பாலியல் கொலையாளிக்கு துணை போகிறதா காவல்துறை?
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியில் 11.12.2025 அன்று இரண்டரை வயது பெண் குழந்தை சாதிய மற்றும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை உடனடியாக கைது செய்யாமலும், சட்டப்படியான சரியான விசாரணையை மேற்கொள்ளாமலும் அஞ்செட்டி காவல் நிலைய ஆய்வாளர் சுமித்ரா மிகுந்த அலட்சியமாக செயல்பட்டு வந்தார்.
அதனால் காவல் ஆய்வாளர் சுமித்ராவையும், இவ்வழக்கில் வேறு யாரேனும் சம்மந்தப்பட்டிருந்தால் அவர்களையும் விசாரித்து கைது செய்ய வேண்டும் என 17.03.2026 அன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆகியோரிடம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, சமூக செயல்பாட்டாளர் பியூஷ் மானுஷ், செய்தியாளர் சிவசுப்ரமணி, சமூக செயல்பாட்டாளர் சுரேஷ், செய்தியாளர் சிவகுரு மற்றும் பாதிக்கப்பட்டு இறந்த பெண் குழந்தையின் தந்தை வீட்டார் முறையிட்டனர். இதில் திராவிடர் விடுதலைக் கழக கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சார்ந்த மாவட்ட, ஒன்றிய, கிளைப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
– பெரியார் முழக்கம் இதழ் 26032026
