பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு இராமதாஸ் கண்டனம்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை: சமூக அநீதிக்கும், மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக தந்தை பெரியார் நடத்திய போராட்டங்கள் மற்றும் அவற்றின் பயனாக ஏற்பட்ட சமூக மாற்றங்கள் ஆகியவற்றை தொகுத்து ‘பெரியாரின் போர்க்களங்கள்’ என்ற தலைப்பில் நூல் வெளியிட்டதற்காக இரா.சுப்பிரமணி என்ற பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்க சேலம் பெரியார் பல்கலைக்கழக நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அவர், இதழியல் துறை இணைப் பேராசிரியராகவும், பெரியார் இருக்கையின் பொறுப்பு இயக்குநராகவும் உள்ளார்.

மக்கள் நலன் மற்றும் சமத்துவத்தை ஏற்படுத்தவே பெரியாரின் போராட்ட வரலாறுகளை தொகுத்திருக்கிறார். அதை பாராட்டுவதற்கு மாறாக அவரை பழிவாங்க பல்கலைக்கழக நிர்வாகம் துடிப்பது தவறு. இது தந்தை பெரியாருக்கு எதிரானது. பெரியார் பெயரிலான பல்கலை நிர்வாகிகளாக இருந்து கொண்டு, பெரியாருக்கு எதிராக செயல்படும் இவர்கள் யாருடையாக கருவிகளாக இருப்பார்கள் என்ற ஐயம் எழுகிறது. எனவே பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அந்த பல்கலைக்கழகத்திற்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்.

பெரியார் முழக்கம் 14.12.2023 இதழ்

You may also like...