கீழடி: வெளிச்சத்துக்கு வரும் ஆய்வுகள்

கீழடி ஆய்வை முடித்துவிட்டு ஒரு பக்க அறிக்கையோடு விடைபெற்றது மத்திய தொல்லியல் துறை.

தமிழ்நாடு தொல்லியல் துறை ஆய்விற்குப் பிறகே உண்மைகள் வெளிவரத் தொடங்கின.

உலகெங்கும் உள்ள தமிழ்ச் சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருக்கிறது, சென்ற வாரத்தில் தமிழக அரசின் தொல்லியல் துறை வெளியிட்ட கீழடி தொடர்பான அறிக்கை. “கீழடியில் கிடைத்த கட்டுமான அமைப்புகள் முதிர்ச்சி பெற்ற சமூகத்தின் அடையாளம். எழுத்தறிவும், சிறந்த கைவினைத் தொழில்நுட்பமும், உள்நாடு மற்றும் வெளிநாடு வணிக வளமும் கொண்ட இந்நாகரிகத்தின் காலம் கிமு 600” என்று அது கூறுகிறது. அதாவது, கீழடியின் வயது 2600 என்று கூறும் அந்த அறிக்கை, அந்தக் கால கட்டத் திலேயே எழுத்தறிவு பெற்ற சமூகமாக தமிழ்ச் சமூகம் இருந்ததையும் விரிவான ஆதாரங்களோடு நிறுவ முயல்கிறது. ஆனால், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை மேற்கண்ட முயற்சியின் விளைவு இது என்பதையும், கீழடியை அணுகும் விதத்தில் இனியேனும் மத்திய அரசு சிறப்புக் கவனம் அளிக்க வேண்டும் என்பதையும் இங்கு நாம் அழுத்திச் சொல்ல வேண்டியிருக் கிறது.

மூன்று கட்ட ஆய்வுகள்

நான்காண்டுகளாக கீழடியில் ஆய்வு நடந்திருக்கிறது. மத்திய தொல்லியல் துறை முதல் மூன்றாண்டுகள் ஆய்வுகளை நடத்தியது. அதில் முதல் இரண்டு ஆண்டுகள் ஆய்வுகளை நடத்திய அமர்நாத் இராமகிருஷ்ணன் குழு 102 குழிகள் அகழ்ந்தது. அவற்றில் கிடைத்த சான்றுகளின் அடிப்படையில், 2017 பிப்ரவரியில் இடைக்கால அறிக்கை கொடுத்தார் அமர்நாத் இராம கிருஷ்ணன். ‘தமிழகத்தில் முதன்முறையாக நகர நாகரிகத்துக்கான விரிவான கட்டுமானங்கள் கிடைத்திருக்கின்றன’ என்று அவர் குறிப்பிட்டார்.

விரைவிலேயே அவர் பணியிடம் மாற்றப் பட்டார். மூன்றாவது ஆண்டில் ஆய்வுகளை நடத்திய ஸ்ரீராமன், வெறும் 10 குழிகளை மட்டுமே அகழ்ந்தார். ‘புதிய ஆதாரங்களோ, கட்டு மானத்தின் தொடர்ச்சியோ கிடைக்கவில்லை; புதிய சான்றுகளும் எதுவும் கிடைக்கவில்லை’ என்று ஒரு பக்க அறிக்கையை மத்திய அரசுக்கு அவர் அனுப்பினார். அந்த அறிக்கையின் அடிப்படையில் கீழடி ஆய்வை முடித்துவிட்டு வெளியேறியது மத்திய தொல்லியல் துறை.

இந்தக் கட்டத்திலிருந்துதான் நான்காம் ஆண்டில் சிவானந்தம் தலைமையில், தன்னுடைய அகழாய்வைத் தொடங்கியது தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை. 34 குழிகளில் நடத்தப்பட்ட இந்த அகழாய்வில் கிடைத்த சான்றுகளை உயரிய ஆய்வு நிறுவனங்கள் பார்வைக்கு அனுப்பி, அவர்கள் அளித்த மதிப்பீட்டின்படியே தன்னுடைய அறிக்கையை அது சமீபத்தில் சமர்ப்பித்தது.

