ஜெர்ரி மாண்டரிங்’கில் மறைந்துள்ள ஆபத்து
உலகம் முழுவதும் தொகுதி மறுவரையறையின் போது பாகுபாடான நோக்கத்துடன் எல்லைகளை மாற்றுவதே ஜெர்ரிமாண்டரிங் (Gerryman -dering) என்பதன் பொருள். ஆனால் இத்தகைய குற்றச்சாட்டுகளை நிரூபிப்பது மிகவும் கடினமானதாகும். ஏனெனில் அதற்கான சட்ட மற்றும் தொழில்நுட்ப அளவுகோல்கள் மிகவும் சிக்கலானவை.
உலக அனுபவம்
இந்தியாவிலும், தொகுதி மறுவரையறை ஆணையத்தின் முடிவு இறுதியானது; அதை நீதிமன்றத்தில் கேள்விக்கு உள்ளாக்க முடியாது. நியாயமான மற்றும் பயனுள்ள பிரதிநிதித்துவம் என்பதற்கு என்ன பொருள் என்பது குறித்த நிறுவனரீதியான கட்டமைப்பும் புரிதலும் இல்லை. இதுவே உலகம் முழுவதும் மத அடிப்படையிலான ‘ஜெர்ரி மாண்டரி’ங்கை எதிர்த்து கேள்வி எழுப்புவதில் ஒரு முக்கியமான தடையாக உள்ளது.
அமெரிக்காவில், இன அடிப்படையிலான ஜெர்ரி மாண்டரிங் மூலம் ஆப்பிரிக்க – அமெரிக்க வாக்காளர்கள் ஒதுக்கப்படுவதைத் தடுக்க 1965-ஆம் ஆண்டின் வாக்குரிமைச் சட்டம் (Voting Rights Act of 1965) இயற்றப்பட்டது. இனஅல்லது மொழிசார் சிறுபான்மையினரின் தேர்தல் பங்கேற்பையும், அவர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பையும் குறைக்கிற எந்த அரசு நடவடிக்கையையும் அந்தச் சட்டம் தடை செய்கிறது. மேலும், சிறுபான்மையினர் பெரும்பான்மை வாக்காளர்களாக உள்ள தேர்தல் தொகுதிகளை உருவாக்குவதை, தொகுதி மறுவரையறை அதிகாரிகளின் சட்டப்பூர்வமான கடமையாக அந்தச் சட்டம் நிர்ணயிக்கிறது.
இஸ்லாமியர் பிரதிநிதித்துவம் சரிவு
இந்தியாவில் இஸ்லாமியர் நாடாளுமன்ற, சட்டமன்றப் பிரதிநிதித்துவம், அவர்களின் மக்கள்தொகை விகிதத்தைவிடக் குறைவாக இருப்பதாகவும், இது அவர்களிடம் அந்நியப்படுத்தப்பட்ட உணர்வை ஏற்படுத்தக்கூடும் என்றும் தேசிய அரசியலமைப்பு செயல்பாட்டு மறுஆய்வு ஆணையம் (National Commission to Review the Working of the Constitution, 2002) தெரிவித்தது. சிறுபான்மையினரிடையே தலைமைத்துவத் திறனை அரசியல் கட்சிகள் வளர்க்கவேண்டும் என்றும், அரசியல் பன்மைத்துவத்தை அரசு வலுப்படுத்த வேண்டும் என்றும் அது பரிந்துரைத்தது. மேலும், தொகுதிகளை மறுவரையறை செய்யும்போது பெரிய அளவிலான பிரதிநிதித்துவ வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்க, தொகுதி மறுவரையறை ஆணையத்தின் அமைப்பே சமூகத்தின் பன்முகக் கட்டமைப்பைப் பிரதிபலிக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
இந்திய இஸ்லாமிய சமூகத்தின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலையை ஆய்வு செய்வதற்காகஅமைக்கப்பட்ட சச்சார் குழு (Sachar Committee, 2006), தனது அறிக்கையில் இஸ்லாமியர்கள் எதிர்கொள்ளும் நிறுவனமயமாக்கப்பட்ட பாகுபாடுகளையும், அவர்களின்அரசியல் பங்கேற்பு பலவீனப்படுத்தப்பட்டதையும் சுட்டிக்காட்டியது. பலவகையான நடைமுறைகள் மூலம் இஸ்லாமியர்கள் அரசியல் பங்கேற்பிலும்பிரதிநிதித்துவத்திலும் இருந்து விலக்கப்பட்டதாக அந்த அறிக்கை குற்றம்சாட்டியது. இத்தகைய விலக்கம், அந்தச்சமூகத்திற்கு குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார முன்னேற்ற வாய்ப்புகளை மறுத்துவிட்டதாக சச்சார் குழு சுட்டிக்காட்டி யுள்ளது.
இஸ்லாமியர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட இரண்டு முக்கியமான ஒதுக்கல் முறைகளை அது சுட்டிக்காட்டியது:
1. முதலாவது, இஸ்லாமியர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்காமல் விட்டது. இதன் மூலம் அவர்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பறித்துவிட்டதாக அறிக்கை கூறியது.
