பூணூலைக் காப்பாற்றத் துடிக்கும் உயர்நீதிமன்றம்!
கர்நாடகாவில் இன்ஜினியரிங், விவசாயம் உள்ளிட்ட படிப்புகளில் சேர மாணவர்களுக்கு, சி.இ.டி., என்ற, பொது நுழைவுத்தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்காக பெங்களூரு மடிவாளாவில் உள்ள கிருபாநிதி கல்லுாரியிலும் தேர்வு மையம் அமைக்கப்பட்டு இருந்தது. தேர்வு எழுதச் சென்ற மாணவ, மாணவியர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, ஆனந்த் சுதிர் ராவ் உள்ளிட்ட ஐந்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பூணுால் அணிந்திருந்தது தெரிய வந்தது. அவர்களிடம் பூணுாலை அகற்றி விட்டு தேர்வு எழுத செல்லும்படி, கல்லுாரி ஊழியர்கள் சுதாகர், கிரிஜம்மா, சரிதா ஆகியோர் கூறியுள்ளனர்.
`ஐந்து மாணவர்களும் பூணுால் தங்களது சம்பிரதாயம்; அதனை அகற்ற முடியாது’ என்று கூறியும் ஊழியர்கள் கேட்கவில்லை. பூணுாலை அகற்றினால் தான் தேர்வு எழுத அனுமதிப்போம் என்று கறாராக கூறியுள்ளனர். இதனால், வேறு வழியின்றி ஐந்து மாணவர்களும் பூணுாலை அகற்றி விட்டு தேர்வு எழுதச் சென்றனர்.
தேர்வு முடிந்து வீட்டிற்கு சென்றதும் பூணுாலை அகற்றியது பற்றி, பெற்றோரிடம் கூறினர். அதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், கிருபாநிதி கல்லுாரி முன் கூடினர். அவர்களுடன் ஹிந்து அமைப்பினரும் ஒன்று கூடி கல்லுாரி நிர்வாகம், அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினர். கடந்த ஆண்டும் சி.இ.டி., தேர்வு நடந்த போது, பீதர், சிவமொக்காவில் இரண்டு மாணவர்களின் பூணுால் அகற்றப்பட்டது சர்ச்சையானது.
இந்த விவகாரம் உயர் நீதிமன்றம் வரை சென்றது. பூணுாலை அகற்ற மாணவர்களுக்கு உத்தரவிடக்கூடாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அந்த உத்தரவையும் மீறி, தற்போது ஐந்து மாணவர்கள் பூணுால் அகற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், கல்லுாரி ஊழியர்கள் சுதாகர், கிரிஜம்மா, சரிதாவை கைது செய்து விசாரிக்கின்றனர்.மாணவர்களின் பூணூலை அகற்ற வற்புறுத்திய மூன்று பேராசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.பூணூல் அணிவதன் நோக்கம் பிராமணர் அல்லாதவர்களை சூத்திரர்கள். அதாவது பார்ப்பனருக்கு கீழ்சேவை செய்யும் இழிமக்கள் என்பதை உணர்த்துவதுதான். தடைசெய்யப்பட வேண்டியது பூணூலே தவிர, பூணூல் நீக்கம் அல்ல!
பெரியார் முழக்கம் இதழ் 30042026
