தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும்,
அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் !
– திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

RSS தலைவர் மோகன் பகவத் என்பவர் 22.07.2021 அன்று மதுரை வருவதையொட்டி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சார்பில் சில முன்னேற்பாடுகளுக்காக பிறப்பித்த குறிப்பாணை  ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது.

அரசு அதிகாரியின் இந்த செயல் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்குள்ளானது. பெரியாரிய, முற்போக்கு இயக்கங்கள் இந்த குறிப்பாணையைப் பிறப்பித்த அதிகாரியை மிக வன்மையாக கண்டித்தன.

கடும் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக மதுரை மாநகராட்சியின் சார்பில் ஆணைக்கான ஒரு அவசர விளக்கம் அளிக்கப்பட்டது.

இந்த ஆணை தமிழ்நாட்டு முதல்வர் நேரடி பார்வையின் கீழ் பிறப்பிக்கப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்றாலும் இந்த ஆணைக்கு எதிரான கொந்தளிப்பான சூழலை உடனடியாக கவனத்தில் கொண்ட தமிழ்நாட்டு அரசு உடனடியாக தலையிட்டு இந்த ஆணையைப் பிறப்பித்த மதுரை மாநகராட்சி துணை ஆணையரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

தமிழ்நாட்டு அரசின் இந்த தற்காலிக பணி நீக்க அறிவிப்பு அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழக அரசின் மதசார்பற்ற செயல்பாடுகளுக்கு எதிராகவும்,மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று நடைபெற்று வரும் திமுககழக  ஆட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலும் செயல்பட்ட அதிகாரியின் மீதான உடனடி நடவடிக்கை, இது போல செயல்படும் அனைத்து அதிகாரிகளுக்கும் எச்சரிக்கை அளிக்கும் விதமாக உள்ளது.
தமிழக அரசின் இந்த உடனடி நடவடிக்கை வரவேற்று பாராட்டத்தக்கது ஆகும்.

ஏற்கனவே அவிநாசி அருகே இந்துத்துவ மனநிலையுடன் செயல்பட்டு மாட்டுக்கறி விற்பனைக்கு தடைவிதிக்க முயன்ற வட்டாட்சியர் பணியிட மாற்றம் செய்தும் துறை ரீதியான விசாரணைக்கும் தமிழக அரசு உடனடியாக கவனம் செலுத்தி உத்தரவிட்டது அப்பகுதி மக்களின் வரவேற்பைப் பெற்றது.

இவற்றைப் போலவே தமிழ்நாட்டு அரசின் சார்பில் நடைபெற்று வரும் புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழாக்களுக்கு பார்ப்பனர்களை அழைத்து பூஜை போட்டு அந்நிகழ்வை துவக்குவது பரவலாக தமிழ்நாட்டில் நடைபெற்று வருகிறது..

தமிழக அரசின் உடனடியாக இந்த செயல்பாடு குறித்து கவனம் செலுத்தி,  அடிக்கல் நாட்டு விழா என்பதே இல்லாமல்போய்,   பார்ப்பனர்களை அழைத்து நடத்தும் பூமி பூஜை என்பதே இயல்பாக்கப் பட்டிருக்கும் போக்கினையும்,  RSS-ன் சேவா பாரதி போன்றவை நடத்தும் நிகழ்சிகளிலும்,
பாரதமாதா வழிபாட்டு பூஜைகளிலும் திமுக அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்வதையும் உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் தமிழ்நாட்டு அரசை உரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழ்நாட்டு அரசின் இந்த நடவடிக்கையை கவனத்தில் கொண்டு நடைபெற்று வரும் தமிழ்நாட்டு அரசின் மத சார்பற்ற தன்மைக்கு எதிராக காவிச் சிந்தனையுடனுடம், ஆதிக்க ஜாதி உணர்வுடனும் செயல்பட்டு வரும் காவல்துறை அதிகாரிகள், அரசு உயர் அதிகாரிகள் தங்கள் செயல்பாடுகளை மாற்றிக் கொண்டு தமிழ்நாட்டு அரசு பாராட்டத்தக்க வகையிலும், மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும்  மதசார்பற்ற தன்மையுடனும்  சமூக நீதி சிந்தனையுடனும் செயல்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

– *கொளத்தூர் மணி*,
*தலைவர்*,
*திராவிடர் விடுதலைக் கழகம்.*
22.07.2021.

You may also like...