திவிக செயலவை தீர்மானங்கள் மேட்டூர் 25062016

 

25062016 சனிக் கிழமையன்று சேலம் மாவட்டம், மேட்டூர் பாப்பம்மாள் திருமண மண்டபத்தில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்ற, திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

தீர்மானம் 1 – இரங்கல்

குடந்தை ஆர்.பி.எஸ். ஸ்டாலின், தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிறுவுநர் (ஆனா ரூனா) அருணாசலம், திருச்சி இளந்தாடி துரைராசன், பெங்களூர் வேமண்ணா (எ) வி.சி. வேலாயுதம் ஆகியோருக்கு கழகத்தின் சார்பில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

தீர்மானம் 2 – மாநில அரசின் உரிமை

தண்டனைக் குறைப்புக்கான அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கும் – அரசியல் சட்டத்தின் 161வது பிரிவில் உச்சநீதிமன்றம் தலையிட முடியாது, மாநிலங்களுக்கு அந்த உரிமை உண்டு என்று ஏழு தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தெளிவாக்கியிருக்கிறது, எனவே தான் – மாநில அரசுக்குரிய இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி 7 தமிழர் விடுதலைக்கு – தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டில் மனித உரிமை அமைப்புகள், தமிழின உணர்வாளர்கள், திரைப்படத்துறையினர் உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. 7 தமிழர் விடுதலைக்கு தனது ஆதரவை – தமிழக முதலமைச்சர் – ஏற்கனவே சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். இவ்வளவுக்குப் பிறகும் ஆயுள் சிறைவாசியாக சிறையில் வாடும் நளினி – தன்னை அரசியல் சட்டத்தின் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் – தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் மீது பழியை சுமத்தி விடுதலைக்கு மறுத்திருப்பது அதிர்ச்சி தருகிறது. தமிழ்நாடு அரசு 7 தமிழர் விடுதலையில் ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில் உறுதிகாட்டத் தயாராக இல்லை என்ற சந்தேகத்தையே ஏற்படுத்துகிறது. தண்டனைக் குறைப்புக்கு மத்திய அரசு அனுமதி தேவை என்று வாதிட்டாலும் கூட, பரோலில் விடுதலை செய்ய மாநில அரசுக்கு முழு உரிமை உண்டு, தமிழ்நாடு அரசு பரோலில் விடுதலை செய்யக்கூட தயாராக இல்லை, சட்ட நுணுக்கங்களைப் பயன்படுத்தி – 7 தமிழர் விடுதலைப் பிரச்சனையை கைகழுவிவிடும் தமிழக அரசின் இந்த அணுகுமுறை – நம்பிக்கைத் துரோகம் ஆகும். பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் ஆயுத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட நடிகர் சஞ்சய் தத் – ஏர்வாடா சிறையிலிருந்து தண்டனைக் குறைப்பு செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளார், ஏர்வாடா சிறையின் கண்காணிப்பாளருக்கே தண்டனைக்குறைப்பு அதிகாரம் உண்டு என்று மகாராஷ்டிரா ஆட்சி கூறுவதை இந்தச் செயலவை தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறது. இந்நிலையில், தமிழக அரசு தனக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161ஆவது பிரிவின் கீழான அதிகாரத்தைப் பயன்படுத்தி ஏழு தமிழர்களை மட்டுமின்றி, நீண்டகாலமாய் சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளையும் விரைவில் விடுதலை செய்யுமாறு திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