ஒரு ஆண்டில் கிடைத்த சான்றுகளே மறு ஆண்டும் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்க்க முடியாது. முதல் ஆண்டில் விரிவான ஆதாரங்கள் கிடைத்து, மறு ஆண்டில் எதுவும் கிடைக்காமலும் போகலாம். ஆய்வு என்பது இவை அனைத்தையும் உள்ளடக்கியதுதான். இன்னும் துல்லியமாகச் சொல்லப்போனால், சான்றுகள் என்று எது கருதப்படுகிறதோ அது கிடைத்த இடத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே அளவு சம முக்கியத்துவம் பெற்றதுதான் கிடைக்காத இடமும். சான்றுகள் கிடைத்த இடத்துக்கும் கிடைக்காத இடத்துக்கும் உள்ள வேறுபாடுகளைப் பற்றி தொல்லியல் அறிஞர்கள் விவாதிக்கட்டும். நாம் எழுப்ப வேண்டிய கேள்வி, இந்த அறிக்கைகள் அடிப்படையில் அரசு எடுக்கும் முடிவுகள் தொடர்பில்தான்.

சர்ச்சைகளும் முடிவுகளும்

ஏற்கெனவே, கீழடி ஆய்வில் தீவிரமான ஆர்வம் காட்டிவந்த அமர்நாத் இராமகிருஷ்ணன் அங்கிருந்து பணிமாற்றம் செய்யப்பட்டது உள்ளூர் மக்களிடம் அதிருப்தியையும் சந்தேகத்தையும் உண்டாக்கிய நிலையில், புதிதாகப் பொறுப்பேற்ற ஸ்ரீராமன், கீழடி ஆய்வையே முடிக்கும் அளவுக்குக் கொடுத்த அறிக்கையையேனும் மத்திய அரசு கேள்விக்குட்படுத்தியிருக்கலாம். “ஒரு வருஷம் முழுக்கவுமே வெறும் 10 குழிகள் அளவுக்கு மட்டுமே அகழாய்வு நடத்த முடிந்ததா? ஓராண்டில் இந்த ஆய்வுக்காகக் கொடுக்கப்பட்ட பணத்தில் மூன்றில் ஒரு பங்கைக்கூட நீங்கள் ஏன் செலவிடவில்லை? இன்னும் கொஞ்சம் முயன்று பார்க்கலாமா?” என்றுகூடக் கேட்காமல் ஸ்ரீராமன் கொடுத்த அறிக்கையின் அடிப்படை யில் அப்படியே கீழடியைக் கைவிட்டது மத்திய அரசு.

இப்போது மாநிலத் தொல்லியல் துறை நடத்தியிருக்கும் ஆய்வு கீழடியின் முக்கியத்துவத்தை ஒட்டுமொத்த நாட்டுக்கும் உணர்த்தியிருக்கும் சூழலிலேனும், கீழடியை இனி கூடுதல் முக்கியத்துவத்துடன் அணுக முற்பட வேண்டும். முழு ஆய்வையும் முடிக்காமல் ஒரு அதிகாரி கொடுக்கும் அறிக்கையின் அடிப்படையில் ஆய்வை முடித்துக்கொள்ளும் போக்கைக் கைவிட வேண்டும்.

கீழடியில் உள்ள தொல்லியல் மேடு என்பது தனித்த ஒன்றல்ல, 110 ஏக்கர் கொண்ட அம்மேட்டுக்குப் பக்கத்தில் 90 ஏக்கரில் இன்னொரு மேடு உள்ளது. கீழடியைச் சுற்றி கொந்தகை, மணலூர், அகரம் ஆகிய கிராமங்களும் இதே அளவு தொல்லியல் எச்சங்களோடு உள்ளவை என்று கருதப்படுபவை.

