அரசாங்க (கேபிநட்) மெம்பர்கள் கவனிப்பார்களா?

 

சென்னை அரசாங்கத்தில் உத்தியோகஸ்தர்களை அமைக்கும் பொறுப்பும் அதிகாரமும் சென்னை அரசாங்க கவர்னர் பிரபுவைச் சேர்ந்தது என்று சொல்லப்படுமானாலும் அவை பெரிதும் கவர்னர் பிரபுவின் ஆலோசனைச் சபை அங்கத்தினர்களான போலீஸ், லா, ரிவினியூ ஆகிய இலாக்கா தலைவர்களுக்கே நேரிட்ட பொறுப்பும், மேல் பார்வையும், அதிகாரமும் இருந்து வருகின்றன.

மந்திரிமார்களோ உத்தியோக நியமன விஷயங்களில் யாதொரு அதிகாரமும் இல்லாமலே இருந்து வருகிறார்கள். மந்திரிமார்கள் கையில் உள்ள உத்தியோகங்களோ மிகச் சிலவேயாகும். அதுவும் ஸ்தல ஸ்தாபன இலாக்கா சம்மந்தப்பட்ட வரையில்தான் அவர்களது அதிகாரம் செல்லலாம். எனினும் இந்த இலாக்காவிற்கும் செக்ரட்டரிகள் என்னும் ஐரோப்பியர்களும், பார்ப்பனர்களும் குறுக்கிட்டு, அவற்றை மந்திரிகள் இஷ்ட்டப்படி நடை பெறாமல் செய்யவும் இடம் வைக்கப்பட்டிருக்கின்றபடியால் அந்த அதிகாரமும் பலனற்றது என்றே சொல்ல வேண்டும்.

மற்றபடி போலீஸ்லாரிவின்யூ இலாக்காக்களுக்கு முன்னைய மந்திரிசபையின் பயனாய் ஒரு அளவுக்கு பல வகுப்புகளையும் கவனித்து நியமனம் செய்யும்படியான வகுப்புவாரி முறை புகுத்தப்பட்டிருந்தும் மேற்படி இலாக்காத் தலைவர்களின் லட்சியக் குறைவால் அம்முறையாலும் தக்க பயன் ஏற்படாமல் பழயபடியே அரசியல் உத்தியோகம் ஒரு வகுப்பாரின் கைக்கே அதாவது பார்ப்பனர் கைக்கே போகும்படியாய் இருந்து வருகின்றது.

இதை நாம் துவேஷத்தின் மீதோ, பொறாமையின் மீதோ சொல்ல வரவில்லை. உண்மை நிலையைக் கண்டு புள்ளி விபரங்களைக் காட்டியே சொல்லுகிறோம்.

அன்றியும் சுமார் ஒரு நூறு ஆண்டுக்கு முன்பாகவே ஒரு பிரஞ்சு பாதிரியாகிய ஆபேடூபாய் என்பவர் இந்திய அரசாங்க உத்தியோகத்தைப் பற்றியும், பார்ப்பனர்களின் யோக்கியதையைப் பற்றியும் கூறி இருப்பதைப் பார்த்தால் இன்றைய நிலைமையைப் பற்றி நாம் எடுத்துச் சொல்வதை எவரும் துவேஷம் என்று சொல்லிவிட முடியாது.

அவர் குறிப்பிடுவதாவது@

“”பார்ப்பனர்களை நம்புவது ஆபத்து”

“”இந்தியாவைத் தற்பொழுது ஆண்டு வரும் ஐரோப்பியர்களை பார்ப்பனர்கள் வெகு சாமர்த்தியமாக தம் வசப்படுத்திக் கொண்டார்கள். பல ஜில்லாக்களிலுமுள்ள சர்க்கார் உத்தியோகங்களில் உயர்ந்தவைகளையும், அதிக வருமானம் வரக் கூடியவைகளையும், நீதி இலாக்காக்களையும், மற்றும் சகல பதவிகளையும், பார்ப்பனர்களே கைப்பற்றி இருக்கிறார்கள். உண்மையில் சர்க்கார் உத்தியோகங்கள் எதுவும் அவர்கள் இல்லாவிட்டால் நடவாது என்கின்ற தன்மையை உண்டாக்கிக் கொண்டார்கள்”.

