ஜாதித் தடைகளை தகர்த்த 14,500 உடல் உறுப்புகள்!

உடல் உறுப்புகளை கொடையாக வழங்குவதில் தமிழ்நாடு முன்னிலையில் நிற்கிறது. கடந்த ஆறு மாதங்களில் மரணம் அடைந்த 169 பேர்களது உறுப்புகள் கொடையாக பெறப்பட்டுள்ளன. கொடையாக பெறப்பட்ட 937 உறுப்புகள் உயிரோடு போராடியவர்களுக்குப் பொருத்தப்பட்டு உயிர் வாழ்க்கை தரப்பட்டுள்ளது என்று தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய செயலாளர் அறிவித்துள்ளார், இது ஆறு மாதங்களில் மட்டுமே பெறப்பட்டுள்ள கொடை. இது 2008-ஆம் ஆண்டு முதல் இதுவரை 2,490 பேரிடமிருந்து 14,533 உறுப்புகள் கொடையாக பெறப்பட்டு மனித உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. உடலுக்கோ உடல் உறுப்புக்கோ ஜாதி அடையாளங்கள் இல்லை! உறுப்புகள் ஜாதி பார்ப்பதில்லை!

எந்த ஒரு ஜாதி பற்றாளரும் பிற ஜாதியினரின் உறுப்பு தங்கள் குடும்ப உறுப்பினருக்கு தேவை இல்லை என்று மறுப்பதும் இல்லை. எப்போது கிடைக்கும் என்று துடிக்கிறார்கள். நோய்களும் ஜாதி பார்ப்பதில்லை; சிகிச்சைகளுக்கும் ஜாதி இல்லை; எல்லா ஜாதியினருக்கும் ஒரே சிகிச்சைதான்! ஜாதி கடந்து உறுப்புகள் பொருத்துவதை மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்கள். ஆனால் ஜாதி கடந்து உள்ளங்கள் பொருந்தும் போது வெறுக்கிறார்கள்; அரிவாள் தூக்குகிறார்கள். மனித உறுப்புகள் உயிரைக் காக்கின்றன. மனித ஜாதிகள் உயிரைப் பறிக்கின்றன இதுதான் பார்ப்பனியத்தின் சனாதன வாழ்க்கை!
பெரியார் முழக்கம் இதழ் 23072026

You may also like...