பிப்.25இல் மேட்டூரில் இரு பெரும் விழாக்கள்!

கொள்கை உறவுகளே!        தோழமை நெஞ்சங்களே!

மேட்டூர் பெரியார் இயக்கத்தின் கொள்கைப் பாசறை; தோழர் கொளத்தூர் மணி தலைமையில் சுமார் 40 ஆண்டுகாலமாக நமது சமுதாயத்தின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து பணியாற்றுகிறோம்! தாங்கள் அறிவீர்கள்.

இது ஒரு தொடர் ஓட்டம். பெரியார் தந்த கொள்கைச் சுடரை ஏந்தி ஓடுகிறோம். திராவிடர் கழகமாக, பெரியார் திராவிடர் கழகமாக – இப்போது திராவிடர் விடுதலைக் கழகமாக பயணம் தொடருகிறது. அண்மைக் காலமாக கடந்து வந்த பாதையின் – சில சுவடுகள் இதோ:

2007இல் ஜாதி-தீண்டாமைக்கு எதிராக பரப்புரைப் பயணம். இறுதியில் தீண்டாமையை அடையாளப்படுத்தும் தேனீர்க் கடை இரட்டைக் குவளைகளை உடைத்து – கைது.

2010இல் இரட்டை சுடுகாடுகளை இடிக்கும் போராட்டம் – கைது.

2012இல் ஜாதிய வாழ்வியலை எதிர்த்து ஊர்-சேரி பிரிவினைக்கு எதிராகப் பரப்புரைப் பயணம்.

2013இல் 40 நாட்கள் சுயமரியாதை சமதர்மப் பரப்புரைப் பயணம். ஜாதி மறுப்புத் திருமணத் தம்பதியினருக்கு கல்வி, வேலை வாய்ப்புகளில் தனி ஒதுக்கீடு கோரியும், நமது தாயகமாம் தமிழகத்தின் தொழில் – இயற்கை வளங்களைச் சுரண்டி வரும் பார்ப்பன-பன்னாட்டு சுரண்டலை எதிர்த்தும் – மக்களிடையே விழிப்புணர்வு பரப்புரை.

தமிழகத்தில் ஜாதி மறுப்புத் திருமணங்களுக்கு எதிராக தீண்டாமை ஒடுக்குமுறைகளை நியாயப்படுத்த முன் வந்த, ஜாதி வெறி சக்திகளை எதிர்த்துப் போராட்டம், இயக்கம் – தோழர்கள் கைது.

ஈழத் தமிழர் விடுதலைக்கான தொடர் போராட்டங்கள்; அதற்காக அடக்குமுறை சட்டங்களின் கீழ் கைது; பல மாதங்கள் சிறை வாசம்.

அரசின் தடைகளைத் தகர்த்து, காவல் நிலையங்களில், அலுவலகங்களில் மதச் சடங்குகளை நடத்துவதற்கு எதிராக நேரடி போராட்டம் – தோழர்கள் கைது.- இதன் தொடர்ச்சியாய் இப்போது ஜாதி மறுப்புத் திருமணங்களை வலியுறுத்தி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக சுயமரியாதை – சமதர்ம பரப்புரைக்கான 10 நாட்கள் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கியுள்ளோம்.

மே 25இல் – மேட்டூரில் நிறைவு விழா!

கழகத்தின் வார ஏடாக 13 ஆண்டுகளாக வெளிவரும் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வெளியிட்டுள்ள ‘ஜாதி எதிர்ப்பு’ மலர் வெளியீட்டு விழா!

ஜாதிக்கு ஆதாரமான மனுசாஸ்திரம் – பார்ப்பனியம் – சமூக அமைப்பு குறித்த ஏராளமான தகவல்கள்; அரிய கட்டுரைகள்; திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர் செயல்பாடுகள்; கழகம் நடத்திய ஈரோடு மாநாட்டு உரைகள் அனைத்தையும் உள்ளடக்கிய ஆவணமாக வெளி வந்திருக்கிறது. நாட்டில் தேர்தல் களம் சூடுபிடித்து நிற்கிறது. தேர்தல் வரும்; போகும். ஆனால் சமுதாயத்தில் ஆழமாக வேர் பிடித்து நிற்கும் நோய்களான ஜாதியம் – மூட நம்பிக்கை – பெண்ணடிமை – பறி போகும் தமிழர் உரிமைகள் – நம்மை இழிவுபடுத்தும் பார்ப்பனிய பண்பாட்டு ஆதிக்கங்களை எதிர்த்துக் களத்தில் நிற்கிறது திராவிடர் விடுதலைக் கழகம்!

எங்களை பெரியார்  தத்துவம் மட்டுமே இயக்கிக் கொண்டிருக்கிறது! எங்களின் இந்த தொடர் களப்பணிகளுக்கு பலம் – உங்களின் ஆதரவும் –

ஆதரவு சக்திகளும் – தோழமை அரவணைப்புமே! நிதி உதவி தாருங்கள்!

ஆதரவுக் கரம் நீட்டுங்கள்! நம் தமிழர் சமுதாயத்தின் மான மீட்புப் பணிக்கு உங்கள் பங்களிப்பையும் வழங்கிடுங்கள்!

– திராவிடர் விடுதலைக் கழகம்

(சேலம் மேற்கு மாவட்டம்)

பெரியார் முழக்கம் 13022014

You may also like...