இவை அனைத்தும் ஒரே குவிமைய நிலப்பரப்பு என்பது இங்கு நாம் கவனிக்க வேண்டியதாகும். ஒரு பெரும் நீர்நிலையைச் சுற்றிய நிலவியல் அமைப்பாக இது இருந்திருக்கலாம். வைகையின் நீரைக் கால்வாய் வழியாக இரண்டு கிமீ தூரம் பிரித்து வந்து, நீர் தேக்கி வேளாண்மையில் ஈடுபட்டவர்களாக அங்கு வாழ்ந்தவர்கள் இருந்திருக்கலாம். ஆனால், இவையெல்லாம் தொடர் ஆய்வுகளில் நிறுவப்பட வேண்டியவை.

இரு கோரிக்கைகள்

ஆகவே, கீழடியைச் சுற்றியுள்ள இப் பகுதியைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கும் பணி முதன்மையானது. உத்தர பிரதேசத்தில் பாக்பத்தில் உள்ள சனவுலி கிராமத்தில் 28.67 ஏக்கர் நிலத்தைப் பாதுகாக்கப்பட்ட நிலமாக சில நாட்களுக்கு முன் மத்திய தொல்லியல் துறை அறிவித்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும். அங்கு கடந்த ஆண்டு மத்திய தொல்லியல் துறை நடத்திய அகழாய்வில் பழங்காலச் சவப்பெட்டி களும் கல்லறைகளும் கிடைத்துள்ளன. அவற்றின் காலத்தைக் கணிக்கக் காலப் பகுப்பாய்வுக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. ஆனால், அவற்றின் முடிவுகள் வருவதற்கு முன்பே அவ்விடத்தைப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்திருக்கிறது மத்திய தொல்லியல் துறை.

ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொல்லியல் பொருட்களும் கட்டுமானச் சான்றுகளும் கண்டுபிடிக்கப்பட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட முறை காலப் பகுப்பாய்வுக்கு மாதிரிகளை அனுப்பி, கால நிர்ணயம் செய்யப்பட்ட கீழடியின் ஆய்வுக்குரிய நிலம் இன்னும் பாதுகாக்கப்பட்ட நிலமாக அறிவிக்கப்படவில்லை.

அடுத்து, கீழடியில் சர்வதேசத் தரத்தில் ஒரு அருங்காட்சியகமும் அமைக்கப்பட வேண்டும். கீழடியில் ஆய்வு தொடங்கப்பட்ட அதே காலகட்டத்தில், அகழாய்வு தொடங்கப்பட்டதும் பிரதமர் மோடியின் சொந்த நகரமான குஜராத்தின் வட் நகரில் இதுவரை கிடைத்த பொருட்களைக் கொண்டு, சர்வதேசத் தரத்தில் மெய்நிகர் அருங்காட்சியகம் அமைக்க சர்வதேச ஒப்பந்தப் புள்ளியை மத்திய தொல்லியல் துறை கோரியுள்ளதை இங்கு சுட்டிக்காட்ட லாம். மத்திய அரசிடம் இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்துவது மாநில அரசின் கடமையும்கூட.

கீழடியில் கிடைத்த எலும்பை டெக்கான் கல்லூரிக்குப் பகுப்பாய்வுக்கு அனுப்பியதில், அது திமிலுடைய காளையின் எலும்பு என ஆய்வு முடிவுகள் கூறுவதாகச் சொல்கிறது தமிழக தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிக்கை. வைகை நதியிலிருந்து கீழடியின் வழியே மேலேறும் திமிலுடைய காளை தமிழின் குறியீடு!

அந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பொருட்கள் மீது செய்யப்பட்ட ஆய்வின் முடிவுகள் தமிழக தொல்லியல் துறையால் வெளியிடப்பட்டுள்ளன.

2018ம் ஆண்டில் கீழடியில் தமிழக அரசால் நடத்தப்பட்ட 4வது அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை வைத்து கிடைத்த முடிவுகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன.