தீர்மானம் 3 – சமஸ்கிருத திணிப்பு

மத்திய மனித வளத்துறை அமைச்சகம் விஞ்ஞான கருத்துகள் ஏராளம் இருப்பதாக கூறி அய் அய் டி களிலும் மத்திய பாடத்திட்டத்தில் இயங்கும்சி.பி..எஸ்.ஈ. பள்ளிகளிலும் சமஸ்கிருதத்தை கட்டாயமாகத் திணித்து வருகிறது.
சமஸ்கிருதம் வழியாகப் இந்து, பார்ப்பனப் பண்பாட்டைத் திணிப்பதே இவர்களின் உண்மையான நோக்கமாகும். அதன் காரணமாகவே ஆர்.எஸ்.எஸ். சமஸ்கிருதமே இந்தியாவின் தேசிய மொழியாக வேண்டும் என்று கொள்கையாக அறிவித்திருக்கிறது. ஆர்.எஸ். எஸ். தனது கிளை அமைப்புகள் அனைத்துக்கும் சமஸ்கிருதத்திலேயே பெயர் சூட்டி இருக்கிறது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலமும் சமஸ்கிருதம் பேசும் மக்களைக் கொண்ட மாநிலமாக இல்லை. அது பேச்சு மொழியாகவும் இல்லை. எந்த ஒரு அறிவியல் கண்டுபிடிப்பும் சமஸ்கிருத நூல்களின் அடிப்படையில் கண்டுபிடிக்கப்பட்டதாக எந்த ஒரு விஞ்ஞானியும் இதுவரை கூறவும் இல்லை. கண்டுபிடிப்புகள் வந்த பிறகு சமஸ்கிருத நூல்களிலேயே இருக்கிறது என்று கூறுவது ஒரு வழக்கமாகிவிட்டது. சமஸ்கிருத மொழியில் இந்தியாவில் ஒரு பத்திரிக்கைகூட வெளிவரவுமில்லை. சில ஆயிரம் பேர் மட்டுமே அறிந்திருப்பதாக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு பதிவு செய்துள்ள ஒரு மொழியை அரசியல் சட்டத்தின் எட்டாவது அட்டவணையில் அதிகாரப்பூர்வ மொழியாக (Official Language) வைத்திருப்பதையே மறு பரிசீலனை செய்து சமஸ்கிருதத்துக்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரத்தை நீக்க வேண்டும் என்று திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.
நடுவண் அரசின் சமஸ்கிருதத் திணிப்புகளை எதிர்த்தும், எட்டாவது அட்டவணையிலிருந்து சமஸ்கிருதத்தை நீக்கக்கோரியு ம் 08-07-2016 அன்று அனைத்து மாவட்டங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்துவது என இந்த செயலவை முடிவு செய்கிறது

தீர்மானம் 4 – ஆதார் அட்டை

ஆதார் அடையாள அட்டையை நடுவண் அரசு கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் பலமுறை தீர்ப்புகளை வழங்கியிருந்தும், தொடர்ந்து மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டு வருகிறார்கள் . மத்திய அரசின் திட்டங்களுக்கு மட்டுமின்றி, மாநில அரசின் ஜாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், சமையல் எரிவாயு இணைப்பு, குடும்ப அட்டை, ஓய்வூதிய நீட்டிப்பு போன்றவற்றிலும் ஆதார் எண் குறிப்பிடப்பட வேண்டும் என்று நடுவண் அரசு வற்புறுத்துகிறது. இது வன்மையான கண்டனத்துக்குரியதோடு மாநில அரசின் உரிமைகளிலும் குறுக்கிடுவதாகும்.
வெளிநாட்டிலிருந்து ஊடுறுவும் அகதிகளைத் தடுப்பதற்காக ஆதார் அடையாளம் கொண்டு வரப்படுவதாக முதலில் அறிவித்தார்கள். பிறகு, மக்களை உளவுத்துறை கண்காணிப்பதற்கான ஏற்பாடு என்று உளவுத்துறை அதிகாரிகள் வெளிப்படையாகக் கூறினர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு மொழி பேசும் இனங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு தேசிய இனத்துக்குமான அடையாளங்களை மறைத்து இந்தியர் என்ற ஒற்றை அடையாளத்துக்குள் திணிக்கும் சூழ்ச்சிகரமான ஏற்பாடே ஆதார் என்ற அடையாளம்.
மாநிலங்களுக்கான உரிமைகளில் நடுவண் அரசு குறுக்கிட்டு, ஆதார் அடையாளத்தைத் திணிக்கும் முயற்சிக்கு தமிழ்நாடு அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து ஆதார் அட்டை வற்புறுத்தப்படுவதைத் தடுத்திட வேண்டும் என்று இந்த செயலவை வற்புறுத்துகிறது.

