மதுரையில் நீட் எதிர்ப்பு கருத்தரங்கம் மணவிழாவோடு நடந்தது

23-12-2017  வெள்ளிக் கிழமை, மாலை 6-00 மணியளவில், மதுரை மாட்டுத் தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள இராமசுப்பு அரங்கத்தில், மதுரை மாவட்ட நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின் சார்பாக நீட் எதிர்ப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.

முதல் அரங்கமாய் நடைபெற்றக் கல்வியாளர் அரங்கத்திற்கு நீட் எதிர்ப்புக் கூட்டமைப்பின், ஒருங்கிணைப்பாளர் ரபீக் ராஜா (இளந்தமிழகம்) தலைமை வகித்தார். குடியாத்தம் அரசுக் கலைக் கல்லூரி முன்னாள் முதல்வரும், கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவருமாகிய முனைவர் ப.சிவக்குமார், மதுரைக் கல்லூரியின் முன்னாள் முதல்வரும், தமிழ்நாடு – புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளருமாகிய முனைவர் முரளி, கல்வியாளர் பர்வதவர்த்தினி ஆகியோர் உரையாற்றினர்.

அடுத்து நடைபெற்ற அரசியல் அரங்கிற்கு, தமிழ்ப்புலிகள் கட்சியின் முகிலரசன் தலைமை வகித்தார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனியமுதன், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் கே.எம். செரீப், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த. பாண்டியன் ஆகியோர் உரையாற்றினர். குறிஞ்சியர் விடுதலை இயக்கத்தின் தோழர் ஆனந்தி தீர்மானங்களை முன்மொழிந்தார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவுரையோடு கருத்தரங்கம் நிறைவு பெற்றது.

கருத்தரங்கில் மணவிழா : 23-12-2017 வெள்ளிக் கிழமை, மதுரை, இராமசுப்பு அரங்கில் நடைபெற்ற நீட் எதிர்ப்புக் கருத்தரங்கத்தினிடையில் ஒரு வாழ்க்கை இணையேற்பு நிகழ்வும் நடந்தேறியது.

சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், செட்டியூரைச் சேர்ந்த இராசேந்திரன்,–இராசாமணி இணையரின் மகன் பூபதிதாசுக்கும், கவலாண்டியூர் சம்பத் – இராஜேஸ்வரி இணையரின் மகள் தாரணிக்கும், தமிழ்நாடு மக்கள் கட்சியின் தலைவர் மீ.த.பாண்டியன் உறுதிமொழிகள் கூறி, வாழ்க்கைத் துணைநல ஒப்பந்தத்தை நிறைவேற்றி வைத்தார். மணமக்கள் மணவிழா மகிழ்வாக பெரியார் முழக்கம் வளர்ச்சி நிதியாக ரூ.10,000 (பத்தாயிரம்) வழங்கினர்.

பெரியார் முழக்கம் 28122017 இதழ்

You may also like...