தேர்தல் களத்திலும் மாநில உரிமைகளை மீட்டார் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
இரண்டு மாநில உரிமைகளை மீட்டு தந்திருக்கிறது திராவிட மாடல் ஆட்சி. பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்ட ஆர்.என் ரவியை எதிர்த்து சட்டமன்றத்தில் பல்கலைக்கழகங்கள் தொடர்பாக 9 திருத்தங்களை கொண்டு வந்து நிறைவேற்றினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இதை எதிர்த்து வெங்கடாசலபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். நெல்லை மாவட்ட பாஜக தலைவர் என்ற அடையாளத்தை மறைத்து பொதுநல வழக்கு என்ற முகமூடியோடு வழக்கை தொடர்ந்தார். வழக்கை ஜூன் மாதம் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர். ஆனால் தேர்தலுக்குள் வழக்கை விசாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இப்போதே விசாரணையை நடத்த வேண்டும் என்று மனு போட்டார்.தனது வழக்கு வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில் இதை திமுகவுக்கு எதிரான பிரச்சாரமாக மாற்றுவது அவர்களின் திட்டம். ஆனால் திட்டம் பாஜகவுக்கு எதிராகவே திரும்பி விட்டது; வழக்கை விசாரித்த தலைமை நீதிபதியின் அமர்வு துணைவேந்தர்களை நியமிக்கும் உரிமை மாநில சட்டமன்றத்திற்கே உண்டு என்றும்; ஆளுநரிடமிருந்து அதிகாரங்களை பறித்து தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய சட்ட திருத்தங்கள் செல்லும் என்றும் தீர்ப்பளித்து விட்டது.
அதேபோல் சிறை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் உரிமை மாநில அரசுக்கு உண்டு என்றும்; இதில் ஆளுநர்கள் தலையிட முடியாது என்றும் இரண்டு நாட்களுக்கு முன்பு நீதிமன்றத்தின் தீர்ப்பு வந்திருக்கிறது. இரண்டு தீர்ப்புகளும் ஆளுநராக இருந்த ஆர்.என் ரவியின் அடாவடியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு! இந்தத் தீர்ப்புகள் வரும் நேரத்தில் ஆளுநர் ரவி இங்கே இல்லை; அவர் கல்கத்தா போய்விட்டார். தேர்தலை சந்திப்பதற்கு முன் களத்திலே நின்று கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின் மாநில உரிமைகளை மீட்டுத் தந்து வெற்றி பெருமிதத்துடன் நிமிர்ந்து நிற்கிறார்.
ஆளுநரின் இந்த உரிமை பறிப்புகளை வாய் திறந்து கண்டிக்காதவர் எடப்பாடி பழனிச்சாமி!
பெரியார் முழக்கம் இதழ் 09042026