கீழடி நாகரீகத்தின் காலம் என்ன?

கீழடியில் கிடைத்த 6 பொருட்கள் ஆக்சலரேட்டட் மாஸ் ஸ்பெக்ட்ரோமெட்ரி

(ஹஉஉநடநசயவநன அயளள ளயீநஉவடிஅநவசல) ஆய்வுக்காக அமெரிக்காவின் ஃப்ளோரிடாவில் உள்ள பீட்டா அனலிடிகல் லேப்பிற்கு அனுப்பப்பட்டன. அதில் கிடைத்த முடிவுகளின்படி, அந்தப் பொருட்கள், கி.மு. மூன்றாம் நூற்றாண்டுக்கும் கி.மு. ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட காலத்தை சேர்ந்தவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

கீழடியில் 353 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 580வது ஆண்டையும் 200 செ.மீ. ஆழத்தில் கிடைத்த பொருள் கி.மு. 205வது ஆண்டையும் சேர்ந்தது எனக் கண்டறியப் பட்டுள்ளது. இந்த இரு மட்டங்களுக்கு கீழேயும் மேலேயும் பொருட்கள் இருப்பதால், கீழடியின் காலகட்டம் கி.மு. ஆறாம் நூற்றாண்டு முதல் கி.மு. ஒன்றாம் நூற்றாண்டு வரையிலானது என தொல்லியல் துறை முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வரலாற்றுக் காலம் என்பது கி.மு. மூன்றாம் நூற்றாண்டில்தான் துவங்குகிறது. ஆகவே கங்கைச் சமவெளியில் நடந்ததைப் போல, இரண்டாவது நகர நாகரீகம் இங்கு நிகழவில்லை எனக் கருதப்பட்டுவந்தது. ஆனால், கீழடியில் கிடைத்த பொருட்களை வைத்து, கி.மு. ஆறாம் நூற்றாண்டிலேயே இரண்டாவது நகர நாகரீகம் துவங்கியுள்ளது என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது. கங்கைச் சமவெளியிலும் இதே காலகட்டத்தில்தான் நகர நாகரீகம் உருப்பெற்றது.

கொடுமணல், அழகன்குளம் ஆகிய இடங்களில் கிடைத்த எழுத்தின் மாதிரிகளை வைத்து தமிழ் பிராமி எழுத்தின் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகக் கருதப்பட்டது. ஆனால், தற்போது கீழடியில் கிடைத்த ஆய்வு முடிவுகளின்படி, தமிழ் பிராமி கி.மு. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆகவே 2,600 ஆண்டுகளுக்கு முன்பாக கீழடியில் வாழ்ந்தவர்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள், எழுதத் தெரிந்திருந்தார்கள் என்ற முடிவுக்கு தொல்லியில் துறை வந்துள்ளது.

கீழடியிலிருந்து கிட்டத்தட்ட 70 எலும்புத் துண்டுகள் கண்டெடுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை (53ரூ) காளை, எருமை, ஆடு, பசு ஆகியவற்றினுடையவை. ஆகவே கீழடியில் வாழ்ந்த சமூகம் பெரும்பாலும் ஆடு, மாடுகளை வளர்த்த சமூகமாக இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

கீழடியில் கிடைத்த ஓடுகள், செங்கற்கள், காரை ஆகியவை வேலூர் இன்ஸ்டிடடியூட் ஆஃப் டெக்னாலஜியில் ஆய்வுசெய்யப்பட்டன. அவற்றில் மண், சுண்ணாம்பு, இரும்பு, மெக்னீசியம், அலுமினியம் ஆகியவை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இங்கு நடத்தப்பட்ட ஆய்வுகளில் சுவர்கள், கட்டடங்களின் இடிபாடுகளும் கிடைத்தன. தரைகள் வழுவழுப்பான களிமண்ணால் மெழுகப்பட்டிருந்தன. கட்டடங்களைப் பொறுத்தவரை அவற்றின் சுவர்கள் கூரை வரை எழுப்பப்பட்டிருக்கவில்லை. மாறாக சுவர்களுக்கு அருகில் கம்புகள் நடப்பட்டு கூரைகள் போடப்பட்டிக்கின்றன.

