உச்சநீதிமன்றத்தின் மீது பழி போட்டு தப்பிக்கும், ஜெயலலிதா

‘சூப்பர் ஸ்பெஷாலிட்டி’ மருத்துவமனை இடஒதுக்கீடு குறித்து தி.மு.க. தலைவர் கலைஞர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டு வரும் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கான மருத்துவர் நியமனத்தில் இடஒதுக்கீடு பின்பற்றப்படாததற்கு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புதான் காரணம் என்று முதல்வர் ஜெயலலிதா கூறியிருக்கிறார். ஆனால், உச்சநீதிமன்றம், இட ஒதுக்கீட்டை பின்பற்றுவது மத்திய அரசின் முடிவாகும் என்று திட்டவட்டமாகத்  தனது தீர்ப்பில் தெரிவித்துவிட்டது.

எனவே, தமிழகத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக் காரணமாகத்தான், இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்று ஜெயலலிதா கூறியிருக்கும் காரணம், மக்களை ஏமாற்றுவதற்கும், சமூக நீதியைக் குழிதோண்டி புதைப்பதற்குமான ஒன்றே தவிர வேறல்ல.

உச்சநீதிமன்றம் 18.7.2013 அன்று தீர்ப்பளித்த பிறகு, ஜூலை 31 ஆம் தேதி புதுவை ஜிப்மர் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் 114

மருத்துவ அதிகாரிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான அறிவிப்பு வெளி வந்தது. அப்போது உச்சநீதிமன்றத் தீர்ப்பைக் காரணம் காட்டி இடஒதுக்கீடு கிடையாது என்று மத்திய அரசு கூறவில்லை. இடஒதுக்கீட்டின்படி பிற்படுத்தப்பட்டோருக்கும், தாழ்த்தப்பட்டோருக்கும் இடஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்வி நிறுவனத்திலேயே இடஒதுக்கீடு தொடர்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால், இடஒதுக்கீட்டைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்தும்படி, மத்திய சுகாதாரத் துறை கூறியதன் அடிப்படையில் 148 உதவி மருத்துவப் பேராசிரியர் பணியிடங்கள் இடஒதுக்கீட்டைக் கடைப்பிடித்துத்தான் நிரப்பப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகும், மத்திய அரசின் நிறுவனங்களில் இடஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், தiமிழக அரசு அதனை அமுல்படுத்தாது, உச்சநீதிமன்றத்தின் மீதும், மத்திய அரசின் மீதும் பழி போடுவது என்பது எத்தகைய மோசடி வித்தை என்பதை இங்குள்ள தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பெரியார் முழக்கம் 23012014 இதழ்

You may also like...