தீர்மானம் 5 – மலக்குழி சுத்தப்படுத்த இயந்திரம்
மனித மலத்தை மனிதர்களே எடுக்கும் இழிவு -உலகிலேயே இந்தியத் துணைக்கண்டத்தில்தான் நிலவிவருகிறது. ஜாதியத்தின் மனிதநேயமற்ற கொடூரத்திற்கு இதைவிட வேறு சான்று தேவை இல்லை . இந்த இழிவுக்கு முற்றுப்புள்ளி வைத்து 1993 ஆம் ஆண்டிலும் , அதற்குப் பிறகு அதைவிட கடுமையாக 2013 லும் சட்டங்கள் வந்துவிட்டன! ஆனால் மத்திய அரசின் பொதுத்துறைகளிலும் – மாநிலங்களின் உள்ளாட்சிகளிலும் இந்த இழிவு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காரணம் இதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சமுதாயம் ஜாதி அமைப்பில் – புறந்தள்ளப்பட்டவர்கள் என்பதுதான். ‘ மனுதர்மம் ‘ இப்போதும் சட்டங்களையும் தகர்த்துக் கொண்டு உயிரோடு இருக்கிறது . மலக்குழிகளில் சுத்தம் செய்ய துப்புரவு தொழிலாளர்கள் இறக்கி விடப்படுகிறார்கள் . மூச்சுத் திணறி அங்கேயே பிணமாகிறார்கள் . இப்படி ஒரு அவலம் நிகழ்வதற்கு ஆட்சியாளர்கள் வெட்கப்படுவதே இல்லை.
அண்மையில் அரசு பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் அதிகாரிகளே மலக்குழியில் துப்புரவுத் தொழிலாளர்களை இறங்கச் செய்ததில் இரண்டு பேர் மரணமடைந்துவிட்டனர் . தனியார் நிறுவனங்கள், இதே சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டால் அவர்கள் மீது கண் துடைப்புக்காக எடுக்கப்படும் நடவடிக்கை கூட, பொதுத்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்படுவது இல்லை. மனித உயிர்களிலே கூட ஒடுக்கப்பட்ட மக்களின் உயிருக்கு மதிப்பில்லை. மலக்குழிகளில் – மனிதர்களை இறக்காமல் எந்திரங்களை பயன்படுத்தும் வாய்ப்புகள் இருந்தும் , தொடர்வண்டி நிலையங்களில் – மலம் எடுப்பதற்கான எந்திரங்கள் வந்த பிறகும், இதற்கு பெரும் பொருள் செலவாகும் என்று ஆட்சியாளர்கள் கூறுவது – வன்மையான கண்டனத்திற்கு உரியதாகும் . மலக்குழிகளில் மனிதர்களை இறக்கிவிடும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு , இந்த அவலத்தை இனியும் தொடர அனுமதிப்பது மன்னிக்க முடியாத குற்றம் என்று இந்த செயலவை வலியுறுத்துகிறது . தமிழ்நாட்டில் மட்டுமாவது இந்த அவலத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் இயந்திரங்களை உடனடியாக பயன்பாட்டுக்கு கொண்டுவந்து , தமிழக அரசு இந்தியத் துணைக்கண்டத்தின் பிற மாநிலங்களுக்கு வழிகாட்ட வேண்டும் என்று இந்த செயலவை வலியுறுத்துகிறது .