இந்தியாவில் கிடைத்த வரிவடிவங்களில் சிந்து சமவெளியில் கிடைத்த வரிவடிவங்களே மிகப் பழமையானவை. சிந்துவெளி பண்பாடு மறைந்து தமிழ் பிராமி எழுத்து தோன்றியதற்கு இடையில் கீறல் வடிவில் ஒரு வரிவடிவம் இருந்ததாக தொல்லியலாளர்கள் கருதுகின்றனர். சிந்து சமவெளி எழுத்துகளைப் போலவே இவற்றின் பொருளும் இதுவரை முழுமையாகப் புரியவில்லை. செப்புக்கால பண்பாட்டிலும் தொடர்ந்து பெருங்கற்கால பண்பாட்டிலும் இக்குறியீடுகள் கிடைக்கின்றன.

தமிழ்நாட்டில் ஆதிச்சநல்லூர், அழகன் குளம், கொற்கை, கொடுமணல், கரூர், தேரிருவேலி, பேரூர் உள்ளிட்ட இடங்களில் கிடைத்த பானை ஓடுகளில் இந்த வரிவடிவங்கள் கிடைத்துள்ளன. இலங்கையில் திசமஹரம, கந்தரோடை, மாந்தை, ரிதியகாம போன்ற இடங்களிலும் இது போன்ற குறீயிடுகள் கிடைத்துள்ளன. கீழடி அகழாய்வில் 1001 ஓடுகள் இத்தகைய வரி வடிவங்களுடன் கிடைத்துள்ளன.

அதே போல, இந்த கீழடி அகழ்வாய்வில் தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட 56 பானை ஓடுகள் கிடைத்துள்ளன. இவற்றில் குவிரன், ஆத(ன்) உள்ளிட்ட பெயர்களும் முழுமை யடையாத எழுத்துகளும் கிடைத்துள்ளன. இதில் ஆதன் என்ற பெயர், அதன் என்று குறிப்பிடப்படுகிறது. முற்கால தமிழ் பிராமியில், நெடிலைக் குறிக்க ஒலிக்குறியீடு இடும் வழக்கம் இல்லை என்பதால், இந்த தமிழ் பிராமி எழுத்துகள் காலத்தால் மிகவும் முந்தையவை யாகக் கருதப்படுகின்றன.

இந்த எழுத்துகள் பெரும்பாலும் பானை களின் கழுத்துப் பகுதியில் எழுதப்பட்டுள்ளன. பானையில் கிடைக்கும் எழுத்துகள் பெரும் பாலும் பானை செய்வோரால் சுடுவதற்கு முன்பாக ஈர நிலையில் எழுதப்படும். கீழடியில் பானைகள் சுடப்பட்டு, உலர்ந்த பிறகு எழுதப்பட்ட எழுத்துகள் கிடைத்துள்ளன. அவற்றின் எழுத்தமைதி (எழுத்தின் வடிவம், கையெழுத்து) ஒரே மாதிரியாக இல்லை. ஆகவே வெவ்வேறு ஆட்கள் இவற்றை எழுதியிருக்கலாம்.

கீழடியில் இரண்டு இடங்களில் 4 மீட்டர் அளவுக்குமேல் மிகப் பெரிய அளவில் பானை ஓடுகளின் குவியல்கள் கிடைத்ததை வைத்துப் பார்க்கும்போது அங்கு மிகப் பெரிய பானை வனையும் தொழிற்கூடம் இருந்திருக்கலாம் என்ற முடிவுக்கு தொல்லியல் துறை வந்துள்ளது.

