ஒட்டன் சத்திரத்தில் திராவிட விழுதுகள் நடத்திய ‘பெரியாரியல் பயிற்சி வகுப்பு’

18-11-2018 ஞாயிறு அன்று காலை 10-00 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 4-00 மணிவரை ஒட்டன்சத்திரம், பேருந்து நிலையம் அருகி லுள்ள இராம லிங்கசாமிகள் மடத் தின் அரங்கில், ஒட்டன் சத்திரம் திராவிட விழுதுகள் அமைப்பின் சார்பாக பெரியாரியல் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பயிற்சி வகுப்பில் பங்கேற்க பல் வேறு பகுதிகளில் இருந்து இளைஞர்களும், தோழர்களும், மாணவர்களும் 30 பெண்களும் ஆக 80 பேர் கலந்துகொண்டனர். வீ. அரிஸ்டாட்டில் வரவேற்புரையாற்ற, பேரா. மதியழகன் நோக்க உரையாற்றினார்.

‘ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு’ என்ற தலைப்பில் பணிநிறைவு பெற்ற கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளர் மு.செந்தமிழ்ச்செல்வன் எளிய எடுத்துக்காட்டுகளைக் கூறி விளக்கியதோடு, இன்று இட ஒதுக்கீடு சந்திக்கும் நெருக்கடிகளையும் சுட்டிக்காட்டி உரையாற்றினார். அடுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பெரியாரியல் – காலத்தின் தேவை என்ற தலைப்பில் கருத்துகளை முன்வைத்தார்.  நண்பகல் உணவுக்குப் பின்னர் 2-30 மணியளவில் பிற்பகல் அமர்வு தொடங்கியது.

‘திராவிட இயக்க ஆளுமைகள்’ என்ற தலைப்பில் பணி நிறைவுபெற்ற கூட்டுறவு சங்க கூடுதல் பதிவாளர் பா.பாண்டியன் பார்ப்பனரல்லாத இயக்கத்தின் தொடக்கப் புள்ளியிலிருந்து தென்னிந்திய நல உரிமைச் சங்க உருவாக்கம், அரசமைத்தமை, நிகழ்த்திய சாதனைகள், அடித்தளமாய் நின்ற ஆளுமைகளின் சிறப்புகளை விரிவாக விளக்கிப் பேசினார். ‘திராவிட விழுது’களின் அமைப்பாளர் மோகன் பேச்சாளர்களுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினார்.

வருகை தந்தோரும் கருத்துரைக்கவும், அய்யந் தெளியவும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன. நிகழ்வு ஒருங்கிணைப்பில்  தோழர்கள் பெரியார் நம்பி, சண்முகவேல், வழக்குரைஞர் ஜெயராஜ் ஆகியோர் முன்னின்று பணியாற்றினர்.

பல்வேறு தரப்பினரையும் வருவித்து திராவிட இயக்கங்களின் தோற்றம், வளர்ச்சி, சாதனைகள், தேவைகள் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் ஒட்டன்சத்திரம் திராவிட விழுதுகள் நடத்திய இவ்விரண்டாவது நிகழ்வும் பெரும்பயனை ஏற்படுத்தியது.

பெரியார் முழக்கம் 06122018 இதழ்

You may also like...