தீர்மானம் 6 – ஈழத் தமிழர் விடுதலை

சர்வதேச மன்றமான அய்நாவின் மனித உரிமை ஆணையத்தில் ஈழத்தமிழர் பிரச்சனை தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது . மாற்றத்திற்கான நீதி ( Transitional justice) என்ற கோட்பாட்டின் கீழ் அய் நா இந்த பிரச்சினையை அறிவுறுத்துகிறது . போரில் பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணோட்டத்தில் அவர்களுக்கான நீதி , மறுவாழ்வு , குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை – என்ற அம்சங்கள் இந்த கோட்பாட்டில் அடங்கியுள்ளன . போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்கா முன்மொழிந்த தீர்மானத்தை – இந்திய அரசு தலையிட்டு, உள்நாட்டு விசாரணையே நடத்தலாம்,அக்குழுவில் வெளிநாட்டினர் இடம் பெறலாம் என்று சிதைத்தது. இதற்கு ஒப்புக்கொண்டு, தானே தீர்மானத்தை முன்மொழிந்த இலங்கை, இப்போது உள்நாட்டு பிரமுகர்கள் மட்டுமே அடங்கிய உள்நாட்டு விசாரணையே நடத்த முடியும் என்று அறிவித்துள்ளது . தமிழ்ப் பகுதியிலிருந்து இராணுவ வெளியேற்றம், பறிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைத்தல். பயங்கரவாத தடை சட்ட நீக்கம் உள்ளிட்ட இலங்கை அளித்த உறுதி மொழிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை .
அய் நாவில் இடம் பெற்றுள்ள பல்வேறு நாட்டின் பிரதிநிதிகளிடம் இந்தக் கருத்துக்களை எடுத்துக் கூறி, கருத்தளவில் ஆதரவு திரட்டும் பணிகளை புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் பல்வேறு – தமிழர் அமைப்புகள் தீவிரம் காட்டி செயல்பட்டு வருகின்றன . நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் – சர்வதேச கிரிமினல் நீதிமன்றங்களில் போர்க்குற்ற விசாரணைகளில் வாதாடிய அனுபவம் பெற்ற புகழ்பெற்ற சட்ட வல்லுநர்களைக் கொண்ட கண்காணிப்பு நிபுணர் குழு ஒன்றை இதற்காக நியமித்து பெரும் பொருட்செலவில் கண்காணித்து வருவது குறிப்பிடப்பட வேண்டியதாகும். ஈழத் தமிழர் விடுதலையை அரசியல் தளத்தில் முன்னோக்கி நகர்த்துவதிலும், அது குறித்த விவாதங்களை – புரிதலை அரசியல் கண்ணோட்டத்தில் மக்களிடம் கொண்டு செல்லும் கடமையையும் திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து மேற்கொள்ளும் என்று இந்த செயலவை அறிவிக்கிறது .

