எனக்குப் பிறகு எவன் கேட்பான்? வேன் வழங்கும் விழாவில் பெரியாரின் உணர்ச்சி உரை!
வரலாற்றுச் சிறப்புமிக்க இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள் உரைகளுக்குப் பின்னர் இறுதியில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை:
இந்தப் பொருள்களை எல்லாம் நான் என்ன செய்யப் போகிறேன் என்று எனக்கே தெரியவில்லை. கார் ஒன்றுதான் எனக்கு அதிகம் பயன்படும். இந்த புதிய வேனில் சவாரி செய்வதால் ஒன்றும் நான் அதிகம் வாழப் போவதில்லை. ஆனால் இதைப் போன்று விழாக்களை காணும் போது தான் எனக்கு உற்சாகம் ஏற்படுகிறது. இந்த கார் வாங்குவதற்கு தமிழ்நாட்டு மக்கள் ஏராளமாக கேட்டதற்கு மேல் அதிகமாக கொடுத்துள்ளார்கள். அதில் குறிப்பாக தஞ்சை மாவட்டம் 40,000 ரூபாய் அளித்திருக்கிறது. அந்த அளவுக்கு நமது கொள்கைக்கு நாட்டில் வெற்றி கிட்டி இருக்கிறது; செல்வாக்கு பெருகிவிட்டது.
எனக்கு இன்றைக்கு வயது 94 அடுத்த மாதம் பிறந்தால் 95 வயது. 60 வருடங்களுக்கு முன்பு எமது மக்களின் யோக்கியதை என்ன அதாவது நாம் முயற்சி எடுப்பதற்கு முன்பு இந்த நாட்டு மக்களின் யோக்கிதை என்ன?
1925-வாக்கிலே நாம் நூற்றுக்கு 5 பேர் தான் படித்திருந்தோம். ஏன் அந்த நிலைமை? பள்ளிக்கூடங்களே இல்லாது போயிற்றே? அந்த நேரத்தில் கூட பார்ப்பான் நூற்றுக்கு நூறு படித்து இருந்தானே! அது மட்டும் எப்படி முடிந்தது? இந்த நாட்டை சேரன் ஆண்டான்; சோழன் ஆண்டான்; என்கிறார்களே ஏன் நாம் மட்டும் படிக்க முடியவில்லை? காரணம் அவர்களெல்லாம் இந்து மதத்தின்படி ஆண்டார்கள் அந்த மதத்திலேயே சூத்திரன் படிக்கக் கூடாது என்று கூறுகிறது.
குளித்த குதிரையும் படித்த சூத்திரனும்!
குளித்த குதிரையும் படித்த குத்திரனும் ஒன்று என்று மனுதர்மத்தில் இருக்கிறது. அதன்படி அவர்கள் ஆண்டதினாலே நாமெல்லாம் படிக்க வாய்ப்பு இல்லாது போயிற்று. நாம் தலையெடுத்து முயற்சி செய்தோம்; நமக்கு கல்வி கிடையாது என்று கூறும் மதத்தை ஒழிப்பது; கடவுளை தீர்த்துக் கட்டுவது? அவற்றிற்கு ஆதரவளிக்கும் காந்தியை ஒழிப்பது; அவற்றையெல்லாம் காப்பாற்றும் பார்ப்பானை தரைமட்டமாக்குவது என்று முயற்சி செய்து பாடுபட்டோம்; அதனால் மாற்றம் பெற்றோம். சும்மா என்னை பாராட்டுகிறார்கள்; உண்மை என்னவென்றால் கடவுளை செருப்பால் அடித்ததனால் முன்னேறினோம்; மதத்தை மீறியதால் தான் பிழைத்தோம்.
நான் என்ன அதிசயம் செய்து விட்டேன்! மலையை புரட்டிப் போட்டேனா? வில்லை வளைத்தேனா? ஆகாயக் கப்பலை கண்டுபிடித்தேனா? இல்லையே! நான் ஏதாவது செய்தேன் என்றால் சாமியை செருப்பால் அடித்தது தான்; சாக்கடையில் போடச் செய்ததுதான்.
