மேட்டூரில் கலந்துரையாடல் கூட்டம்; கழகத் தலைவர் பங்கேற்பு

சேலம் மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 19.01.2025 அன்று மேட்டூர் தாய்த்தமிழ் தொடக்கப்பள்ளியில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.

கூட்டத்தில் சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார், மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராஜ், தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல், சேலம் மாவட்டப் பொருளாளர் சம்பத், மேட்டூர் நகரத் தலைவர் மார்ட்டின், மாவட்ட அமைப்பாளர்கள் டைகர் பாலன், நங்கவள்ளி அன்பு, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சுதா மற்றும் பொறுப்பாளர்களும், தோழர்களும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்தனர்.

2025ஆம் ஆண்டிற்கான வேலைத்திட்டங்கள் குறித்தும் இயக்க வளர்ச்சி குறித்தும் தோழர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.

புரட்சிப் பெரியார் முழக்க சந்தா தொகையை வருகிற பிப்ரவரி 15 ஆம் தேதிக்குள் தலைமைக்கு ஒப்படைப்பது குறித்தும், சேலம் மாவட்ட புதிய பொறுப்பாளர்கள் மாற்றம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. அதன்படி, சேலம் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக நங்கவள்ளி கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றியச் செயலாளராக இராஜேந்திரன், நங்கவள்ளி நகரச் செயலாளராக அ.செ.சந்திரசேகரன் ஆகியோர் கழகத் தலைவரால் நியமிக்கப்பட்டனர்.

மேலும் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேசும்போது தற்போதைய அரசியல் சூழலில் தந்தை பெரியார் மீதான அவதூறுகளுக்கும் பொய் பிரச்சாரங்களுக்கும் பதிலடி கொடுக்க வேண்டிய தேவை தோழர்களுக்கு இருக்கிறது என்றும், அதை பிரச்சாரமாக மக்களிடத்தில் தெருமுனை பிரச்சாரங்கள் வாயிலாகவோ, கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் வாயிலாகவோ கொண்டு செல்ல வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

கூட்டத்தில் மேட்டூர், மேட்டூர் RS, கொளத்தூர், காவலாண்டியூர், உக்கம்பருத்திக்காடு, நங்கவள்ளி, வனவாசி, வெள்ளார், கொங்கணாபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து பொறுப்பாளர்களும், தோழர்களும் கலந்து கொண்டனர்.

இறுதியாக மேட்டூர் நகரச் செயலாளர் குமரப்பா நன்றி கூறினார்.
பெரியார் முழக்கம் 23012025 இதழ்

You may also like...