38. பார்வதி – பரமசிவன் அழுகை

பார்வதி     :      எனது பிராணநாதனாகிய ஒ சிவபெருமானே! ஆகாயத்தில் பறக்கின்ற கெருடன்   என்கிற பட்சியைப்பார்த்து பலர் காலையிலும் மாலையிலும் கன்னங்கன்னமாயப் போட்டுக் கொள்ளுகிறார்களே அது எதற்காக நாதா?

பரமசிவன்  :      கண்மணி! இது உனக்குத் தெரியாதா? கருடன் நமது அடிமையாகிய மகா விஷ்ணுவுக்கு  வாகனமல்லவா? அதனால் விஷ்ணு பக்தர்களில் சிலர் கருடனைக்கண்டால் கன்னத்திலடித்துக கொள்ளுகிறார்கள்.

பார்வதி     :      ஒஹோ! அப்படியா சங்கதி! சரி, அப்படியானால் நமது அடிமை வாகனத்திற்கு இவ்வளவு மதிப்பு இருக்கும்போது, நம்முடைய வாகனமாகிய காளைமாட்டைக் கண்டால் ஏன் யாரும் கன்னத்திலடித்துக் கொள்வதில்லை? அன்றியும் வண்டியில் கட்டி ஓட்டுகிறார்கள்; ஒடை அடிக்கிறார்கள், செக்கில் கட்டி ஆட்டுகிறார்கள்,       அடித்துக்கூடத் தின்று விடுகிறார்களே அது ஏன்?

பரமசிவன்  :      நம்முடைய பக்தர்களுக்கு அவ்வளவு பக்தி இல்லை. நன்றாகச் சாம்பலைப் பூசிக் கொள்ளத்தான் தெரியும். நமது வாகனத்தினிடத்தில் பக்தி காட்டத் தெரியாது.

பார்வதி     :      அதுதான் போகட்டும், நமது குமாரனாகிய கணபதியின் வாகனமாகிய பெருச்சாளியைக் கண்டால், ஏன் கன்னம்கன்னமாய் அடித்துக்கொள்ளாமல் தடி எடுத்து அடித்துக் கொன்றுவிடுகிறார்கள்? அய்யோ பாவம்!

பரமசிவன்  :      கணபதியின் பக்தர்களுக்கும் போதுமான பக்தி கிடையாது. ஏனென்றால் கணபதிக்கு அபிஷேகம் செய்யும்போது அவனது வாகனமாகிய கல்லுப்பெருச்சாளிக்கும் அபிஷேகம் செய்வார்கள்.

அதற்கும் பால், நெய், தயிர் ஊற்றிக் கொழுக்கட்டையை வைப்பார்கள். உயிருடன் காணும்போது ஓடி ஓடி அடிப்பார்கள். நம்பக்தர்கள் யோக்யதையே இப்படித்தானே!

இந்த வெட்கக் கேட்டை யாருடன் சொல்லுவது!

பார்வதி : அதுதான் போகட்டும், தங்களுடைய மற்றொரு வாகனமாகிய நாயைக் கண்டால் ஒருவரும் கன்னத்தில் அடித்துக் கொள்ளாமல் எல்லோரும் சோடு! சோடு! என்று விரட்டுகிறார்களே! அது என்ன காரணம் நாதா?

பரமசிவன்  :      கண்மணி! அதுவும் பக்தர்களின் அறியாத்தனம்தான். ஆனாலும் அதுமலம் சாப்பிடுகின்றதல்லவா? அதனால் அதன்மீது சிலர் அசிங்கப்படுகின்றார்கள் போல் இருக்கின்றது.

பார்வதி     :      என்ன நாதா, வைரவக் கடவுள் வாகனம் மலம் சாப்பிட்டால் மகாவிஷ்ணுவின் வாகனம் அதிலுள்ள பூச்சி, புழு, நத்தை, நண்டு முதலிய அசுசியமான     வஸ்துக்களையெல்லாம் சாப்பிடுகின்றதே! அதையெல்லாம் அந்தப் பக்தர்கள் மன்னிக்கும்போது மலம் சாப்பிடுவதை மாத்திரம் ஏன் நமது பக்தர்கள் மன்னிக்கக் கூடாது?

அதுதான் போகட்டும் நமது குமாரன் வாகனமாகிய மயிலைக் கண்டால் ஏன் முருக பக்தர்கள் கன்னங்கன்னமாய்ப் போட்டுக் கொள்வதில்லை? அன்றியும், ஆட்டைக் கண்டால் அடித்துத் தின்று விடுகிறார்களே? அவன் கொடியாகிய சேவலைக் கண்டால் அறுத்துத் தின்றுவிடுகிறார்கள்? இது என்ன அநியாயம்!

பரமசிவன்  :      அது அந்தப்பக்தர்களின் பக்திக்குறைவு. அதற்கு நாம் என்ன செய்யலாம்.

பார்வதி     :      நாதா! சரி சரி, இதையெல்லாம் பார்க்கும்போதுதான் எனக்கு மிகவும் வெட்கக்கேடாயிருக்கின்றது. நமக்குக் கீழ்ப்பட்ட விஷ்ணுவின் வாகனத்திற்கு மாத்திரம் உலகத்தில் இவ்வளவு கௌரவமும், அவர் பக்தர்களுக்கு மாத்திரம்.

இவ்வளவு பக்தியும் இருப்பதும், நமது வாகனங்களுக்கு இவ்வளவு மரியாதைக் குறைவும், நமது பக்தர்களுக்கு இவ்வளவு பக்திக்குறைவும் இருப்பதும் எனக்கு வெளியில் தலை நீட்ட முடியவில்லையே? தவிர மகாவிஷ்ணுவின் பெண்ஜாதியான மகாலக்ஷிமிகூட இதனாலேயே அடிக்கடி என்னைப்பார்த்துப் பரிகாசம் பண்ணுகின்றாள். தவிர நம்முடைய பக்தர்களிலும் பலர் அறிவில்லாமல், நம்ம வாகனத்தை மரியாதை செய்யாமல் இருப்ப தோடல்லாமல், விஷ்ணு வாகனத்திற்கு விஷ்ணு பக்தர்களைப் போலவே கன்னங்கன்னமாய்ப்  போட்டுக் கொண்டு மரியாதை செய்கிறார்களே இது என்ன மானக்கேடு! தாங்களே யோசித்துப் பாருங்கள்,

பரமசிவன்  :      என்ன செய்யலாம், சகி! நம் தலையில் பிரம்மன் இப்படி அவமானப்படும்படியாக விதித்துவிட்டான். விதி யாரை விட்டது சொல் பார்ப்போம். என் கண்மணி! நீ இதற்காக அழவேண்டாம். உன்னைப் பார்த்தால் எனக்கு அழுகை வருகிறது.

பார்வதி     :      சரி சரி இதற்காக நான் ஒருத்தி அழுவது போதாதாக்கும் இனி நீங்கள் வேறா அழுகவேண்டும்! போனால் போகட்டும்! இம்மாதிரி நம் தலையில் எழுதிய அந்த பிர்ம்மாவைப் பேசிக்கொள்ளலாம். வாருங்கள்

நம்ம வேலையைப் பார்க்க நாம் போவோம்

குடி அரசு கட்டுரை 25.06.1949

 

You may also like...