முடிவெய்தினார் தோழர் நல்லகண்ணு

தோழர் நல்லகண்ணு விடைப்பெற்றுக் கொண்டார். அவர் தமிழ்நாட்டின் அடையாளம். தகைசால் தமிழர் என்ற விருதுக்கு அவர் பொருத்தமானவர். அவருடைய வாழ்க்கை பல பாடங்களை விட்டுச் சென்று இருக்கிறது.
ஒரு தலைமை உறுதியான, எளிமையான, நேர்மையான வாழ்க்கையை வாழ்ந்து காட்ட முடியும். அதுவும் நூறாண்டுகள் கடந்தும் வாழ முடியும் என்ற செய்தியை தமிழ்நாட்டு பொது வாழ்க்கைக்கு விட்டு சென்று இருக்கிறார்.
பொது வாழ்க்கை என்றாலே கறை படிந்த வாழ்க்கை என்று ஆகிவிட்ட ஒரு சமூகத்தில் நேர்மையான ஒரு வாழ்க்கையை இலட்சியவாதி வாழ்ந்து காட்ட முடியும் என்பதை அவர் நிருபித்து காட்டியிருக்கிறார். பொதுவாக பெரியாரிய, மார்க்சிய இலட்சியத்தை ஏற்றுக் கொண்டிருக்கிற தலைவர்களின் ஆயுளும் நீண்டு இருக்கிறது. அவர்கள் வாழ்ந்து காட்டிய வாழ்க்கையும் சமூகத்திற்கு பாடமாக இருக்கிறது.
தமிழ்நாடு அரசு அவருக்கு அரசு மரியாதையுடன் வழி அனுப்பி வைப்பது மிகச்சிறந்த முடிவு. தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கக்கூடிய ஒரு முடிவு.
தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக அவர் முக்கிய கவனம் செலுத்தி அந்தப் போராட்டங்களில் பங்காற்றி இருக்கிறார். அவருடைய இறுதி காலத்தில் சொல்லப்போனால் இரண்டு பிரச்சனைகளில் அவர் முக்கிய கவனம் செலுத்தினார். ஒன்று சுற்றுச்சூழல் பிரச்சனை; மற்றொன்று ஜாதி தீண்டாமைக்கு எதிரான பிரச்சனை. பொதுவுடமை இயக்கம் ஜாதி தீண்டாமைக்கு எதிரான இயக்கம் என்பதை தன்னுடைய செயல்பாடுகள் மூலம் நிரூபித்து காட்டிய பெருமை அவருக்கு உண்டு.
அதேபோல் இந்த மணல் கொள்ளை, சுற்றுச்சூழல் கொள்ளை இவைகளுக்கு எதிராக அவர் நீதிமன்றத்திலேயே வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றத்திலே நேரில் ஆஜராகி அவர் வாதிட்டார். எனவே சுற்றுச்சூழல் பிரச்சனையும், ஜாதி தீண்டாமைக்கு எதிரான பிரச்சனையும் பொதுவுடைமை இயக்கங்கள் தங்களுக்குள் வரித்துக் கொள்ள வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டு செயல்பட்ட பெருமை நல்லகண்ணு அவர்களுக்கு உண்டு. தோழருக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் வீரவணக்கம்!

விடுதலை இராசேந்திரன், 25.02.2026
(சன்நியூஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி)
பெரியார் முழக்கம் இதழ்27022026

You may also like...