பார்ப்பனியக் கட்சி என்பதை மீண்டும் நிரூபிக்கிறது திராவிடக் கட்சிகளை வீழ்த்த ஈரோட்டில் பா.ஜ.க. யாகம்!

திராவிட கட்சிகளை வீழ்த்தி, பா.ஜ.க.வின் ‘இந்து சாம்ராஜ்யத்தை’ தமிழகத்தில் நிறுவுவதற்கு ஈரோட்டில் பல கோடி ரூபாய் செலவில் பா.ஜ.க. தலைமை, யாகம் நடத்தியுள்ளது.

இது குறித்து ‘ஜூனியர் விகடன்’ ஏடு (7.2.18) வெளியிட்டுள்ள செய்தி:

“இஸ்லாமியர்களை விரட்டிவிட்டு இந்து சாம்ராஜ்ஜியத்தைப் பலப்படுத்த அஸ்வமேத ராஜ சூய யாகத்தை சத்ரபதி சிவாஜி நடத்தினார். அப்படியொரு யாகத்தை ஈரோட்டில் பல கோடி ரூபாய் செலவில் நாங்கள் நடத்தியுள்ளோம். ‘இந்த நூற்றாண்டின் மிகப் பெரிய யாகம் இது’ என ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் கூறினார்” என்று பெருமையுடன் நம்மிடம் கூறினார், பி.ஜே.பி. விவசாய அணியின் தமிழகப் பொதுச் செயலாளர் கோவிந்தராஜு.

ஈரோடு மாவட்டம் திண்டல் அருகே ஏ.இ.டி. பள்ளி வளாகத்தில், பி.ஜே.பி. சார்பில் ஜனவரி 26, 27, 28 தேதிகளில் பிரமாண்டமான முறையில் யாகம் நடத்தப் பட்டது. இந்த யாகத்தில், குதிரையை உயிருடன் எரித்ததாகத் தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களில் காட்டுத் தீ போல பரவிய தகவல், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாகம் குறித்து ஏ.இ.டி. பள்ளியின் தலைமை ஆசிரியரான முருகசாமியிடம் கேட்டோம். “பி.ஜே.பி.-யின் விவசாய அணி தான், யாகத்தை நடத்தியது. இடத்தை நாங்கள் கொடுத்தோம். இராமாயண காலத்தில் இராமர் செய்த யாகத்துக்கு அடுத்ததாக, மிகப் பெரிய யாகம் ஒன்று கர்நாடகாவில் நடந்துள்ளதாம். அந்த யாகத்தையெல்லாம்விட, பல மடங்கு பெரியதாம் இந்த யாகம். இதற்காக, இரண்டரை ஏக்கரில் தகரப் பந்தல் அமைக்கப்பட்டது. யானை, குதிரை, காளை, பசு ஆகியவற்றை வைத்து யாகம் நடத்தப் பட்டது. இதற்கு, இரண்டு கோடி ரூபாய்க்கு மேல் செலவாகியிருக்கும். ‘குண்டத்தில் குதிரையைத் தள்ளி எரித்தார்களா?’ என்று பலரும் விசாரிக் கிறார்கள். யாகம் மூன்று நாள்கள் நடந்தது. நான் அவ்வப் போது மட்டுமே அங்கு சென்று வந்தேன். கேன்டீன் நடத்து பவர்தான் மூன்று நாள்களும் அங்கேயே இருந்தார்” என்றார்.