தோழர்களே! இந்தியாவில் இந்த காரியத்தை நாம் செய்யவில்லை என்றால் நாம் ‘சூத்திரன்’ தானே மறுக்க முடியுமா? இந்தியாவிலேயே இரண்டு பிரிவு தான் இருக்கிறது. “பிராமணன், சூத்திரன்” என்ற இரண்டு பிரிவு தானே இந்து மதம்; இந்து என்று ஒப்புக் கொண்டால் அது பண்டார சன்னதியாக இருந்தாலும் ’சூத்திரன்’ தானே. ஒவ்வொரு பயலும் நெற்றியிலே சாம்பலை பூசிக் கொள்கிறானே! சிவ!, சிவா என்கிறானே! அவன் யோக்கியதை என்ன? கோயிலுக்குள் எந்த இடம் வரை உள்ளே போகிறான்? கர்ப்பக்கிரகத்துக்குள் போக உனக்கு யோக்கியதை உண்டா? ஏன் உனக்கு அந்த யோக்கியதை இல்லை? இதைப் பற்றி நீ வெட்கப்படுகிறாயா? இந்த இழிவு எப்போது நீங்குவது?
வெட்கப்படுங்கள்
பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்த கலைஞர் இந்த நாட்டின் முதல்வராக முடிகிறது. இந்த சமூகத்திலிருந்து ஒவ்வொருவராக வர முடிகிறது என்றால்; அது என் கொள்கைக்கு கிடைத்த வெற்றி. ஆனால் இந்த கோயில் கர்ப்பக் கிரகத்தில் செல்ல முடியவில்லை? நாம் வெட்கப்பட வேண்டாமா?
தோழர்களே! உங்களுக்கு ஒன்று சொல்லிக் கொள்கிறேன். நான் செத்துப் போனாலும் நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும். என்றைக்கு இந்த கோயிலுக்கும் கடவுளுக்கும் மதத்திற்கும் முழுக்குப் போடுகிறார்களோ; என்றைக்கு அவற்றையெல்லாம் குப்பைத் தொட்டியில் வீசுகிறார்களோ; அன்றைக்குத்தான் நீங்கள் மனிதர் என்று அர்த்தம்! அதுவரை உங்களுக்கு முன்னேற்றம் ஏது?
இன்னும் எத்தனை நாளைக்கு சொல்லிக் கொண்டே இருக்க முடியும்! எனக்குப் பின்னால் எவன் வந்து இவற்றையெல்லாம் செய்யப் போகிறான்? அப்படி எவனாவது சொன்னால் விட்டு வைப்பார்களா என்பதே சந்தேகம்.
நான் உலகைச் சுற்றியவன். அந்த அனுபவத்தை எல்லாம் வைத்துத்தான் கூறுகிறேன். எவனொருவன் நெற்றியில் சாம்பல் பூசி இருந்தாலும் நாமம் போட்டு இருந்தாலும் காரி துப்புங்கள்! அவன் மீது துப்ப வேண்டாம்; வீதியிலே துப்புங்கள். ச்சீ.. நீ ஒரு மனிதனா? இன்னும் பாப்பானின் வைப்பாட்டி மகனாக வாழ ஆசைப்படுகிறாயா? என்று காரித் துப்ப வேண்டும் என்று பெரியார் முழங்கினார். பெரியார் உரையை இறுதிவரை கலைஞர் மேடையிலிருந்து கேட்டார்.
தொகுப்பு: இரா.
Box: நான் என்ன அதிசயம் செய்து விட்டேன்! மலையை புரட்டிப் போட்டேனா? வில்லை வளைத்தேனா? ஆகாய கப்பலை கண்டுபிடித்தேனா? இல்லையே! நான் ஏதாவது செய்தேன் என்றால் சாமியை செருப்பால் அடித்தது தான்; சாக்கடையில் போடச் செய்ததுதான்.
பெரியார் முழக்கம் இதழ் 23042026
