பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பட்டியல் இனத்தவரை நியமிக்க வேண்டும்!

இதுகுறித்து கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

சேலம், பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நிருவாகக்குழுவில் மாற்றங்கள் செய்ய அரசு தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிகிறோம். இவ்வேளையில் பெரியார் பல்கலைக்கழகச் சட்ட விதிகளின்படி பணிமூப்பில் முதல்நிலையிலுள்ள பேராசிரியர் ஒருவரைத் துணைவேந்தர் பொறுப்பில் நியமனம் செய்யலாம் என்ற விதிப்படி பணிமூப்பில் முதலாவதாகவுள்ள பட்டியலினப் பேராசிரியரைப் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்க வேண்டுகிறோம். பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட 25 ஆண்டுகளில் ஒரே ஒருமுறை மட்டுமே பட்டியலினப் பேராசிரியர் ஒருவர் துணைவேந்தராக இருந்துள்ளார். எனவே, இடைக்கால ஏற்பாடாக அரசு தற்போது துணைவேந்தர் பணிகளைக் கவனிக்க பட்டியலினப் பேராசிரியரைப் பொறுப்புத் துணைவேந்தராக நியமிக்க வேண்டும். அதுவே சமூகநீதியாகும்.

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நீடித்த ஒரே ஜாதியின் ஆதிக்கம் முடிந்து, துணைவேந்தர் நிருவாகக்குழு அமைக்கப்பட்டுக் கடந்த ஓராண்டாக நிருவாகக்குழு பல்வேறு பாராட்டத்தக்க சமூகநீதி சார்ந்த செயல்பாடுகளை முன்னெடுத்தது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை துறைத்தலைவர் மாற்றம், முனைவர் பட்ட ஆய்வு மாணவர் சேர்க்கையில் இட ஒதுக்கீடு, முனைவர் பட்ட ஆய்வேடு சமர்ப்பிப்பதிலிருந்த இடர்ப்பாடுகள் களைதல், அனைவருக்கும் நிருவாகப் பொறுப்புகள் என நிருவாகக்குழுவின் பணிகள் சிறப்பாகவே இருந்தன. இந்நிலையில் தற்போதுள்ள நிருவாகக்குழுவை அரசு மாற்ற உள்ளதாக அறிகிறோம். அதில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக பல்கலைக்கழகத்தில் ஆதிக்கம் செலுத்திய ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர்போன, ஆர்.எஸ்.எஸ். பின்புலம் கொண்ட பேராசிரியர் ஒருவர் அப்பதவிக்கு வர தீவிரம் காட்டி வருவதாக அறிகிறோம். அப்படியான முயற்சிக்கு உயர்கல்வித்துறை துணைபோகக் கூடாது. மேலும், அந்தச் சர்ச்சைக்குரிய பேராசிரியர் இந்தப் பதவியைக் குறிவைத்து நிருவாகத்திற்கு எதிராகப் பல்வேறு செயல்பாடுகளை நடத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. பதவியைக் குறிவைத்தே அவர் இப்படியான செயல்பாடுகளை முன்னெடுத்துள்ளாரோ என்ற சந்தேகம் வலுப்பெறுவதாகக் கூறப்படுகிறது. தற்போதுள்ள நிருவாகக்குழுவில் மாற்றம் செய்யும்போது இது போன்ற சர்ச்சைக்குரிய நபர்களுக்கு அரசு இடமளிக்கக்கூடாது.

மேலும், பல்கலைக்கழக விதிகளின்படி மூத்தப் பேராசிரியரைத் துணைவேந்தர் பொறுப்பாக நியமிக்க வேண்டும். அதற்கான நல்வாய்ப்பாகப் பல்கலைக்கழகத்தின் மூத்தப் பேராசிரியராகப் பட்டியலினப் பேராசிரியரே பணிமூப்பில் முதலிடத்தில் உள்ளார். அவர் நாடறிந்த அறிவியலாளராகவும், நிருவாகியாகவும் இருந்துள்ளார். எனவே, அரசு உடனடியாகப் பட்டியலினப் பேராசிரியரைப் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பில் நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

– கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
05.07.26
பெரியார் முழக்கம் இதழ் 09072026

You may also like...