பெரியார் குறித்து மு.க. ஸ்டாலினுக்கு முக்கிய விளக்கம்: கொளத்தூர் மணி

தி இந்து தமிழ் நாளிதழில் தி.மு.க. செயல்தலைவர் முக. ஸ்டாலின்  பேட்டி அளித்துள்ளார். அதில் ஒரு கேள்வியாக, “உங்கள் அப்பா பெரியார் பாதையைத் தேர்ந்தெடுத்தார். உங்கள் பாதை அண்ணா பாதையா, பெரியார் பாதையா?” என்று கேட்கப்பட்டது.
பெரியார் சிலையுடன் ஸ்டாலின் – பெருமாள் கோயிலில் துர்கா ஸ்டாலின்

அதற்கு ஸ்டாலின், “ என் பாதை அண்ணா பாதை. அதேசமயம், அண்ணாவோட பாதையே பெரியார் பாதையோட நீட்சிதான்கிறதைச் சுட்டிக்காட்ட விரும்புறேன். நாத்திகராக இருந்த பெரியார்தான் ஆன்மிக உரிமைகள் எல்லா சமுகங்களுக்கும் கிடைக்கணும்னு இங்கே இறுதி வரைக்கும் போராடினார். என்னோட மனைவி கோயிலுக்குப் போற படங்களைப் போட்டு என்னை விமர்சிக்கிறாங்க. கல்யாணம் ஆன நாள்லேர்ந்து இது நடக்குது. ஒருநாளும் நான் தடுத்தது இல்லை. அது அவங்க நம்பிக்கை. விருப்பம். ஒரு பெண் கல்யாணம் பண்ணிக்கிட்டாங்கங்கிறதுக்காகவே அவங்களோட விருப்பங்களைக் கைவிடணும்கிறது அடக்குமுறை. நான் அதைச் செய்ய மாட்டேன். எங்கம்மா சாமி கும்பிடுவாங்க. தலைவர் தடையா இருந்தது இல்லை. குன்றக்குடி அடிகளாரைப் பார்க்கப் போனப்போ திருநீறு பூசிக்கிட்டிருக்கார் பெரியார்; அடிகளார் நம்பிக்கையைக் குலைக்கக் கூடாதுங்கிறதுக்காக! தனிப்பட்ட மத உணர்வுகளை மதிக்கிறது; வழிபாட்டு உரிமையில சம உரிமையை நிலைநாட்டுறது, மதவாத அரசியலை எதிர்த்து உறுதியா நிக்குறது… திமுகவோட இந்தப் பாதையில் மாற்றம் இருக்காது” என்று பதில் அளித்துள்ளார்.

இதுதான் பெரியார் பற்றாளர்களை  வருத்தமுற செய்துள்ளது.

“இந்து மதத்தில் நிலவிய பொருந்தா சடங்கு சம்பிரதாயங்கள் பலவற்றை எதிர்த்து அழித்தவர் தந்தை பெரியார். அவரைக் குறிப்பிட்டு, தனது தாய், மனைவி ஆகியோர் சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை கொண்டிருப்பதையும் இணைத்து மு.க. ஸ்டாலின் பேசியது சரிதானா” என்ற ஆதங்கம் பெரியார் பற்றார்களிடம் எழுந்துள்ளது.

கொளத்தூர் மணி

இந்த நிலையில்   திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணியிடம் பேசினோம்.

அவர், “பெரியார் கொள்கைகளை ஏற்று இயக்கங்களில் இருப்பவர்களுக்கும் தேர்தல் அரசியலில் இருப்பவர்கலுக்கும் வித்தியாசம் உண்டு. இரண்டாம் வகையினர் முழுமையாக நூறு சதவிகிதம் பெரியார் கருத்தை ஒட்டி செயல்படுவது கடினம்.

மனைவி என்பதற்காக,  கணவன் தனது கருத்துக்களை அவள் மீது திணிக்க முடியாது என்பது சரியான வாதம்தான்.  அதே நேரம் நல்ல கருத்துக்களை மனைவியோ – கணவனோ தனது இணையருக்கு புகட்டுவது அவசியம். ஆனால் அதற்கான முயற்சியை ஸ்டாலின் மேற்கொள்ளவில்லை என்பது தெரிகிறது.

தவிர பெரியார் பாதை என்பது நாத்திகம் மட்டும் இல்லை. சாதி வேறுபாடு ஒழிப்பு, தீண்டாமை ஒழிப்பு, நம்மை அடிமைப்படுத்தும் பார்ப்பன கருத்தியல்களை அகற்றுவது, பெண் சுதந்திரம்.. இப்படி நிறைய இருக்கின்றன. அவை பற்றிகூட மனைவி உட்பட அனைவரிடத்தலும் பிரச்சாரம் செய்யலாம். செய்வது அவசியம்.

பெரியார் – குன்றக்குடி அடிகளார்

குன்றக்குடி அடிகளாரை சந்திக்க பெரியார் சென்றபோது நடந்ததைச் சொல்கிறேன். அங்கு அடிகளாருக்கு அடுத்தபடியாக கட்டளைத்தம்பிரான் என்று இருப்பார்கள். அந்த மடத்துக்கு வருபவர்களை திருநீறு பூசி வரவேற்படு அங்கு நிலவும் வழக்கம். அதன்படி பெரியாருக்கும் கட்டளைத்தம்பிரான் ஒருவர் திருநீறு பூசிவிட்டார். அவை நாகரீகம் கருதி பெரியார் அதைத் தடுக்கவில்லை. அதேந நேரம், “களைப்பாக இருக்கிறது. முகம் கழுவ வேண்டும்” என்று சொல்லி முகம் கழுவி திருநீறை அழித்துவிட்டார். இதுதான் நடந்தது.

அந்த ஒரு நிகழ்வையும் காலம் முழுதும் திருநீறு குங்குமம் வைத்து சாஸ்திர சடங்குகளை நம்புபவர்களையும் ஒப்பிடுவது சரியல்ல” என்றார் கொளத்தூர் மணி.

You may also like...