எல்லா கொள்கைகளையும் செயல்படுத்துகிறார் மோடி- ஆர்.எஸ்.எஸ் பாராட்டு
`ஆர்.எஸ்.எஸ் விழுமியங்களை தனக்கே உரிய பாணியில் பொதுமக்களிடம் கொண்டு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, அதன் மிகச் சிறந்த பிரதிநிதியாகவும் திகழ்கிறார்’ என, அந்த அமைப்பின் பொதுச்செயலர் தத்தாத்ரேய ஹொசபலே புகழாரம் சூட்டியுள்ளார். ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் பொதுச்செயலராக உள்ள தத்தாத்ரேய ஹொசபலே, அமெரிக்கா சென்றுள்ளார். வாஷிங்டனில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: சமூக நல்லிணக்கம், காலனித்துவ ஆதிக்க மனப்பான்மையில் இருந்து விடுதலை, குடும்ப விழுமியங்களை வலுப்படுத்தல், சமூக நல்லொழுக்கம் மற்றும் நிலையான வளர்ச்சி திட்டங்கள் ஆகிய ஐந்து அம்சங்களை, அடுத்த 25 ஆண்டுகளுக்கான இலக்காக ஆர்.எஸ்.எஸ்., நிர்ணயித்துள்ளது. இந்த இலக்குகளை நோக்கி பிரதமர் மோடி சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அதே வார்த்தைகளை பிரதமர் பயன்படுத்தாமல் இருக்கலாம். ஆனால், தனக்கே உரிய தனித்துவ பாணியில் ஆர்.எஸ்.எஸ், கருத்துக்களை அவர் செயல்படுத்தி வருகிறார். உதாரணமாக, ஒவ்வொருவரும் மரம் நட வேண்டும் என நாங்கள் சொல்கிறோம். பிரதமரோ, ‘தாயின் பெயரில் ஒரு மரம் நடுங்கள்’ என கூறி, இதனை நெகிழ்ச்சியான இயக்கமாக மாற்றுகிறார். சிறந்த பிரதிநிதி மத்திய அரசின் சுயசார்பு இந்தியா திட்டம், 2022ல் நடந்த சுதந்திர தின விழா உரையின் போதும், பிரதமர் குறிப்பிட்ட ஐந்து உறுதிமொழிகள் ஆர்.எஸ்.எஸ்., கொள்கையின் பிரதிபலிப்புகள் தான்.
ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமராக , இருந்தாலும் தன் கலாசார வேர்களை அவர் மறக்கவில்லை. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நோக்கங்களையும் நன்கு உணர்ந்து இருக்கிறார். அந்த அமைப்பின் மிகச் சிறந்த பிரதிநிதியாக செயல்படுகிறார். கடந்த, 1980ல் பா.ஜ., உருவான காலத்தில் இருந்தே, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புடன் அதற்கு இருக்கும் தொப்புள் கொடி உறவு மாறாமல் இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.
பெரியார் முழக்கம் இதழ் 30042026
