இறந்தவனின் மக்காச் சோள வயல் – வே.ராமசாமி

இரைத்துப் பாய்ச்சிவிட

கிணற்றுப் பால்

கசியவில்லை

 

தோகை உச்சியில்

கால்வைத்து விளையாட

மழையும் வரவில்லை

 

அடித்தூரில் வாய்வைய்க்க

அருங் குளத்து நீரில்லை

 

இறந்தவனின்  மக்காச் சோள வயல்

ஒரு முழத்திற்கு மேல் வளரவில்லை

 

அறுத்து மாட்டுக்குப் போட

யாரும் முன்வரவில்லை

 

ஆடு பத்திவிட

ஆட்டுக்காரர்கள்

துணியவில்லை

 

பட்டுப்போன பயிரென்றால்

பத்திவிட்டு விடலாம்

எப்படி மேய்ப்பது

இறந்தவனின் புஞ்சையை

 

வெம்பரப்பு பூமியில்

பிணத்தின் வாசனை பரவப் பரவ

அடைபட்ட காட்டில்

ஆநிரைகள் விக்கி நிற்கின்றன

 

இறந்தவனின் மக்காச்சோள வயல்

ஒரு முழத்திற்கு மேல் வளரவில்லை

 

காட்டு முயல்கள்

காலெடுத்து

ஒடித்து ஒடித்து

விளையாடுகின்றன

ஒன்றும் புரியாமல்

நிமிர் பிப்ரவரி 2017 இதழ்

You may also like...