மேலும் கீழடியில் நூல் நூற்கப் பயன்படும் தக்கிளி, தறிகளில் பயன்படுத்தப்படும் தூரிகை, தறியில் தொங்கவிடும் கருங்கல் போன்றவையும் கிடைத்திருப்பதால், இப்பகுதியில் வாழ்ந்தவர்கள் நெசவுத் தொழிலிலும் ஈடுபட்டிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

கீழடியில் பெண்கள் பயன்படுத்திய தங்கத் தாலான ஏழு ஆபரணத் துண்டுகள் கிடைத்துள்ளன. பல்வேறு மதிப்புமிக்க கற்களால் ஆன வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இங்கு பல விளையாட்டுப் பொருட்கள் குறிப்பாக ஆட்டக்காய்கள், தாய விளையாட்டி ற்கான பகடைக்காய்கள் அதிக அளவில் கிடைத் துள்ளன. இவை பெரும்பாலும் சுட்டமண்ணால் ஆனவை.

மேலும், வடமேற்கு இந்தியாவின் மகாராஷ்டிரம், குஜராத் போன்ற பகுதிகளில் பரவலாகக் காணப்படும் அகேட் மற்றும் கார்னீலியம் கற்களால் ஆன மணிகளும் கிடைத் துள்ளன. ரோம் நாட்டை சேர்ந்த அரிட்டைன் பானை ஓடு மண்ணடுக்கின் மேல் நிலையில் கிடைத்திருக்கிறது. இவை ரோம் நாட்டில் கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் புழக்கத்தில் இருந்தவை.

இங்கு ஒட்டுமொத்தமாக சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டுப் பொருட்கள், 35 காதணிகள், பிற அணிகலன்கள் கிடைத் துள்ளன. ஆனால், வழிபாடு தொடர்பான தொல்பொருட்கள் எவையும் தெளிவான முறையில் இதுவரை கிடைக்கவில்லையென தொல்லியல் துறையின் ஆய்வறிக்கை கூறுகிறது.

கீழடியின் முக்கியத்துவம் என்ன?

தமிழ்நாட்டில் இதுவரை செய்யப்பட்ட அகழ்வாய்வுகளில் சுட்ட செங்கல்களால் ஆன கட்டடங்களுடன் நகர நாகரீகம் இருந்தது இங்குதான் முதன் முதலில் வெளிப்பட்டுள்ளது. தவிர, கி.மு. 3-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2-ம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியே தமிழில் சங்க காலம் எனக் கருதப்படுகிறது. ஆனால், இங்கு கிடைத்த பிராமி எழுத்துகளை வைத்து சங்க காலம் மேலும் மூன்று நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லலாம் எனக் கருதப்படுகிறது.

கங்கைச் சமவெளியில் இரண்டாம் நகர நாகரீகம் (சிந்து சமவெளி நாகரீகம் முதலாம் நகர நாகரீகம்) கிட்டத்தட்ட கி.மு. ஆறாம் நூற்றாண் டில் தோன்றியது. ஆனால், அதற்கு இணையான காலகட்டத்தில் தமிழகத்தில் எந்த நகர நாகரீகமும் இருந்ததற்கான ஆதாரங்கள் இதுவரை கிடைத்ததில்லை. முதன் முதலாக கீழடியில் அதே காலகட்டத்தில் நகர நாகரீகத்திற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஆகவே, இரண்டாம் நகர நாகரீக காலத்தில் தமிழகத்திலும் நகர நாகரீகம் இருந்ததாகக் கொள்ள முடியும்.

இந்த ஊரில் வாழ்ந்த மக்கள் வட இந்தியா, ரோம் போன்ற பகுதிகளுடன் வணிகத் தொடர்புகளை வைத்திருக்கக்கூடும் என்பதற்கு ஆதாரமாக பல வெளிநாடுகளைச் சேர்ந்த பானை ஓடுகள் கிடைத்துள்ளன.