“”மேலும்  சப் கலக்டர்களாகவும், குமாஸ்தாக்களாகவும், மொழி பெயர்ப்பாளர்களாகவும், கஜான்சிகளாகவும் மற்ற சிப்பந்திகளாகவும் பெரும்பாலும் பார்ப்பனர்கள் நிரம்பி இருக்கிறார்கள். இவர்கள் உதவியில்லாமல் எதையும் செய்வது கஷ்டமான காரியமாக அவர்கள் சாமர்த்தியத்தால் செய்து கொண்டார்கள்.”

“”மேலும் இந்நாட்டு மக்களின் அபிப்பிராயத்தையும் அதைத் திருப்புவதற்குள்ள வழிகளையும் பார்ப்பனர்கள் நன்கறிந்திருப்பதும் பிறப்பினால் பார்ப்பனர்களுக்கேற்பட்ட உயரிய அந்தஸ்தும் பார்ப்பனர் களுக்கு எளிதில் உத்தியோகங்களைக் கைப்பற்றிக் கொள்ளுவதற்கு அனுகூலமாக இருந்து வருகின்றது.”

“”மற்ற ஜாதியார் பார்ப்பனர்களுக்கு மதிப்பையும், கவுரவத்தையும் கொடுப்பதனால் இவர்களை உத்தியோகத்துக்கு நியமிப்பதால் அரசாங்கக் காரியம் பெருமையாக நடக்கும் என்ற அபிப்பிராயம் ஏற்பட இடமுண்டாயிற்று.”

“”இப்பார்ப்பனர்களின் தன்மையை ஊன்றிக் கவனிக்காமல் அவர்கள் மீது பூரண நம்பிக்கை வைப்பதால் ஐரோப்பியர்கள் இடர்ப்படப் போகிறார்கள் என்பதில் அய்யம் இல்லை. இவ்வளவு தூரம் பார்ப்பனர் களுக்கு ஐரோப்பியர்கள் இடம் கொடுப்பதால் தங்கள் உத்தியோகங்களுக்கு ஆபத்துத் தேடிக் கொண்டவர்களாகி தாங்கள் உத்தியோகங்களை இழக்கக்கூடிய நிலைமைக்கு வரப் போகின்றார்கள்.”

(என்று 1816 ம் வருஷத்திலேயே பிரஞ்சு பாதிரியாரான ஆபேடூபாய் எழுதி இருக்கிறார்கள். இது ஆலயப் பிரவேச உரிமை 8ம் அத்தியாயம் 52வது பக்கம்)

இவை போதாமல் சர்.சி.பி. ராமசாமி ஐயர் அவர்கள் 6, 7 வருஷங் களுக்கு முன் லா மெம்பராகவும், போலீஸ் மெம்பராகவும் இருந்த காலத்தில் அந்த இரண்டு இலாக்காவையும் பரிசுத்தமான அக்கிரகாரமாகவே ஆக்கி விட்டுப் போனார். ரிவினியூ இலாக்காவில் ஐரோப்பியர் இருந்து வந்தும் அந்த இலாக்கா முக்காலே மூன்று வீசம் அக்கிரகாரமாகவே ஆக்கப்பட்டு வந்திருக்கிறது. இதற்குக் காரணம் பெரிதும் செக்கரடரியேட்டில் உள்ள பார்ப்பன ஆதிக்கமும் சூட்சியும் என்று சொல்லப்பட்டாலும் மந்திரிமார்கள் எவரும் இதை பற்றிக் கவனிக்காத குற்றம் ஒரு அளவுக்குக் காரணம் என்று சொல்லாமல் இருக்க முடியவில்லை.

