திண்டிவனம் பகுத்தறிவுச் சங்கஆண்டு விழா

 

 

“”பகுத்தறிவால்  மனிதன்  தொல்லைப்படுகிறான்”

தோழர்களே!

திண்டிவனம் தாலூக்கா பகுத்தறிவுச் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் பேற்றை எனக்களித்ததற்கு நான் நன்றி செலுத்தக் கடமைப்பட்டவனேயாவேன்.

அதோடு தாங்கள் அன்பாய் வாசித்தளித்த வரவேற்புப் பத்திரத்தில் குறிப்பிட்டிருக்கும் புகழ் மாலைகளுக்கு நான் அருகனல்லவானாலும் என்னிடமிருந்து நீங்கள் என்ன எதிர் பார்க்கிறீர்கள் என்பதையும் எனது கொள்கைகளையும், ஆசைகளையும் நீங்கள் வரவேற்று ஆதரிக்கிறீர்கள் என்பதையும் அறிவதற்கு இது ஒரு அளவு கருவியாய் இருக்கின்றது என்கின்ற அளவில் வந்தனத்தோடு பெற்றுக் கொள்ளுகிறேன்.

இந்த ஆண்டு விழாவுக்கு இவ்வளவு பெரிய கூட்டம் ஆண்களும், பெண்களும் பல ஜாதி மத வகுப்புகளும் கூடி இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

நமது பகுத்தறிவுக்கு விரோதமான கூட்டத்தார்கள் மனித சமூக முன்னேற்றத்துக்குத் தங்கள் சுயநலத்தின் காரணமாக முட்டுக்கட்டையாய் இருக்கும் வகுப்பார்கள் நம்மைப் பற்றியும் நமது இயக்கக் கொள்கைகளைப் பற்றியும் விஷமப் பிரசாரம் செய்தும், திரித்தும், பழித்தும் கூறி வந்தும் இந்த ஊரில் இன்று இவ்வளவு பேர் இங்கு இந்த ஆண்டு விழாவுக்குக் கூடி இருப்பதென்றால் எனக்கு பெருத்த ஆனந்தத்தையும், நம்பிக்கையையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் தரக் கூடியதாக இருக்கின்றது.

பகுத்தறிவு

பகுத்தறிவுச் சங்க ஆண்டு விழாவில் தலைமை வகிக்கும் தலைவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது பேசுவதாய் இருந்தால் பகுத்தறிவு என்பதைப் பற்றி விளக்கிச் சில வார்த்தைகள் பேசுவது பொருத்த முடையதாகுமென்றே கருதுகிறேன்.

பகுத்தறிவு என்றால் என்ன? ஜீவப் பிராணிகளின் சிந்தனா சக்தியையும், சிந்திப்பதின் உணர்ச்சியையும் தான் அறிவு என்று சொல்லப்படுகிறது. அச்சிந்திக்கும் தன்மையின் கூர்மையை பகுத்தறிவு என்று சொல்லலாம். ஆனால் அப்பகுத்தறிவை பெரிதும் மனிதனுடைய சிந்திக்கும் தன்மைக்கும் சிந்திப்பதின் கூர்மைக்குமே சொல்லப்படுகின்றது.

உலகில் உள்ள பல கோடி ஜீவராசிகளில் மனிதன் என்கின்ற ஜீவப் பிராணியும் ஒன்று என்பது மக்கள் யாவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய விஷயமாகும். மரம், புல், பூண்டு, செடி, கொடி ஆகியவைகளும் ஜீவ வர்க்கத்தில் சேர்ந்தவைகள் என்பது நவீன ஆராய்ச்சியால் ஆராய்ச்சி நிபுணர்களால் சொல்லப்பட்டு அறிஞர்களுக்கு மெய்ப்பித்தும் காட்டப்பட்டுவிட்டது.

வங்காள மாகாணத்தைச் சேர்ந்தவரும், உலகம் போற்றுபவருமான ரசாயன சாஸ்திரியார் டாக்டர் போஸ் அவர்கள் தாவர வர்க்கங்களுக்கு ஜீவன் உண்டு என்பதை மெய்பித்துக் காட்டி செடிகளில் ஒரு சிறு கிளையை துண்டித்த போதிலும் அச்செடி துடிதுடிப்பதை ருஜுப்பித்துக் காட்டி இருக்கிறார்.

