பரப்புரைப் பயண களப்பணியில் ஏற்பாட்டு குழுவினர்
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ஜாதியில் திருமணம், மதத்தில் பார்ப்பனியம், வாழ்வில் மூடநம்பிக்கை இவற்றிற்கு எதிரான “மாற்றத்தை நோக்கிய வாழ்வியல் பரப்புரைப் பயணம்’’ என்கின்ற தலைப்பில் வருகின்ற ஆகஸ்ட் 6-ஆம் நாள் முதல் தமிழ்நாட்டில் மூன்று முனைகளிலிருந்து தொடங்கும் பரப்புரை நடைபெற உள்ளது. இந்தப் பயணத்திற்கான முன்னேற்பாட்டுப் பணிகளை கழகப் பொருளாளர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் ஆகியோர் அப்பகுதிகளுக்குச் சென்று கலந்தாய்வு செய்தனர்.
08.07.2026 அன்று மதியம் நிறைவு மாநாடு நடைபெற உள்ள காரைக்குடிக்கு சென்று கழக மாவட்டப் பொறுப்பாளர் முத்துவை சந்தித்து மாநாடு நடைபெற உள்ள இடத்தையும் பேரணி தொடங்கும் இடத்தையும் பார்வையிட்டு இறுதி செய்தனர். மாநாட்டின் ஏற்பாடு குறித்தும் தோழர்கள் தங்குமிடம், உணவு மற்றும் மாநாட்டிற்கான விளம்பரம் செய்வது குறித்தும் ஆலோசனை வழங்கினர். மாலை 05.00 மணியளவில் பேராவூரணி சென்று தலைமைக்குழு உறுப்பினர் திருவேங்கடம் அவர்களை சந்தித்து பேராவூரணியில் 06.08.2026 அன்று கழகத் தலைவர் பங்கேற்கும் பரப்புரைப் பயண தொடக்கவிழா பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் குறித்து கேட்டறிந்தனர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தையும் பார்வையிட்டனர்.
07.08.2026 அன்று பரப்புரைக் கூட்டங்கள் நடைபெற உள்ள உடையநாடு, மல்லிப்பட்டினம், மற்றும் அன்றைய நிறைவு கூட்டம் நடைபெற உள்ள அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் பரப்புரைக் கூட்டம் நடைபெற உள்ள இடங்களை பார்வையிட்டு இறுதி செய்தனர். இந்நிகழ்வில் பேராவூரணி திருவேங்கடம், கலைச்செல்வன், அதிராம்பட்டினம் கவிமணி ஆகியோர் தலைமைக் கழகக்குழுவினருடன் சென்றனர்.
09.07.2026 அன்று காலை அதிராம்பட்டினத்தில் கவிமணியின் தந்தையார் எதிர்பாராத விதமாக காலமானார் என்ற செய்தியறிந்ததும் காலையில் அதிராம்பட்டினம் சென்று அய்யா அவர்களுக்கு பொருளாளர் துரைசாமி அவர்களும், பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் அவர்களும் மலர்மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினர். தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், சித.திருவேங்கடம், கு.பாரி, வடசேரி சிவசுப்பிரமணியம், திருப்பூர் அய்யப்பன் ஆகியோர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர். பரப்புரைப் பயணம் நடைபெற உள்ள இடங்களான துவரங்குறிச்சி, பரவக்கோட்டை, மதுக்கூர், வடசேரி, மன்னார்குடி ஆகிய இடங்களைப் பார்வையிட்டு இறுதி செய்தனர். நீடாமங்கலம், நாச்சியார் கோவில், கும்பகோணம் ஆகிய பகுதிகளுக்குச் சென்று பரப்புரை நடைபெற உள்ள இடங்களைத் தேர்வு செய்தனர். அதன் பின் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள தஞ்சை மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் அவர்களின் உடல்நலம் குறித்து விசாரித்தனர். அவ்வமயம் பல்வேறு திராவிடர் இயக்க நிகழ்வுகள் குறித்து பகிர்ந்து கொண்டார். நாச்சியார் கோவில் தோழர் வெங்கடேசன் அவர்கள் தான் புதியதாக கட்டிய வீடு திறப்பு விழா மகிழ்வாக கழக ஏடான புரட்சி பெரியார் முழக்கம் இதழுக்கு ரூபாய் 5000/- த்தை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமியிடம் வழங்கினார்.
10.07.2026 அன்று காலை சிவகங்கை சென்று ஆசிரியர் புலவர் இளங்கோவை சந்தித்து 11.08.2026 அன்று சிவகங்கையில் பரப்புரை நடைபெற உள்ள பகுதியினைத் தேர்வு செய்து உறுதிபடுத்தினர். ஆசிரியர் இளங்கோ தேனீர் வழங்கி உபசரித்ததோடு, முன் ஏற்பாட்டு குழுவினர் வழி செலவிற்காக ரூபாய் 5000/- வழங்கினார். சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்களில் ஒருவரான சிவகங்கை ராமசந்திரன் அவர்கள் நினைவாக பேரறிஞர் அண்ணா அவர்களால் திறக்கப்பட்ட பூங்காவில் உள்ள இராமச்சந்தினார் சிலையைத் தோழர்கள் பார்வையிட்டனர்.
மதியம் மதுரையில் மாவட்டக் காப்பாளர் தளபதி அவர்களின் இல்லத்தில் மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி, மதுரை முருகேசன் ஆகியோரிடம் பரப்புரைச் செய்யும் இடம் மற்றும் தோழர்கள் தங்குமிடம் குறித்தும் கலந்து ஆலோசித்து இறுதி செய்யப்பட்டது. மூன்று நாட்கள் தோழர்களைச் சந்தித்து பரப்புரைப் பயணம் குறித்து ஆலோசனை மற்றும் தோழர்கள் தங்குமிடம், உணவு ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை வழங்கியதும் தோழர்கள் உற்சாகமாக பயணம் வெற்றி பெற பணியாற்ற உறுதியளித்ததும் பரப்புரைப் பயணம் – மாநாடு சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையில் தலைமைக் கழகக் குழுவினர் விடைபெற்றனர். மூன்று நாட்கள் நடைபெற்ற கலந்தாய்வில் தலைமைக் குழு உறுப்பினருடன் திருப்பூர் வடக்கு மாவட்ட அமைப்பாளர் அய்யப்பன் அவர்களும் உடன் இருந்தார்.
பெரியார் முழக்கம் இதழ் 23072026