ஆறு ஏழு வருஷ காலம் சர். கிருஷ்ணன் நாயர் லா மெம்பராய் இருந்தார். ஏழு எட்டு வருஷ காலம் சர். மகமத் உஸ்மான் சாயபு அவர்கள் போலீஸ் மெம்பராகவும், ஹோம் மெம்பராகவும் இருந்தார். இவர்கள் சர்.பி.சி. ராமசாமி ஐயர் கட்டிவிட்டுப் போன அக்கிரகாரக் கோட்டை அஸ்திவாரத்தை கடுகளவிலாவது அசைத்தார்கள் என்று சொல்லுவதற்கு யோக்கியதை இல்லாமலே ஆள் ஒன்றுக்கு 3 லட்சம்  5 லட்சம் என்பதாக ரூபாய்களை சேர்த்துக் கொண்டு வீடு போய்ச் சேர்ந்தார்கள்.

லா மெம்பர்

சர்.கே.வி. ரெட்டி நாயுடு லா மெம்பராகி ஒரு வருஷத்திற்கு மேலாகின்றது. போகிற இடங்களில் எல்லாம் வகுப்பு, நீதி, ராஜ பக்தி ஆகியவைகளைப் பற்றி பேசுவதில் சிறிதும் குறைவில்லை. ஆனால் இந்த ஒரு வருஷ காலத்தில் நீதி இலாக்காவில் எங்கும் அக்கிரகாரமயமாய் இருப்பதை மாற்ற ஒரு கடுகளவு முயற்சியாவது எடுத்ததாகத் தெரியவில்லை.

முன்பெல்லாம் சப் ஜட்ஜிகளாகவும், ஜில்லா ஜட்ஜிகளாகவும், ஹைகோர்ட்டு ஜட்ஜிகளாகவும் வக்கீல் கூட்டங்கள் இருந்து நேரடியாக நினைத்தபடி பார்ப்பனர்களே நியமிக்கப்படவில்லையா?

மாதம் 200, 300 ரூபாய்கள் கூட வரும்படி இல்லாத வக்கீல்கள் பார்ப்பனர் என்கின்ற காரணத்தைத் தவிர வேறு எவ்வித யோக்கியதையும் இல்லாமல் இருந்தும் ஜில்லா ஜட்ஜாகி இன்று ஹைகோர்ட் ஜட்ஜாக ஆக்கப்பட்டு விடவில்லையா?

இன்று லா டிபார்ட்மெண்டில் நீதி இலக்காவில் ஜில்லா ஜட்ஜுக்கள் இந்துக்கள் 18 பேர்களில் 11 பேர்கள் பார்ப்பனர்கள், 4 மலையாளிகள், 3 பார்ப்பனரல்லாத தமிழர்களே இருப்பதும்,

சப் ஜட்ஜுகள், இந்துக்கள் 66 பேர்களில் 51 பார்ப்பனர்களும், 11 மலையாளிகளும் 4 பேர்களே பார்ப்பனரல்லாத தமிழ் மக்களாக  இருப்பதுவும்,

169 இந்து முனிசீப்புகளில் 115 பார்ப்பனர்கள் 17 மலையாளிகள் போக 37 பேர்களே தான் பார்ப்பனரல்லாத தமிழ் மக்களாய் இருப்பதுவும் பார்த்தால்,

வகுப்பு நீதிக்காக உத்தியோகம் பார்க்கும் மெம்பர் வெட்கப்பட வேண்டிய காரியமா அல்லவா என்று கேட்கின்றோம்.

