப் பின்பற்றி வந்த செட்டிநாடு நகரத்தார் எனும் நாட்டுக்கோட்டை செட்டியார் சமூகத்தினரிடம் சுயமரியாதைக் கொள்கைகளை பரப்பினார். தனது மகள் பார்வதியின் திருமணம் 1935இல் நடந்தபோது வாழ்க்கைத் துணைவர் நடராசன் என்பார் கழுத்தில் மகளைவிட்டுத் ‘தாலி’ கட்டும் துணிச்சலான நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்.
“நாட்டுக் கோட்டையாரும் சீர்திருத்தமும்” என்று 1930-இல் இவர் எழுதிய கட்டுரை பிரபலமானது. பெரியார் இயக்கத்தின் கொள்கை அறிமுக நூலாக போற்றப்படும் தயானந்த சரஸ்வதி எழுதிய “ஞான சூரியன்” எனும் அறிவுநூலை முதன் முதலாக வெளியிட்ட பெருமை இவருக்கு உண்டு. கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் இந்த நூலுக்கு அணிந்துரை எழுதினார்.
பெரியாருக்கு ஊர்தியொன்று தேவையாக இருந்த நிலையறிந்த சண்முகனார் தம் மதிப்புயர்ந்த ‘கெடிலாக் மகிழுந்தினை பெரியாருக்கு வழங்கினார். இவ்வண்டியை இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினையொட்டி அரசு பறிமுதல் செய்தது.
1961-ஆம் ஆண்டில் இவர் இயற்கையெய்தியபோதுகூட இவரது உறவினர்கள் இறுதி நிகழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ள முன்வரவில்லை! இயக்கத் தோழர்களே இவரது உடலுக்குச் சுடுகாட்டில் எரிமூட்டிக் கடமையாற்றினர். சுயஜாதிக்காரர்களை எதிர்த்த சுயஜாதிமறுப்பாளர் வை.சு.சண்முகம். இவரது பெயரை சூட்டி காரைக்குடி மாநாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளோம்.
இந்தப் பரப்புரை நோக்கத்தை பலரும் பாராட்டுகிறார்கள் வரவேற்று பேசுகிறார்கள். தோழர்கள் உற்சாகமாக களமிறங்கி செயல்படுகிறார்கள். பயணங்களில் பங்கேற்க வாய்ப்பில்லாத தோழர்கள் நிறைவு விழா மாநாட்டில் பங்கேற்குமாறு கழகம் அறைகூவி அழைக்கிறது.
பெரியார் முழக்கம் இதழ் 06082026