தீர்மானம் 7- மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வு

மருத்துவக் கல்லூரிகளுக்கான அனுமதிக்கு இந்திய அளவில் பொது நுழைவுத் தேர்வு நடத்தப் படவேண்டும் என ஒரு மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டநிலையிலேயே, உச்சநீதிமன்ற ஆயம் ஒன்று வழங்கியுள்ள தீர்ப்பு போன்ற இடைக்கால ஆணை சமூகநீதியில் அக்கறையுள்ள அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு பாடத்திட்டங்களும், மாநிலத்துக்குள்ளேயும் பலவகைப் பாடத்திட்டங்களையும் கொண்டுள்ள ஒரு துணைக்கண்டத்தில் ஒரேவகையான நுழைவுத் தேர்வு, அதுவும் பணக்கார, நகர்ப்புற, மேல்தட்டு மக்கள் பயின்றுவரும் சி.பி.எஸ்.ஈ பாடத் திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட நுழைவுத்தேர்வு என்பது கிராமத்திலிருந்து முதல் தலைமுறையாய், போதிய ஆசிரியர்களும், கட்டமைப்பு வசதிகளும் இல்லாமல், பெரும்பாலும் பொறுப்பற்று நடந்துவரும் அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவர்கள்மீது மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது எவராலும் எளிதில் புரிந்துகொள்ளக் கூடிய ஒரு செய்தியாகும். . பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து, மருத்துவம், பொறியியல் கல்விக்கு சேரும் தகுதி பெற்ற, கிராமப்புற மாணவர்கள் கூடுதலாக நுழைவுத் தேர்வு எழுதும்போது தேவையான மதிப்பெண்களை எடுக்க முடிவதில்லை . இந்த நுழைவுத் தேர்வுக்காக பல ஆயிரம் ரூபாய் செலவு செய்து, பெருநகரங்களில் மட்டுமே நடைபெறும் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து, அங்கேயே தங்கிப் படிக்கவேண்டியுள்ளது. இவைபோன்ற காரணங்களுக்காகவே இந்த நுழைவுத் தேர்வுமுறை தமிழ்நாட்டில் சட்டப்படியே இரத்து செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் மத்திய அரசால் நடத்தப்படும் ஏ.ஐ.ஐ.எம்.எஸ்., ஜிப்மெர், பி.ஜி.ஐ. போன்ற மருத்துவக் கல்லுரிகளுக்கு எந்தவொரு பொது நுழைவுத் தேர்வும் இல்லாத நிலையில், மாநிலங்களால் நடத்தப்படும் மருத்துவக் கல்லுரிகளுக்கு மட்டும் அடுத்த கல்வி ஆண்டு முதல் கட்டாயமாக பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்படும் என மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துவிட்டன .
தனியார் நடத்தும் மருத்துவக் கல்லூரிகள் இலட்சக் கணக்கில் நன்கொடை பெற்று மதிப்பெண் தகுதி ஏதுமின்றி மாணவர்களை சேர்த்து வியாபாரம் நடத்துகின்றன. அந்த தனியார் வணிகக் கல்லூரிகளில் நுழைவுத் தேர்வு நடத்தவேண்டும் என்பதில் நியாயம் இருக்கிறது . ஆனால் பிளஸ் டூ தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்று , அரசு நடத்தும் கல்லூரிகளில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு கூடவே கூடாது .
தமிழ்நாட்டில் நுழைவுத்தேர்வு முறையே இல்லாத போது ( 2004 – 2005 ) கிராமப்புற மாணவர்கள் பெரும் எண்ணிக்கையில் மருத்துவக் கல்லூரியில் பெரும் எண்ணிக்கையில் சேர்ந்தனர். நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வந்த பிறகு மருத்துவக் கல்லூரிக்கு உரிய மதிப்பெண் தகுதி பெற்றிருந்தும் நுழைவுத் தேர்வில் மதிப்பெண் பெற முடியவில்லை . விண்ணப்பித்த 1195 கிராமப்புற மாணவர்களில் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தவர்கள் 227 பேர்தான். ( அன்றைக்கு தமிழ்நாட்டில் நடந்த திமுக ஆட்சி இந்த விவரங்களை உயர்நீதிமன்றத்தில் மனுவாக தாக்கல் செய்தது)
ஆக, கிராமப்புற, முதல் தலைமுறை, அடித் தட்டு, ஏழை உழைக்கும் பிரிவு மாணவர்களுக்கு பெரும் கேடாய் உள்ள பொதுநுழைவுத் தேர்வுக்கு எதிராக, கழகத்தின் முன்னணி அமைப்பான தமிழ்நாடு மாணவர்க் கழகம் எடுக்கும் முயற்சிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஒத்த கருத்துள்ள அனைத்துத் தரப்பினரின் ஆதரவைப் பெற்றுத் தந்து ஒத்துழைக்குமாறு இச்செயலவைக் கேட்டுக் கொள்கிறது.
தீர்மானம் 8 – அணு உலை