லா மெம்பர் தோழர் சர் கே.வி. ரெட்டி நாயுடு அவர்கள் 5 வருஷம் மந்திரியாகவும், 3 வருஷம் சவுத் ஆப்பிரிக்கா ஏஜண்டாகவும் மற்றும் இப்போது இன்னும் 2, 3 வருஷங்களுக்கு மாதம் 533354 சம்பளம் வாங்கும் லா மெம்பராகவும் இருந்தும் இவரால் இந்த சமூகம் அடைந்திருக்கும் நிலைமை இதுவானால் “”பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று சொல்லப்படுவதானது அச்சமூகத்தில் ஏதோ இரண்டொருவர் தொப்பை நிரப்புவதற்குத் தான் பயன்படுத்தப்படுகிறது” என்று சொல்லு பவர்களின் கூற்றை எப்படி மறுக்க முடியும் என்று கேட்கின்றோம்.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் சமீப காலத்தில் நடந்த இந்திய சட்டசபைத் தேர்தல்களில் பார்ப்பனரல்லாத வக்கீல்கள் 100க்கு 97 பேர்கள் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவே (காங்கிரசுக்கே) வேலை செய்தார்கள் என்பதை எவரும் மறுக்க முடியாது.

பார்ப்பனர்களின் உள் எண்ணமும் காங்கிரசின் சூட்சித் தன்மையும் நாணயக் குறைவான தன்மையும் பார்ப்பனர்களுக்கு வேலை செய்த பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்குத் தெரியாது என்று யாரும் சொல்லிவிட முடியாது. அந்தப்படி யாராவது சொன்னால் அது பார்ப்பனரல்லாத வக்கீல்களை மூடர்கள் என்று சொல்வதற்கு ஒப்பாகும். மற்றப்படி இவர்கள் ஏன் பார்ப்பனர்களுக்குக் கூலிகளாக இருந்தார்கள் என்பதற்கு நாம் காரணம் சொல்ல வேண்டியதில்லை.

எனவே, லா மெம்பர் பார்ப்பனரல்லாத கட்சியின் நன்மையைக் கருதினவர் என்று சொல்லப்படுமானால் இந்த சர்வ வல்லமை உள்ள நீதி இலாக்காவில் பார்ப்பனரல்லாதார்களுக்கு நீதி வழங்கினால் ஒழிய மற்றபடி எப்படி அந்த வார்த்தை உண்மையாகும் என்று கேட்கின்றோம்.

ஆகவே கனம் லா மெம்பர் அவர்கள், குறைந்தது ஒரு 50 சப் ஜட்ஜ்களையும் 10 ஜில்லா ஜட்ஜிகளையுமாவது நேரே தெரிந்தெடுக்கும் படியான ஒரு சட்டத்தைச் செய்து பார்ப்பனரல்லாத வக்கீல்களுக்கு சுதந்திர புத்தியை உபயோகிக்க இடம் கொடுக்காத வரையில் அடுத்த பொதுத் தேர்தலின் தோல்விக்கு கனம் லா மெம்பர் சர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களே முக்கிய காரணஸ்தராகி விடுவார் என்பதை இப்பொழுதே எச்சரிக்கை செய்து விடுகிறோம்.

போலீஸ் மெம்பர்

அது போலவே போலீஸ் மெம்பர் கனம் பன்னீர்ச்செல்வம் அவர்கள் போலீஸ் மெம்பர் ஆனதும் அனேக தோழர்கள் அவர் அந்த இலாக்காவில் ஏதோ பிரமாதமாய் சாதித்து விடுவார் என்று எதிர்பார்த்தார்கள்.

ஏனெனில் அவர் தஞ்சை ஜில்லா போர்ட் பிரசிடெண்டாய் இருந்த காலத்தில் வேறு எந்தப் பிரசிடெண்டும் செய்ய முடியாத அவ்வளவு பெரிய காரியங்களில் பார்ப்பனரல்லாதார்களுக்கு நீதி செய்திருக்கிறார். தஞ்சை ஜில்லா பார்ப்பன ஆதிக்கம் உள்ளது என்பதோடு அநேக தர்ம சொத்துக் களைப் பார்ப்பனர்களே ஏகபோகமாய் வெகுகாலமாக அனுபவித்து வந்ததுமாகும். அச்சில்லா இந்த மாகாணப் பார்ப்பனர்களுக்கே ஒரு கோட்டையாகவும் இருந்தது. அப்படிப்பட்ட ஜில்லாவில் கனம் செல்வம் அவர்கள் பெரிய மாறுதல்கள் செய்து ஒரு அளவுக்கு பார்ப்பனரல்லாதாருக்கு மனிதத் தன்மையை உண்டாக்கினார். இதை யாரும் மறுக்க முடியாது.

