தேர்தல் ஆய்வுகள் அம்பலப்படுத்துகின்றன பார்ப்பன உயர்ஜாதி கட்சியே பாஜக!

பாஜகவின் வலிமையான ஆதரவு சக்தி பார்ப்பனர்களும் உயர்ஜாதியினரும் தான் என்று ஆய்வுகள் வெளிவந்துள்ளன. மார்ச்-1 தேதி வெளியான ‘இந்து’ ஆங்கில நாளேடு இது குறித்து ஆய்வு கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
உயர்கல்வியில் ஜாதிப் பாகுபாடு காட்டுவது தண்டனைக்குரிய குற்றம் என்று அண்மையில் பல்கலைக்கழக மானியக் குழு ஒழுங்குமுறை விதியை உருவாக்கியது. இதற்கு இட ஒதுக்கீடு கோட்டாவில் வராத (உயர்ஜாதி ஏழை என்ற) பார்ப்பன உயர்ஜாதி மாணவர்களிடமிருந்து வடமாநிலங்களில் கடுமையான எதிர்ப்புகள் வந்தன. பல்கலைக்கழங்களில் போராட்டங்கள் வெடித்தன.
ஜாதி என்ற சொல்லை அகற்ற வேண்டும் என்றும் தங்களுக்கும் பாகுபாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தனர்.
இவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பாஜக ஆட்சிதான் கொண்டு வந்தது. பாஜகவின் தீவிர ஆதரவாளர்களான இந்த ‘உயர்ஜாதி கோட்டா’ பிரிவினர் தங்களுக்கு எதிராக பாஜக செயல்படும்போது வீதிக்கு வெளியே வந்து போராடுகிறார்கள்.
பாஜகவின் வலிமையான வாக்கு வங்கி சக்தியாக காலம்காலமாக உயர்ஜாதியினரே இருந்து வருகிறார்கள் என்று ஆய்வு முடிவுகளில் இருந்து தெரிய வருகிறது. இது குறித்து தேசிய தேர்தல் ஆய்வு நிறுவனம் ஒரு ஆய்வை ‘Lokniti-CSDS’ நிறுவனம் வழியாக நடத்தியுள்ளது.
கடந்த 30-ஆண்டுகளாக பார்ப்பன உயர் ஜாதியினரின் வாக்குகள் ஒருங்கிணைந்து பாஜகவுக்கு விழுந்துள்ளது தெரியவந்துள்ளது. 2024-ல் 60 விழுக்காடு பேர் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், 53 விழுக்காடு பேர் நேரடியாக அந்த கூட்டணியில் உள்ள பாஜகவுக்கும் வாக்களித்திருக்கிறார்கள். 14 விழுக்காடு மட்டுமே காங்கிரசுக்கு வாக்களித்துள்ளனர்.
2014 ஆம் ஆண்டிலிருந்து இந்த வாக்கு விழுக்காடு 20% அதிகமாக உயர்ந்து வருகிறது.
மாநில அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் உ.பி, ம.பி, ராஜஸ்தான் மாநிலங்களில் கடந்த மூன்று நாடாளுமன்ற தேர்தல்களில் 60 விழுக்காடு பார்ப்பன உயர் ஜாதியினரின் வாக்குகள் பாஜகவுக்கு கிடைத்துள்ளது.
டெல்லி மற்றும் இமாச்சல பிரதேசத்திலும் இதே நிலை தான்.
தெலுங்கானாவில் பாஜக பல்லாண்டு காலமாகவே பலவீனமாக இருந்து வந்தது. 2014-ல் பாஜகவுக்கு பார்ப்பன உயர்ஜாதியினர் 12 விழுக்காடு மட்டுமே வாக்களித்துள்ளனர். ஆனால் 2024 தேர்தல்களில் இது 53 விழுக்காடாக உயர்ந்தது.
மேற்கு வங்கம், அஸ்ஸாம், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களின் புள்ளிவிவரங்களும் இதையே உறுதி செய்கின்றன. சட்டமன்றத் தேர்தல்களில் மாநிலத் தலைவர்கள் உருவாக்கும் கூட்டணியில் பார்ப்பன உயர்ஜாதியினர் தேசிய கட்சியான பாஜக இருக்கும் அணிக்கே வாக்களித்து வருகிறார்கள்.
எனவே பார்ப்பன உயர்ஜாதியினருக்கு எதிராக எந்த ஒரு திட்டத்தையும் ஒன்றிய ஆட்சி செயல்படுத்தாது. 1996- ஆண்டிலிருந்து 2024 வரை நடந்த தேர்தலிகளில் பார்ப்பன உயர்ஜாதியினர் பாஜகவுக்கு அளித்த வாக்கு விழுக்காட்டை புள்ளிவிவரங்களுடன் மாநில வாரியாக இந்து நாளேடு வெளியிட்டு இருக்கிறது.
மாணவர் எதிர்ப்புக்குப் பிறகு உச்சநீதிமன்றம் ‘இந்த ஜாதிப் பாகுபாடு’ விதியை தடை செய்துள்ளது. அதைத் தொடர்ந்து பார்ப்பன மாணவர்களுக்கு பணிந்து ஒன்றிய ஆட்சி விதியை திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
(குறிப்பு : சமூகநீதி அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்களுக்காக இந்த முடிவை தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வரவவேற்று முகநூலில் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது).
பெரியார் முழக்கம் இதழ் 05032026

You may also like...