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய நகரமாகக் கருதப்படும் மதுரை நகரம், வரலாற்றுக்கு முந்தைய காலத்திலிருந்து தொடர்ச்சியாக மக்கள் வசித்துவரும் வெகுசில நகரங்களில் ஒன்று. மதுரையிலும் மதுரையைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த பல பொருட்கள் கிடைத்திருக்கின்றன. பல தொல்லியல் சின்னங்கள் இப்போதும் இருந்துவருகின்றன.

மதுரையைச் சுற்றியுள்ள சமணர் படுகை களில் கி.மு. 500 முதல் கி.பி. 300 வரையிலான காலகட்டத்தைச் சேர்ந்த பல எழுத்துகள் காணப்படுகின்றன. மதுரைக்கு வடக்கில் சில கற்காலக் கருவிகளும் ஆவியூரில் பழங்கற்காலக் கருவி ஒன்றும் பிரிட்டிஷ் காலத்தில் மேற் கொண்ட ஆய்வுகளில் கண்டெடுக்கப்பட்டன. 1987ஆம் ஆண்டில் தமிழக அரசின் தொல்லியல் துறை உத்தமபாளையத்தின் எல்லப்பட்டி என்ற ஊரில் மேற்கொண்ட ஆய்வில் இரும்பு உருக்கும் தொழிற்கூடப் பகுதி இருப்பது வெளியில் கொண்டுவரப்பட்டது.

இந்திய விடுதலைக்கு முன்பாக அலெக்ஸாண்டர் ரீயா மதுரைக்கு அருகில் உள்ள பரவை, அனுப்பானடி பகுதிகளில் அகழ்வாய்வு நடத்தினார். 1976ல் டி. கல்லுப்பட்டியில் அகழ்வாய்வு நடத்தப்பட்டது. இதற்குப் பிறகு தமிழக தொல்லியல் துறை கோவலன் பொட்டல், அழகன் குளம், மாங்குளம் பகுதிகளில் அகழ்வாய்வுகளை மேற்கொண்டது.

இந்தப் பின்னணியில்தான் இந்தியத் தொல்லியல் துறை வைகை நதிக்கரையின் இரு பக்கங்களிலும் உள்ள 293 இடங்களில் கள ஆய்வு நடத்தி, பெருங்கற்காலத் தாழிகள், கல்வெட்டுகள், பண்டைய வாழ்விடப் பகுதிகள் கண்டறிந்தது. இதில் ஒரு இடம்தான் கீழடி.

இந்த அகழ்வாய்வுப் பகுதி 110 ஏக்கர் பரப்பளவுள்ள, அதிக சிதைவில்லாத ஒரு தொல்லியல் மேடு. இங்கே இந்திய தொல்லியல் துறை 2015, 16, 17ஆம் ஆண்டுகளில் அகழ்வாய்வு மேற்கொண்ட நிலையில், 2017-18, 2018-19ம் ஆண்டுகளில் தமிழகத் தொல்லியல் துறை அகழ்வாய்வு மேற்கொண்டது.

தமிழகத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு களில் இதுவரை நகர நாகரிகத்திற்கான அடையாளங்கள் கிடைத்ததில்லை. ஆகவே, கி.மு. ஆறாம் நூற்றாண்டில் கங்கைச் சமவெளியில் இருந்ததைப் போன்ற ஒரு நகர நாகரிகம் தமிழகத்தில் இல்லை என்றே கருதப்பட்டது.

ஆனால், கீழடியில் சுட்ட செங்கல்களால் ஆன வீடுகள், கழிவுநீர் போக்கிகள்,சுவர்கள், உறை கிணறுகளுடன் கூடிய ஒரு பகுதி தோண்டி யெடுக்கப்பட்டிருப்பதால், இது ஒரு நகர நாகரிகமாகவே கருதப்படுகிறது. இது தமிழகத்தில் கிடைத்த நகர நாகரிகத்தை சுட்டும் ஆதாரம் என்பதோடு, கங்கைச் சமவெளி நாகரிக காலகட்டத்திலேயே இங்கேயும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதை கீழடி அகழ்வாய்வு மூலம் நிறுவ முடியும்.

