ஆர்.எஸ்.எஸ்-க்கு அரசு மரியாதையா?

நூற்றாண்டு விழா கொண்டாடும் ஆர்.எஸ்.எஸ்-க்கு ஒன்றிய அரசு சார்பில் தபால் தலை மற்றும் நாணயத்தை வெளியிட்டு இருக்கிறார் பிரதமர் மோடி. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்த அவலத்திற்கு சரியான எதிர்வினை ஆற்றி இருக்கிறார். “தேசத் தந்தையைக் கொன்ற மதவாதிகளின் கனவுகளை செயல்படுத்தும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு, அரசு கவுரவம் வழங்குவது மிகப்பெரும் அவலம்”என்று முதலமைச்சர் தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார்.
ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தம் தான் காந்தியின் உயிரைப் பலி கேட்டது.
* மூன்று முறை தடை செய்யப்பட்ட அமைப்பு ஆர்.எஸ்.எஸ்

*’சுயம் சேவக்குகளாக ’பெண்களை’ நூறு ஆண்டுகளாக ஏற்க மறுக்கும் அமைப்பு.

*கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மோடி பிரதமராக தொடரக்கூடாது என்று ஆர்.எஸ்.எஸ் தலைமை விரும்பியது. கடவுளின் குழந்தை என்று மோடி தனக்கு தெய்வீக முலாம் பூசிக் கொண்டதை மோகன் பகவத் கடுமையாக எதிர்த்தார்.
“இனி எங்களுக்கு ஆர்எஸ்எஸ் ஆதரவு தேவையில்லை”என்று பாஜக தலைவர் நட்டா பேட்டி அளித்தார்.

பதவி பறிபோய் விடுமோ என்ற பதட்டத்தில் மோடி முதல் முறையாக நாக்பூர் ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் போனார். குடியரசு தின விழாவில் ஆர்.எஸ்.எஸ் தேச பக்தி இயக்கம் என்று பெருமை பேசினார். இப்போது அரசு மரியாதை செய்ய முன் வந்திருக்கிறார். தனது பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்துகிறார்.

ஆர்.எஸ்.எஸ், இப்போது தனது தலைமையகத்தை நாக்பூரில் இருந்து டெல்லிக்கு மாற்றி இருக்கிறது.

*கடந்த ஜனவரி 19-ஆம் தேதி புதிய அலுவலகத்தின் திறப்பு விழாவை‌ “பிரவிஷாட்சேவ்” Praveshotsav”என்ற பெயரில் நடத்தி இருக்கிறார்கள் ஆர்.எஸ்.எஸ்.

*‌ஆர்.எஸ்.எஸ் ” கொள்கைத் தந்தை”‌ கோல்வாக்கரின் பிறந்த நாளை இதற்கு தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.

கோல்வாக்கர் தந்த கொள்கை என்ன?
* “கடவுள் புருஷ சுக்தா வழியாக நான்கு வருணங்களை நமக்கு தந்திருக்கிறார். நமது கடவுளின் தலை பிராமணன்; கைகள் அரசன்; தொடையில் வைசியன்; காலில் சூத்திரன் இதுவே நமது இந்துக்களுக்கான கடவுள்”
ஆதாரம் : Bunch of thoughts’ நூல்

*தலையில் மூளையாக இருக்கும் “பிராமணன்” தான் இந்த சமூகத்தை இயக்கக் கூடியவன் என்பதே இதன் பொருள்.

*மனு தர்மம் தான் இந்துக்களுக்கான சட்டம் என்று கோல்வாக்கரும் சாவர்க்கரும் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்திருக்கிறார்கள் சரி; புதிய அலுவலக திறப்பு விழாவில் என்ன நடந்தது?

*டெல்லியில் புதிய அலுவலக திறப்பு விழாவில் பங்கேற்ற அமித்ஷா, ராஜ்நாத் சிங், ஜே.பி நட்டா பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்தனர். மேடையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மட்டுமே. அனுமதிக்கப்பட்டனர்.

*கார்ப்பரேட் கம்பெனிகளின் அலுவலகத்தையும் மிஞ்சி நிற்கிறது ஆர்.எஸ்.எஸ்-ன் ஆடம்பர மாளிகை; 5 லட்சம் சதுர அடியில் 12 அடுக்கு கட்டிடங்கள்; சொகுசு வீடுகள்; கூட்ட அரங்குகள்; மருத்துவ மையம்; கோயில்; 150 கிலோ வாட் சூரிய மின்சார உற்பத்தி நிலையம்; 200 கார்களை நிறுத்தும் வாகன வசதி என 150 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக எழுந்து நிற்கிறது இந்த மாளிகை. இந்த அனைத்து தகவல்களும் வீடியோ காட்சி வழியாக பத்திரிகையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. ஆர்.எஸ்.எஸ் என்றாலே எளிமையின் சின்னம் என்ற பிம்பம் இடிந்து நொறுங்கியுள்ளது.

* “ஆடம்பர மாளிகைக்கு நாம் வந்தாலும் நம்முடைய கொள்கைகள் மாறாது” என்று பேசி இருக்கிறார் மோகன் பகவத்.

“ஆம், உண்மைதான்! இந்த விழா நிகழ்ச்சியில் ஆண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளனர்; பெண்களை அவமதிக்கும் கொள்கையை உறுதியாக பின்பற்றி இருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

*மற்றொரு முக்கிய செய்தியையும் குறிப்பிட வேண்டும் கடந்த 100 ஆண்டுகளாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எந்த ஒரு சட்டத்தின் கீழும் பதிவு செய்யப்படவில்லை; எந்த ஒரு வரி விதிப்பும் இந்த அமைப்பை நெருங்க முடியாது; திரட்டப்படும் நன்கொடைகளை அறிவிக்க வேண்டிய தேவை இல்லை; எந்த ஒரு ஆடிட்டும் சொத்துகளுக்கும் வருமானத்துக்கும் கிடையவே கிடையாது.

*இந்த “பாரதீய தேசபக்த” சேவைக்குத்தான் தபால் தலையும் நாணயமும்!.

மக்களைப் பிளவுபடுத்தும் மதவாத ஆபத்திலிருந்து இந்தியாவைக் காப்போம் என்ற எச்சரிக்கைக் குரலை தமிழ்நாடு முதலமைச்சர் கொடுத்திருக்கிறார்.

விடுதலை இராசேந்திரன்
பொதுச்செயலாளர் திவிக
02.10.2025

You may also like...