மதங்கள் தேவையில்லை கவிஞர் இன்குலாப்

உலகின் அழகை உணரவும் நுகரவும்

மனந்தான் வேண்டும்

மதம் ஏன் வேண்டும்?

 

மணக்கும் பூவில் முகங்கள் பதிக்க

மதங்கள் தேவையில்லை

வானில் சுடரும் மீனை அளக்க

மதங்கள் தேவையில்லை

 

விடுதலை வானில் விரியும் சிறகில்…

மதங்களின் குறிகளில்லை

வீசும் காற்று மதங்கள் பார்த்து

நம்மைத் தொடுவதில்லை

 

கரைகளில் நின்று அலைகளை நோக்கவும்

கவிதை வரியில் கடல்களைத் தேக்கவும்

தரையில் புல்லின் பசுமையை அணைக்கவும்

தூரிகை முனையில் திரும்ப நினைக்கவும்

 

மனந்தான் வேண்டும்

மதம் ஏன் வேண்டும்?

காலைக் கழுவிக்குடிக்கச் சொல்லும்

 

 

மதங்களின் ஆசாரம்

கங்கையைக் கழிவுக் கூவமாய் மாற்றும்

மதங்களின் ஆசாரம்

ஆயுதங்களுக்குப் பூசை நடத்தும்

மதங்களின் ஆசாரம்

ஆனால் மனிதனைச் சாதியால் மிதிக்கும்

மதங்களின் ஆசாரம்!

 

நரகல் கண்டால் மிதியாமல் நடக்க

மதங்கள் தேவையில்லை

நாறும் சகதியில் குளியாதிருக்க

மதங்கள் தேவையில்லை…

 

மணக்கும் பூவில் முகங்கள் பதிக்க

மதங்கள் தேவையில்லை…

மனிதரை மனிதர் தோழமை கொள்ள

மதங்கள் தேவையில்லை

மனிதரைப் பிரித்துச் சுவர்களை வளர்க்கும்

மதங்கள் தேவையில்லை…

மனித உறவை மனிதர்க்கு மறுக்கும்

மதங்கள் தேவையில்லை.

நிமிர்வோம் ஏப்ரல் 2017 இதழ்

You may also like...