ஆபத்துகளை உருவாக்கிடும் அணு உலைகளைப் பயன்படுத்துவதை உலக நாடுகள் கைவிட்டு வருகின்றன. இந்த நிலையில் இந்தியாவில் மின் உற்பத்திக்கு என்று அணு உலைகளைப் பயன்படுத்துவதில் நடுவண் அரசு தீவிரம் காட்டி வருகிறது. இது மக்கள் விரோத செயல்பாடாகும். அண்மையில் அமெரிக்கப் பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி “வெஸ்டிங் ஹவுஸ்’’ என்ற தனியார் நிறுவனத்திடம் 6 அணு உலைகளை இந்தியாவில் நிறுவிடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்த நிறுவனம் தரமற்ற ஆபத்தான எந்திரங்களை வழங்கிய குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான நிறுவனம் ஆகும்.
அறிவியலில் வளர்ந்ததாகக் கூறப்படும் அமெரிக்காவே அணு உலை ஆபத்துகளை கருத்தில் கொண்டு 1979ம் ஆண்டுக்குப் பிறகு கடந்த 40 ஆண்டுகளாக அணு மின் நிலையங்களைத் தொடங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். கலிபோர்னியா மாகாணத்தில் செயல்பட்டுவந்த கடைசி அணு மின் நிலையமும் மூடப்படவிருக்கிறது. ஆனால் அதே அமெரிக்காவில் பிரதமர் மோடி அணு மின் ஒப்பந்தங்களை செய்திருக்கிறார். மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் அணு மின் நிலையம் அமைக்கும் முயற்சியை மக்கள் எதிர்த்து அம்மாநிலத்திலிருந்து விரட்டி அடித்துவிட்டார்கள். ஆனால் தமிழ்நாட்டில் கூடங்குளத்தில் முதல் அணு உலையே இன்னும் வணிகரீதியாக மின் உற்பத்தியை செய்ய இயலாத நிலையில் இரண்டாவது அணு உலையில் எரிபொருள் நிரப்பும் பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் 3 மற்றும் 4வது அணு உலைகளை நிறுவுவதற்கும் ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. குஜராத் மக்கள் ஏற்காத ஆபத்தான அணுமின் திட்டங்களை தமிழ்நாட்டு மக்கள் மீது மக்களின் கடுமையான தொடர்எதிர்ப்பையும் மீறி திணிக்கப்படுகின்றன.
அணு சக்தி தொடர்பான திட்டங்களை மக்கள் மீது திணிக்கும் ஆபத்தான கொள்கையை நடுவண் ஆட்சி கைவிட வேண்டும் என்றும், மாநில அரசும் தமிழகத்தை ஓர் அணுஉலைப் பூங்காவாக மாற்றும் இதுபோன்ற நடவடிக்கைகளையாவது தடுத்து நிறுத்த வேண்டும் எனவும் திராவிடர் விடுதலைக் கழகம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 9 – அறிவியல் பரப்பரை பயணம்

அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒரு குடிமகனி/ளின் அடிப்படை கடமை என்று அரசியல் சட்டம் கூறுகிறது. ஆனால் சமுதாயத்தில் அறிவியலுக்கு எதிராக சமூகத்தை பாதிக்கும் மூடநம்பிக்கைகள் ஏராளமாக மக்களிடத்தில் படிந்திருக்கின்றன. பெண்சிசுக்கொலை, இளம் வயது திருமணம், பெண்களை ஏமாற்றி கெடுக்கும் சாமியார்களின் மோசடி, பேய், பில்லி, சூனிய நம்பிக்கைகளில் அச்சம், அதனால் சந்திக்கும் இழப்புகள், நரபலி போன்ற எண்ணற்ற மூட நம்பிக்கைகளை அறிவியல் ரீதியாக விளக்கி, தன்னம்பிக்கையை விதைக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துவது என இந்த செயலவை முடிவு செய்கிறது.
7-8-2016 அன்று சென்னை, கோவை, மயிலாடுதுறை, சத்தியமங்கலம் ஆகிய நான்கு முனைகளிலிருந்து புறப்பட்டு கிராமம் கிராமமாக 5 நாட்கள் பரப்புரை செய்யப்படும். திராவிடர் விடுதலைக் கழகம் என்ற புதிய பெயரோடு கழகம் இயங்கத் தொடங்கிய நாளான ஆகஸ்டு 12ல் சேலம் மாவட்டம், ஆத்தூரில் பயண நிறைவுவிழாப் பொதுக்கூட்டம் நடைபெறும்.
மக்களை சந்தித்து அறிவியல் பார்வையை விளக்கிடும் இப்பரப்புரைப் பயணத்தில், தங்களை முழுஈடுபாட்டுடன் இணைத்துக்கொண்டு பயணத்தின் வெற்றிக்கு உழைத்திட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை இச்செயலவை கேட்டுக் கொள்கிறது.
சமுதாயத்தில் அறிவியல் விழிப்புணர்வையும், தன்னம்பிக்கையும் உருவாக்கும் இந்த பயணத்தின் வெற்றிக்கு அறிவியல் வாழ்வியலில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒத்துழைப்பு நல்கி ஆதரிக்க வேண்டுமென்று திராவிடர் விடுதலைக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

You may also like...