ஈழத்தமிழர்கள் குடியுரிமை மற்றும் கூட்டாட்சிக்கு திமுக குரல்!
திமுகவின் தேர்தல் அறிக்கையில் ஈழத்தமிழர்களின் கூட்டாட்சிக்கு குரல் கொடுப்போம் என்று வலியுறுத்தியுள்ளது. இலங்கைத் தமிழர்களின் அரசியல் சமூக உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது திமுக. இதற்காக ஆட்சியையே இழந்த வரலாறு திமுகவுக்கு உண்டு. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலையில் இருந்து தப்பி, தமிழ்நாட்டில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தங்கியுள்ள தமிழர்களுக்கு இருப்பிடம், கல்வி, மருத்துவம் போன்ற உதவிகளை மாநில அரசு வழங்கி வருகிறது. அகதிகள் முகாமை மறுவாழ்வு மையமாகப் பெயர் மாற்றம் செய்துள்ளது.
630 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 10,469 வீடுகள் கட்ட அனுமதியளிக்கப்பட்டு, இதுவரையில் 5,920 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு முகாம் வாழ்மக்களுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வீடுகளுக்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக திராவிட மாடல் 2.0 ஆட்சியில்…
2019–ஆம் ஆண்டு இந்திய அரசு கொண்டுவந்த குடியுரிமைத் திருத்தச் சட்டத்தின்படி, இலங்கைத் தமிழர்கள் குடியுரிமை கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்ற நிலைப்பாட்டைக் கைவிடுமாறு ஒன்றிய அரசை தி.மு.க. வலியுறுத்துகிறது. இலங்கைத் தமிழ் மக்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும்போது, அவர்களிடம் கடவுச்சீட்டு, நுழைவு அனுமதி போனறவற்றைக் கோராமல் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையைச் சான்றாதாரமாக ஏற்க ஒன்றிய அரசை தி.மு.க. கோருகிறது.
இலங்கைத் தமிழர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பிக்கவும் அதனைச் சரிபார்த்து மேல் நடவடிக்கை எடுத்திடவும் மாவட்ட அளவில் அதிகாரிகளை நியமிக்க தி.மு.க. கோருகிறது.
இந்தியாவில் குடிபெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களின் சட்டப்பூர்வ நிலையைத் தெளிவாகக் கூறிட ஒன்றிய அரசை தி.மு.க. வலியுறுத்துகிறது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கிட ஒன்றிய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தப்படும்.
இலங்கையில் கொண்டுவரப்படும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, இலங்கைத் தமிழர் உரிமைகளைப் பாதுகாத்திட உரிய தூதரக நடவடிக்கைகளை இந்திய அரசு உடனடியாக எடுக்க வேண்டும். பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மக்கள்தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள், தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவை தடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இலங்கைத் தமிழர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு முழு அங்கீகாரத்தினை இலங்கை அரசு வழங்க ஒன்றிய அரசு மூலமாக வலியுறுத்துவோம். மலையகத் தமிழர் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும் பாகுபாடின்மையையும் உறுதி செய்யும் ஒரு கூட்டாட்சி முறையை நிறுவ வலியுறுத்துவோம்.
– திமுக 2026 தேர்தல் அறிக்கையிலிருந்து..
பெரியார் முழக்கம் இதழ் 02042026