பள்ளியில் கேன்டீன் நடத்தும் முத்துசாமியிடம் பேசினோம். “300க்கும் மேற்பட்ட சாஸ்திரிகள் மந்திரங்கள் சொல்லி யாகம் நடத்தினர். யாக குண்டத் துக்குள் கிலோ கணக்கில் மூலிகைகளைப் போட்டனர். கூடை கூடையாக ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, அன்னாசிப் பழங்கள், தார் தாராக செவ்வாழை, தேன் வாழை, ரஸ்தாலி உள்பட அனைத்து வகையான வாழைப்பழங்கள்; விலையுயர்ந்த பட்டு வேட்டி, சேலைகள், மூட்டை மூட்டையாகத் தேங்காய், நெல், தானிய வகைகள், குடம் குடமாக நெய், இரண்டு டன்னுக்கு மேல் பல வகையான மரக்கட்டைகள் ஆகியவற்றைக் குண்டத்தில் போட்டு எரித்தார்கள்” என்று விரித்துக் கொண்டே வந்தவர், ‘குதிரையை யாகத்தில் போடவில்லை’ என்பதை மட்டும் சற்று தயக்கத்துடன் சொன்னார்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் ஈரோடு மாவட்டச் செயலாளர் குமரகுரு பரன், “குதிரையை உயிருடன் யாக குண்டத் துக்குள் தள்ளி எரித்துள்ளனர். காளை தழுவும் விளையாட்டான ஜல்லிக் கட்டுக்குத் தடை வாங்கிய பீட்டா போன்ற அமைப்புகள் என்ன செய்கின்றன? யானை, குதிரை, காளை, பசுக்களை நிற்க வைத்து யாகம் நடத்தியதற்கு ஆதாரமாக உள்ள புகைப் படங்களை வைத்து இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இந்த யாகத்தை நடத்திய பி.ஜே.பி. விவசாய அணியின் பொதுச் செயலாளர் கோவிந்தராஜு, ‘விவசாயம் செழிக்க காஞ்சி இளைய சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தலைமையில் முதல் நாளன்று லக்ஷ்மி மஹா யாகமும், மக்கள் அமைதிக்காக வேலூர் பொற்கோவில் சக்தி அம்மா தலைமையில் இரண்டாம் நாளன்று ருத்ர யாகமும், ராஜ்ஜிஜயத்தைப் பலப்படுத்த ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தலைமையில் மூன்றாம் நாள் அஸ்வமேத ராஜ சூய யாகமும் நடத்தத் திட்டமிட்டோம். தமிழ்த் தாய் வாழ்த்து சர்ச்சையால் விஜயேந்திரர் வரவில்லை. இந்த யாகங்களுக்கு எங்கள் தேசிய விவசாய அணித் தலைவர்களும், மத்திய அமைச்சர்  பொன். ராதா கிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் கருப்பணன் மற்றும் செங்கோட்டையன் உள்பட பல வி.ஐ.பி.க்களும் வந்திருந்தனர். மன்னர்கள் காலத்தில் குதிரையை நிற்க வைத்து யாகம் நடத்தி அவிழ்த்து விடுவார்கள். குதிரை எங்கெல்லாம் செல்கிறதோ, யாகம் நடத்திய மன்னனுக்கு அந்தத் தேசங்கள் சொந்தமாகும். எந்தத் தேசம் குதிரையைத் தடுத்து நிறுத்து கிறதோ, அந்த நாட்டுடன் மன்னன் போர் புரிவான். இதுதான் அஸ்வமேத ராஜ சூய யாகம். நாங்கள் குதிரையைப் பலி கொடுக்கவில்லை. யானை, குதிரை, காளை, பசுக்களை நிறுத்தி யாகம் செய்து விட்டு, அவற்றை உரியவர்களிடமே ஒப்படைத்து விட்டோம். யாக நிகழ்வுகள் முழுவதையும் வீடியோ எடுத்துள்ளோம். அதைக் காட்டத் தயார்” என்றார்.

ஈரோட்டில் உள்ள பி.ஜே.பி.யினர் சிலரிடம் பேசினோம். “தமிழகத்தில் திராவிடக் கட்சிகளை வீழ்த்தி இராஜ்ஜி யத்தைப் பிடிக்க கட்சித் தலைமையின் ஆலோசனைப்படி இந்த யாகத்தை நடத்தி னோம். திராவிட இயக்கத்தின் அடிவேராக இருக்கும் பெரியார் மண்ணிலேயே இந்த யாகத்தை நடத்தியுள்ளோம். விரைவில் தமிழ் நாட்டில் பி.ஜே.பி. ஆட்சியைப் பிடிக்கும்” என்று  அடித்துச் சொன்னார்கள் – என்று ‘ஜூவி’ கட்டுரை கூறுகிறது.

பெரியார் முழக்கம் 08022018 இதழ்

You may also like...