கேள்வியும் – பதிலும் – சித்திரபுத்திரன்

 

கேள்வி:- பெண்களுக்கு புருஷர்கள் என்றைக்குச் சுதந்திரம் கொடுப்பார்கள்.

பதில்:- கற்பு என்கின்ற வார்த்தையும் விபசாரதோஷம் என்கின்ற வார்த்தையும் என்று ஒழிக்கப்படுகின்றதோ அன்றுதான் பெண்கள் முழு விடுதலையடைய முடியும்.

இன்று பெண்களிடம் புருஷர்கள் முழுவிடுதலையும் பெற்றிருப்ப தற்குக் காரணம் ஆண்கள் தங்களுக்குள் கற்பு என்பதையும், விபசார தோஷம் என்பதையும் அடியோடு ஒழித்துவிட்டதாலேயே சட்டப்படி முழுவிடுத லையும் பெற்று இருக்கிறார்கள்.

ஆதலால் பெண்கள் விடுதலை பெறவேண்டுமானால் ஆண்களைப் போல் நடக்கவேண்டும். மற்றபடி அப்படிக்கில்லாமல் “புல் என்றாலும் புருஷன், கல் என்றாலும் கணவன்” என்றோ, ஆண்கள் தங்கப்பாத்திரம் அதை யார் தொட்டாலும் கழுவக்கூடவேண்டியதில்லை துடைத்துவிட்டால் போதும்; பெண்கள் மண்பாத்திரம் வேறுயாராவது தொட்டால், கழுவினால் கூட தீட்டுப்போகாது. அதை உடைத்து குப்பைத்தொட்டியில் எறிந்தாக வேண்டும் என்கின்ற முறை இருக்கின்றவரை பெண்களுக்கு விடுதலையோ, சுதந்திரமோ கிடையாது. ஆதலால் பெண்களும் தங்களை மண்சட்டி என்று எண்ணாமல் தாங்கள் தங்கப்பாத்திரம் என்று எண்ணிக்கொள்ள வேண்டும்.

குடி அரசு – வினா விடை – 29.10.1933

 

You may also like...