2. இரண்டாவது, இஸ்லாமியர்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளை “இடஒதுக்கீட்டுத் தொகுதிகள்” (Reserved Constituencies) என்று அறிவித்தது. இதன் மூலம் அவர்களின் அரசியல் பங்கேற்பு மறுக்கப்பட்டதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டியது. இந்த இரண்டு அறிக்கைகளும், நீண்டகாலமாக இஸ்லாமியர்கள் அரசியல் பங்கேற்பிலிருந்தும் பிரதிநிதித்துவத்திலிருந்தும் முறையாக விலக்கப்பட்டு வந்துள்ளனர் என்பதை வெளிப்படுத்துகின்றன.
அசாம் – காஷ்மீர் கதைகள்
2023ஆம் ஆண்டு, அசாமில் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எல்லைகளைத் தொகுதி மறுவரையறை ஆணையம் (Delimitation Commission) மாற்றி அமைத்தது. தேர்தல் ஆய்வு நிபுணர் யோகேந்திர யாதவ், அசாமில் நடைபெற்ற தொகுதி மறுவரையறையின் போது மதவெறி அடிப்படையிலான ஜெர்ரி மாண்டரிங் (Communal Gerrymandering) மேற்கொள்ளப்பட்டதால் இஸ்லாமியர்களின் வாக்கு வலிமை திட்டமிட்டு நீர்த்துப்போகச் செய்யப் பட்டதாகக் குற்றம்சாட்டினார்.அசாமில் 126 தொகுதிகளில் 35 தொகுதிகளில் பெரும்பான்மையாக இருந்த இஸ்லாமியர்கள், தொகுதி மறுவரையறைக்குப் பிறகு வெறும் 20 தொகுதிகளுக்குள் மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டனர்.
அதேபோல, ஜம்மு-காஷ்மீரில் 2022ஆம் ஆண்டு நடைபெற்ற தொகுதி மறுவரையறையும் காஷ்மீரில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை ஜம்மு பிராந்தியத்துடன் ஒப்பிடும்போது பலவீனப்படுத்தியது. இந்து பெரும்பான்மை கொண்ட ஜம்மு பிராந்தியத்தில் ஆறுஇடங்கள் அதிகரிக்கப்பட்ட நிலையில், இஸ்லாமியர் பெரும்பான்மை கொண்ட காஷ்மீர் பிராந்தியத்திற்கு ஒரேஒரு கூடுதல் இடம் மட்டுமே வழங்கப்பட்டது.
14% மக்கள்… வெறும் 4½ % எம்பிக்கள்
நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய எம்.பி.க்களின் பிரதிநிதித்துவமும் அண்மைக் காலங்களில் சரிவைக் கண்டுள்ளது. 1952ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தில் இஸ்லாமிய எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் 5.11 சதவீதமாக இருந்தது; அது 1980ஆம் ஆண்டில் 9 சதவீதமாக உயர்ந்தது. அதன் பின்னர் தொடர்ந்து வீழ்ச்சி ஏற்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அவர்களின் பிரதிநிதித்துவம் வெறும் 4.42 விழுக்காடு மட்டுமே. ஆனால் நாட்டின் மக்கள் தொகையில் இஸ்லாமியர்களின் பங்கு 14 விழுக்காடாக உள்ளது. தற்போதைய நாடாளுமன்றத்தில் சுமார் 18கோடி இஸ்லாமியர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவது வெறும் 24 இஸ்லாமிய எம்.பி.க்கள் மட்டுமே. மேலும், அனைத்து அரசியல் கட்சிகளும் இஸ்லாமிய வேட்பாளர்களுக்கு வழங்கும் வாய்ப்பிலும் வெளிப்படையான குறைவு ஏற்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டில் 320 இஸ்லாமிய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்ட நிலையில், 2024ஆம் ஆண்டில் அது 94 ஆகக் குறைந்தது. தேர்ந்தெடுக்கப்பட்ட 24 இஸ்லாமிய பிரதிநிதிகளில் 21 பேர் இந்தியா கூட்டணியைச் சேர்ந்தவர்கள்; ஒருவர் அசாதுதீன் ஓவைசி- அகில இந்திய மஜ்லிஸ்-இ-இத்தெஹாதுல் முஸ்லிமீன் (AIMIM) கட்சியைச் சேர்ந்தவர்கள்; இருவர் சுயேச்சை வேட்பாளர்கள். இதே போல மாநில சட்டமன்றங்களிலும் அண்மைக் காலங்களில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவம் குறைந்துள்ளது. தற்போதைய தொகுதி மறுவரையறை வழிமுறையும், நாடாளுமன்றத்தில் இஸ்லாமியர்களின் பிரதிநிதித்துவத்தை மேலும் குறைத்து மறுப்பதற்கான இன்னொரு முயற்சியாகவே தெரிகிறது; இது வலதுசாரி அரசியலின் நீண்டகால நிகழ்ச்சிநிரலாகும்.
– பிரண்ட் லைன் 30.4.2026
பெரியார் முழக்கம் இதழ் 03092026
