சந்தேகக் கேள்விகள்

 

சரியான விடைகள்

சித்திரபுத்திரன்

வினா:  கிறிஸ்தவனாகப் போவதில் என்ன கெடுதி?

விடை:  ஒரு கெடுதியும் இல்லை; ஆனால் மதத்தின் பெயரால் குடிக்காதே.

வினா:  மகம்மதியனாவதில் என்ன கெடுதி?

விடை: ஒரு கெடுதியும் இல்லை; ஆனால் பெண்களுக்கு மூடி போடாதே.

வினா:  உண்மையான கற்பு எது?

விடை:  தனக்கு இஷ்டப்பட்டவனிடம் இணங்கியிருப்பதே உண்மையான கற்பு.

வினா:  போலிக் கற்பு என்றால் என்ன?

விடை: ஊராருக்கோ, சாமிக்கோ, நரகத்திற்கோ, அடிக்கோ, உதைக்கோ, பணத்திற்கோ பயந்து மனதிற்குப் பிடித்தமில்லாதவனுடன் தனக்கு இஷ்டமில்லாத போது இணங்கியிருப்பதே போலிக் கற்பு.

வினா:  மதம் என்றால் என்ன?

விடை: இயற்கையுடன் போராடுவதும் அதைக் கட்டுப்படுத்து வதுந்தான் மதம்.

வினா:  பண்டிகை நாட்களில் உத்தியோகஸ்தர்களுக்கும், தொழிலாளர் களுக்கும் ஏன் “”லீவ்” கொடுக்கப்படுகிறது?

விடை:  பாடுபட்டுச் சம்பாதிக்கும் பணத்தில் மீதி வைக்காமல் பாழாக்கிவிடவேண்டும் என்பதற்காகத்தான்.

வினா:  பெண்களைப் படிக்கக்கூடாதென்று ஏன் கட்டுப்படுத்தினார்கள்?

விடை: அவர்களுக்கு அறிவு இல்லை; சாமர்த்தியமில்லை  என்று சொல்லிச்  சுதந்தரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகவே.

வினா :  ஒரு மனிதனுக்குக் கவலையும் பொறுப்பும் குறைய வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

விடை:  பெண் அடிமையை ஒழித்து அவர்களுக்குக் கல்வியறிவும், முழுச்  சுதந்தரமும் கொடுத்துவிட்டால் ஆண்களுக்கு அனேக தொல்லைகள் ஒழியும்.

வினா:  பெண்களுக்கு வேலை நேரம் மீதியாக  வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

விடை:  தலை மயிரை வெட்டிவிட்டால் அதிக நேரம் மீதியாகும்.

வினா:  பெண்கள் கைக்கு ஓய்வு கொடுக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?

விடை:  அவர்களுக்கு ஒரு குப்பாயம் (மேல் சட்டை) போட்டு விட்டால் கைக்கு ஓய்வு கிடைத்துவிடும்.  (இல்லாவிட்டால் அடிக்கடி மார்புச் சீலையை இழுத்து இழுத்துப் போடுவதே வேலையாகும்.)

வினா:  பெரிய மூடன் யார்?

விடை:  தனது புத்திக்கும் பிரத்தியட்ச அனுபவத்துக்கும் தோன்றுவதை நம்பாமல், எவனோ ஒருவன் எப்போதோ சொன்னதை நம்பி வாழ்வை நடத்துபவன் பெரிய மூடன்.

வினா:  ஒழுக்கம் என்பது என்ன?

விடை:  ஒழுக்கம் என்பது தனக்கும் அன்னியனுக்கும் துன்பம் தராமல் நடந்துகொள்ளுவதாகும்.

வினா:  சமயக்கட்டுப்பாடு, ஜாதிக்கட்டுப்பாடு என்றால் என்ன?

விடை:  மனிதனைத் தன் மனச்சாட்சிப்படியும், உண்மைப்படியும் நேராய் நடக்கவிடாமல் கட்டுப்படுத்துவதுதான் ஜாதி, சமயக் கட்டுப்பாடுகள்.

வினா:  உண்மையான கடவுள் நம்பிக்கை என்றால் என்ன?

விடை:  கடவுள் எங்கு மறைந்து போவாரோ என்று பயந்து, அவரைக் காக்கப் பிரயத்தினம் செய்வதுதான் உண்மையான கடவுள் நம்பிக்கையாகக் காணப்படுகிறது.

வினா:  ஜனநாயக ஆட்சி யென்றால் என்ன?

விடை:  தடியெடுத்தவன் எல்லாம் தண்டக்காரன் என்பதுதான் ஜனநாயக ஆட்சி.

வினா:  இந்தியாவில் நல்ல திடகாத்திரம் உள்ள ஜனசங்கியை பெருகவேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?

விடை:  சிறு பெண்களுக்கு மணம் செய்வதையும், அதிகமாகப்  பிள்ளை பெறுவதையும் நிறுத்தி விதவைகளுக்கு மறுமணம் செய்தால் நல்ல திடகாத்திரம் உள்ள ஜன சங்கியை பெருகும்.

வினா:  இந்தியா சீர்பட என்ன வேண்டும்?

விடை:  இந்தியா சீர்பட்டு, இந்தியர்களும் மனிதர்கள் என்று உலகத்தோர் முன்னிலையில் சிறந்து நிற்க வேண்டுமானால் நாஸ்திகமும், நிபந்தனையற்ற பெண்கள் விடுதலையும் வேண்டியதாகும்.

வினா:  இந்தியா அடிமையானதற்குக் காரணம் என்ன?

விடை:  இந்தியா கெட்டு நாசமாய் என்றும் விடுபட முடியாத அடிமையாய்ப் போனதற்குக் காரணம் அவர்கள் மதமும் கடவுளுமே முக்கிய காரணமாகும்.

வினா:  பார்ப்பான் மாத்திரம் எப்படி இவ்வளவு பெரிய பதவிக்கு வர முடிந்தது?

விடை:  மத  விஷயத்தில் அவர்களுக்குக் கிடைத்துள்ள உயர்ந்த நிலையால், அவர்கள் (பார்ப்பார்கள்) எல்லோரையும்விட முன்னேறியிருக்க முடிந்தது.  மத  விஷயத்தில் பார்ப்பனர்களுக்குள்ள பெருமை போய்விட்டால் அவர்கள் இழிவான மனிதர்களுக்கும் இழிவான மனிதர்களாகிவிடுவார்கள்.

பகுத்தறிவு (மா.இ.)  வினா விடை  மே 1935

You may also like...