சுயமரியாதை இயக்கம் கிறிஸ்துவ மதத்தைப் பற்றிப் பேசாதிருந்த வரையில் அச்சங்கத்துக்கு உபதலைவராகவும் இருந்தார். இவைகளை யெல்லாம் உத்தேசித்தே அவர் போலீஸ் இலாக்காத் தலைவர் ஆனவுடன் ரொம்ப காரியம் செய்து விடுவார் என்று கருதினார்கள். ஆனால் அவர் வந்து சுமார் 10 மாத காலமாகியும் இனி கொஞ்சகாலமே ஆயுள் இருப்பதை உணர்ந்தும் போலீஸ் இலாக்கா பலமான ஒரு அக்கிரகாரமாகவே  மேலும் மேலும் ஆகிக்கொண்டு வருவதைத்தான் பார்க்க முடிகின்றதே ஒழிய சிறிதாவது ஞாயத்துக்கு ஒத்து இருக்கிறது என்று சொல்லுவதற்கே இடம் ஏற்படவில்லை.

வரவர “”ஒட்டக் கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாட்பாள்” என்பதுபோல அதாவது ஒரு ஊரில் டிப்டி சூப்ரண்ட் பார்ப்பனர், இன்ஸ்பெக்டர் பார்ப்பனர், சப் இன்ஸ்பெக்டர் பார்ப்பனர் என்பதாகி மும்மூர்த்திகளும் அவர்களாகவே ஆகிக்கொண்டு வருகிறார்கள். இன்ஸ்பெக்டர் சப் இன்ஸ்பெக்டர்கள் உத்தியோகம் சிறிதேயாயினும் அவர்களுக்கு இந்த வகுப்புணர்ச்சி ஏற்பட்டு விட்டால் அவர்களால் எவ்வளவு விஷமங்கள் செய்யக் கூடும் என்பதை நினைத்துப் பார்த்தால் எவருக்கும் அதன் தொல்லைகள் நன்றாய் விளங்கும்.

இந்த இலாக்கா ஒரு சாயபு இடம், அதுவும் வேறு எவ்வித யோக்கியதையும் முக்கியமாய் இல்லாமல் பார்ப்பனரல்லாதார் கட்சியைச் சேர்ந்தவர் என்கின்ற ஒரு யோக்கியதையை முன்னிட்டே அடைந்த ஒரு சாயபு இடம் 6, 7 வருஷ காலம் இருந்து வந்தும் இன்று இவ்வளவு மோசமான யோக்கியதையில் அந்த இலாக்கா இருக்குமானால் அக்கட்சி உருப்படாததற்கு இவர்கள் போன்றவர்கள்தான் காரணம் என்று சொல்லப்படுவதை எப்படி மறுக்க முடியும் என்றும் கேட்கின்றோம்.

பொது ஜனங்கள் மாத்திரம் அல்லாமல் சர்க்காராரும் ஜஸ்டிஸ் கட்சி ஒரு கட்டுப்பாடில்லாத (டீமாரலைஸ்) கட்சி என்று சொல்ல வேண்டிய நிலைக்கு வந்ததற்குக் காரணமும் இந்தக் கனம் மெம்பர்களேயாவர்கள்.

பார்ப்பனர்கள் ஒரு சிறிய உத்தியோகத்தில் இருந்தாலும் ஊசி விரியன் பாம்பு போல் தங்கள் விஷத்தைப் பரப்பி, காரியத்தை சாதித்துத் தங்கள் கக்ஷியை பலப்படுத்திக் கொள்ளுகிறார்கள். பார்ப்பனரல்லாதவர் களோ மலைப் பாம்புகள் போல் இரை பொருக்க மாத்திரம்தான் கவலையே ஒழிய எதிரிகளைப் பற்றிய காரியத்தில் கவலையே கிடையாது.

