பெரு முதலாளிகளின் கடன் தள்ளுபடியில் மோசடி
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.. வங்கிகள் மற்றும் நாட்டின் பெரு முதலாளிகளுக்கு வாராக் கடனை தள்ளுபடி செய்தது ரூ. 14 இலட்சம் கோடியா? ரூ.25 இலட்சம் கோடியா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.
கடந்த ஆகஸ்-7, 2023 நாடாளுமன்ற கூட்டத்தொடரில் திமுக எம்.பி கனிமொழி வாராக் கடன் குறித்து எழுப்பிய கேள்விக்கு நிதித்துறை இணையமைச்சர் பகவத் காரத் இவ்வாறு பதில் அளித்துள்ளார். 2014-ம் நிதியாண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை ரூ.14,56,226 வாராக் கடனை தள்ளுபடி செய்ததாக தெரிவித்தார். இந்த தகவலை ஒப்பிட்டு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வழியாக ரிசர்வ் வங்கிக்கு உண்மையில் வாராக் கடன் தள்ளுபடி எவ்வளவு? என்று குஜராத்தை சேர்ந்த சஞ்சய் என்பவர் மனு அளித்திருந்தார். ரிசர்வ் வங்கி கடந்த 9 ஆண்டுகளில் ரூ.25 இலட்சம் கோடி ரூபாய் வாராக் கடனை தள்ளுபடி செய்ததாக தெரிவித்திருந்தது.
ஆகவே நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தில் கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விக்கு அளித்த ரூ.14 இலட்சம் கோடி உண்மையா அல்லது ரிசர்வ் வங்கி தந்த பதிலில் ரூ.25 இலட்சம் கோடி உண்மையா? என்ற அதிர்ச்சி சந்தேகம் நாடு முழுவதும் எழுந்தது. இரண்டு தகவல்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏறக்குறைய 11 லட்சம் கோடி ரூபாய் கணக்கில் காட்டாமல் மறைக்கப்பட்டதாகவே தெரிகிறது. பெரும் முதலாளிகள் வாங்கிய வாராக் கடனை தள்ளுபடி செய்து ஏழை எளிய மக்களின் வயிற்றில் அடித்தவர் மோடி.
பெரியார் முழக்கம் இதழ் 16042026