அடுத்ததாக பானை ஓடுகளில் காணப்படும் பெயர்கள். பானைகள் சுடப்பட்ட பிறகு, அதில் பெயர்கள் எழுதப்பட்டிருப்பதால் அவை அந்தப் பானையை வாங்கியவர்களால் எழுதப்பட்டிருக்க லாம் எனக் கருதப்படுகிறது. வெவ்வேறு பானைகளில் வெவ்வேறுவிதமான எழுத்தமைதி இருப்பதால், பலரும் இதை எழுதியிருக்கலாம் என்றும் அந்த சமூகத்தில் பலரும் எழுத்தறிவு பெற்றவர்களாக இருந்திருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

“இந்த ஆய்வு முடிவுகளுக்கும் சங்க இலக்கியத்திற்கும் என்ன தொடர்பு எனக் கேட்கிறார்கள். சங்கப் பாடல்கள் அந்த காலகட்டத்து மண்ணையும் மனிதர்களையும் பாடின. அந்தப் பாடல்களுக்கான வரலாற்றுப் பின்னணியை இங்கே கிடைத்த பொருட்கள் உணர்த்துகின்றன. சங்க காலப் பாடல்கள் காட்டும் தமிழ்ச் சமூக மிக உயர்ந்த நாகரீகம் கொண்டதாகத் தென்படுகிறது. அப்படி ஒரு நாகரீகம் இருந்திருந்தால்தான், அம்மாதிரி பாடல்கள் உருவாகியிருக்க முடியும். அதற்கான ஆதாரமாகத்தான் கீழடி இருக்கிறது” என்கிறார் ஆர். பாலகிருஷ்ணன்.

மற்றொரு விஷயத்தையும் பாலகிருஷ்ணன் சுட்டிக்காட்டுகிறார். சிந்து சமவெளி குறியீடுகளுக்குப் பிறகு தமிழ் பிராமி உருவாவதற்கு முன்பாக கீறல்கள் பானைகளில் எழுதப்பட்டுள்ளன. சிந்து வெளிக் குறியீடுகளைப் போலவே இந்த கீறல்களையும் படிக்க முடியவில்லை. இம்மாதிரியான பானைக் கீறல்கள் இந்தியாவிலேயே அதிகம் கிடைத்திருப்பது தமிழ்நாட்டில்தான். கீழடியில் மட்டும் 1001 பானைக் கீறல்கள் கிடைத்திருக்கின்றன. இது எழுத்து உருவாவதைக் காட்டுகிறது. இம்மாதிரியான கீறல்கள் கங்கைச் சமவெளியில் பெரிதாகக் கிடைக்கவில்லை என்கிறார் அவர்.

மேலும், கீழடியில் வழிபாட்டுக்குரிய உருவங்கள் என குறிப்பாக சுட்டிக்காட்டும் வகையில் பொருட்கள் ஏதும் காணப்படவில்லை. ஆனால், இதற்கு பொருள், அங்கு வசித்தவர்கள் எதையும் வணங்கவில்லை என்பதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இம்மாதிரி வணங்குவதும் சமயச் செயல்பாடுகளும் அவர்கள் வாழ்வின் முக்கியப் பகுதியாக இருக்கவில்லை என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. “சங்க இலக்கியத்தில் நிறைய பெண் தெய்வங்கள் உண்டு. ஆனால், கீழடியில் வாழ்ந்த பழங்கால மக்கள் அவற்றைச் சுற்றி வாழ்வை அமைத்துக் கொள்ள வில்லை என்ற முடிவுக்கு வரலாம்” என்கிறார் பாலகிருஷ்ணன்.

(ஆதாரம்: எழுத்தாளர் சு. வெங்கடேசன், முரளிதரன்,

காசி விசுவநாதன் கட்டுரைகள் மற்றும் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பேட்டி

நிமிர்வோம் அக்டோபர் 2019 மாத இதழ்

You may also like...