அவர்கள்  வயிறு நன்றாக நிரம்பிவிட்டபடியால் மற்றவர்கள் பசியைப் பற்றி கவலையே இல்லாமல் அஜீரணத்தோடு வீடு போய்ச் சேர்ந்து விடுகிறார்கள்.

தோழர் கனம் பன்னீர்ச்செல்வத்தின் காரியம் அப்படி இருக்காது என்றும் எதாவது செய்வார் என்றும் பார்ப்பனரல்லாதாரில் அவருடைய எதிரிகள் கூட நினைத்தார்கள். இப்படி ஆகிவிட்டது வருந்தத்தக்கதாகும்.

ரிவின்யூ மெம்பர்

ரிவினியூ மெம்பர் என்று சொல்லப்படும் ஐரோப்பிய மெம்பர்களோ ராஜதந்திர முறைப்படி தங்கள் காரியம் தவிர அதாவது சர்க்காருக்கு எவ்வித கஷ்டமும் அசௌகரியமும் இல்லாமல் எப்படி நடக்க வேண்டுமோ? அதைத் தவிர மற்றபடி ஜனங்களின் கஷ்ட நிலைமை அவர்களுக்கு முக்கிய லட்சியமாக இருப்பதில்லை.

உதாரணமாக ஐ.சி.எஸ். கலக்டர்கள் உத்தியோகம் 57 இந்துக்கள் பார்ப்பதில் 40 பார்ப்பனர்களும், 10 மலையாளிகளும் போக ஏழே 7 பேர்கள் தான் பார்ப்பனரல்லாத தமிழ் மக்கள் பார்க்கிறார்கள்.

அது போலவே டிப்டி கலக்டர்களிலும் 81 உத்தியோகங்கள் இந்துக்கள் பார்க்கிறார்கள் என்றால் அவற்றில் 45 பேர்கள் பார்ப்பனர்களாகவும், 9 பேர்கள் மலையாளிகளாகவும், போக 27 பேர்களேதான் பார்ப்பனரல்லாத தமிழர்களாக இருக்கிறார்கள். மற்றும் இந்த இரண்டு உத்தியோகமும் பொது ஜனங்கள் மீது எவ்வளவு ஆதிக்கத்தை உண்டாக்கிக் கொள்ள முடியும் என்பதை நாம் விளக்க வேண்டியதில்லை.

இந்தப்படி ரிவினியூ இலாக்கா தலைமை ஸ்தானங்களில் பார்ப்பனர்கள் இருப்பார்கள். ஆனால், அந்த இலாக்காவில் பார்ப்பன ஆதிக்கம் இல்லாமல் வேறு என்ன இருக்க முடியும்? கணக்குப்பிள்ளை, மணியக்காரர்கள் எந்த ஜாதியாராலும் பார்ப்பனருக்கு ஓட்டு வாங்கிக்கொடுப்பார்கள்.

ஆகவே இந்த மூன்று மெம்பர்களும் பார்ப்பனரல்லாதார் கட்சி யுடையவும் கிளர்ச்சியினுடையவும் ஆதரவிலும் ஆமோதிப்பிலும் இருந்து கொண்டு அந்த சமூக விஷயத்தில் இவ்வளவு அலட்சிய புத்தியுடன் இருந்தால் இந்நாட்டில் ஜஸ்டிஸுக்கும், நீதிக்கும், சுதந்திரத்துக்கும் எப்படி இடமேற்படும்.

மத விஷயத்தில் பார்ப்பன ஆதிக்கத்தில் இருந்து விலக வேண்டும் என்று “”ஊசி மேல்” நின்று தவஞ்செய்யும் இந்தியாவானது பிரிட்டிஷ் ஆட்சி ஏற்பட்ட பிறகுகூட அரசியல் விஷயத்திலும் பார்ப்பன ஆதிக்கத்துக்கு அடிமையாகும்படியாக ஏற்பட்டால் மக்களுக்கு எவ்வளவு பெரிய ஏமாற்றம் என்பதை இந்த மெம்பர்களே யோசித்துப் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறோம்.

