கடவுள் – மத மறுப்பாளராக 98 வயது வாழ்ந்து காட்டிய திராவிடர் இயக்கத்தின் மூத்த தலைவர் பேராசிரியர் அன்பழகன் விடைபெற்றார்

இனமானப் பேராசிரியர் அன்பழகன், தனது 98ஆவது அகவையில் மார்ச் 7, 2020இல் முடிவெய்தினார். திராவிடர் இயக்கத் தூண்களில் ஒருவர். தமிழையும் சுயமரியாதைக் கொள்கைகளையும் தனது இரு கண்களாகப் போற்றியவர். மிகச் சிறந்த பேச்சாளர். மாணவப் பருவத்திலிருந்தே அவரது திராவிடர் இயக்கப் பயணம் தொடங்கி விட்டது. தி.மு.க.வின் பொதுச் செயலாளராக 43 ஆண்டுகாலம் இருந்து கலைஞரின் உற்ற துணைவராக செயல்பட்டவர். மிக மிக எளிமையானது அவரது வாழ்க்கை. 7 முறை சட்டமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். பெரியார் குறித்து ஆழமான அவரது உரைகள் மிகவும் குறிப்பிடத்தக்கவை. கடவுள் – ஜாதி – மதமற்ற வாழ்க்கையை வாழ்ந்து காட்டியவர். ஒரு கடவுள் மறுப்பாளர் 98 வயது வரை வாழ முடியும் என்ற செய்தியையும் அவரது மரணம் உணர்த்தி நிற்கிறது. பல்லாயிரக்கணக்கில் மக்கள் திரண்டு அவருக்கு இறுதி வணக்கம் செலுத்தினர். மதச் சடங்குகள் ஏதும் இன்றி திராவிடர் இயக்க அடையாளங்களோடு அவரது இறுதி நிகழ்வுகள் நடந்தன.

திராவிடர் விடுதலைக் கழகம் பேராசிரியருக்கு வீரவணக்கம் செலுத்துகிறது.

பெரியார் முழக்கம் 12032020 இதழ்

You may also like...