ஆகவே கனம் ரிவினியூ மெம்பர் குறைந்தது ஒரு 50 பேர்களையாவது பார்ப்பனரல்லாதாரிலிருந்தே நேராக டிப்டிக் கலெக்டர்களாகவும், 100 பேர்களாவது தாசீல்தார்களாகவும் தெரிந்தெடுத்து தற்சமயம் உள்ள குறைகளையாவது உடனே சரிப்படுத்த வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறோம்.

நிற்க, மூன்று மெம்பர்களும் ஒன்று சேர்ந்து அவரவர்கள் இலாகா உத்தியோகங்களுக்கு ஒரு ஜாப்தா தயாரித்து ஒவ்வொரு டிவிஷனிலும் தலைநகரங்களிலும் எல்லா உத்தியோகமும் ஒரே வகுப்பாய் இல்லாமல், உதாரணமாக டிப்டி கலக்டர் பார்ப்பனராய் இருந்தால் தாசீல், மேஜிஸ்ட்ரேட் ஆகிய வேலைகளில் பார்ப்பனரல்லாதாராயும், பார்ப்பனர் போலீஸ் டிப்டி சூப்ரண்டாய் இருந்தால் இன்ஸ்பெக்டர்கள், சப் இன்ஸ்பெக்டர்கள் பார்ப்பரனல்லாதாராகவும் மற்ற இலாக்காவும் இதுபோல் கலந்து இருக்கும்படியும், வகுப்பு எண்ணிக்கையை அனுசரித்தும் சரியானபடி பிரதிநிதித்துவம் இருக்கும்படி செய்ய வேண்டியது அவசரமானதும் முக்கியமானதுமான கடமையாகும்.

பல ஊர்களில் இருந்து வரும் உத்தியோகஸ்தர்கள் எண்ணிக்கை விவர ஜாப்தாக்களில் நமக்கு வந்திருக்கும் கணக்குகளைப் பார்த்தால் சரீரத்தால் பாடுபடுகின்ற உத்தியோகங்கள் போக பாக்கி எழுத்து வேலை, மூளை வேலை முதலிய ஜனங்களிடம் செல்வாக்குப் பெறும் உத்தியோகங் களில் 100க்கு 25 கூட பார்ப்பனரல்லாதார்களுக்கு இல்லை என்று சொல்லும்படியான நிலையில் இருக்கின்றன. இதைக் கவனித்துப் பார்த்தால் பிரிட்டிஷ் உத்தியோகஸ்தர்கள் பார்ப்பனரல்லாதாருக்கு மூளை இல்லை என்றோ அல்லது பார்ப்பனரல்லாதாரை நம்பக் கூடாதென்றோ கருதி இருக்கிறார்களா என்ன என்றுதான் கேட்க வேண்டி இருக்கிறது.

பார்ப்பனரல்லாத சில பெரிய பதவிக்காரர்களும் பெரிய உத்தியோகஸ்தர்களும் அவர்கள் சமூகத்துக்கு விஸ்வாசமில்லாத துரோகிகளாய் ஆகிவிட்டார்கள் என்று வேண்டுமானால் சொல்லலாமே ஒழிய மூளை இல்லை என்று நம்புவதற்கு இல்லை என்றும் ஒழுக்கமில்லை என்றும் சொல்லும்படி பார்ப்பனர்களைவிட அதிகமாக இதுவரை எவரும் நடந்து கொள்ளவில்லை.

அரசாங்கத்தாரும் மெம்பர்களும் இதைக் கவனித்து தக்கது செய்ய வில்லையானால் பார்ப்பனரல்லாதார் இயக்கம் வேறு வழியில் திரும்ப வேண்டி வரும் என்பதை எச்சரிக்கை செய்கின்றோம்.

மந்திரிமார்களும் இதை கவனித்து தக்கது செய்யக் கடமைப் பட்டிருக்கிறார்கள் என்பதை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

குடி அரசு  தலையங்கம்  19.05.1935

You may also like...