மற்றும் மண், கல், மலை ஆகிய அசேதனப் பொருள்கள்கூட வளருவதும், சேதிக்கப்பட்டால் வளர்ச்சி தடைப்படுவதும் முதலிய காரணங்களால் அவைகளின் இயங்குதல்கள் விளங்குகின்றன.

இப்படிப்பட்ட காரியங்கள் மனிதன் நேரே காண முடியாமலும், மிக மிக மந்த கதியிலும் இயந்திரங்கள் மூலமல்லாமல் அறிய முடியாததாகவும் இருப்பதால் மக்கள் அதை சுலபத்தில் ஒப்புக் கொள்ள முடியாதவர்களாக இருந்து வருகிறார்கள்.

ஆன போதிலும் ஒரு அளவுக்கு அதாவது ஜீவப் பிராணிகள் இன்னின்னது தான் என்று ஒப்புக் கொண்ட அளவுக்கு அதனதனின் இயங்குதலை அறிந்து அதற்கேற்றபடி அவற்றின் அறிவை ஒப்புக் கொள்ளுகிறார்கள்.

அவ்வறிவின் மேலான தன்மைக்குப் பகுத்தறிவு என்ற பெயர் கொடுத்து அது மனிதனுக்கே உரித்தானது என்றும், அதனாலேயே மனிதன் ஜீவப் பிராணிகளிலெல்லாம் உயர்ந்தவன் என்றும் சொல்லுகிறார்கள்.

அறிவின் தன்மையும், அவற்றின் படிகளும் எப்படி இருந்தாலும் பரிணாம வாதக் கொள்கைப்படி (அதாவது ஒன்று மற்றொன்றாக மாறிக் கொண்டிருப்பது) பிரபஞ்சத் தோற்றங்கள் எல்லாம் ஒவ்வொன்று வஸ்துவின் ஆரம்பதோற்றமுமே இன்றிருப்பது போன்றல்ல. ஒன்று மற்றொன்றாக மாறி மாறி வருவதாலேயே பல்வேறு தோற்றங்கள் காணப்பட்டு நாளடைவில் ஜீவப் பிராணிகள் என்று சொல்லப்படுவனவாக காணப்படுகின்றன.

எப்படி இருந்த போதிலும் மனிதன் என்கின்ற ஜீவப் பிராணியும், அசேதனமாகவும், தாவரமாகவும், அசரமாகவும் இருந்த வஸ்துக்களில் இருந்தே படிப்படியாக உருமாறி இன்று மனித உருப்பெற்றிருக்கிறானே ஒழிய வேறில்லை

உலகம் எப்பொழுது உற்பத்தி ஆயிற்று என்பதற்கு எவ்வளவு வருஷ காலம் தான் ஆயுள் சொல்லுவதாய் இருந்தாலும் பலலட்ச லட்சக்கணக்கான வருஷங்களுக்கு முன்பு அணுக்களாய் அணுக் கிருமிகளாய் இருந்து வந்த பொருள்கள் தான் இன்று மனித ரூபமாய் இருக்கும் (பகுத்தறிவு பெற்ற ஜீவன் என்று சொல்லப்படும்) மனிதனாவான் என்பது அறிஞர்களும், தத்துவ சாஸ்திரிகளும் விஞ்ஞான விற்பன்னர்களும் ஏற்றுக் கொண்ட விஷயமாகும்.

ஒவ்வொன்றில் ஒவ்வொன்று மேம்பட்டது

இது இவ்வாறாக மனிதன் பகுத்தறிவு உடையவனாவான் என்பத னாலேயே பகுத்தறிவு இல்லாத ஜீவ ராசிகள் என்பனவற்றைவிட மனிதன் மேம்பட்டவன் என்று சொல்லிவிட முடியாது.

ஜீவராசிகளில் ஊர்வனவற்றில் பாம்புக்கு இல்லாத கால்கள் எப்படி பல்லி, ஓணான்,  பாம்பரணை முதலியவைகளுக்கு இருக்கின்றனவோ அது போலும் நாய், கழுதைகளுக்கு இல்லாத கை சவுகரியங்கள், விரல்கள் முதலியவை எப்படி குரங்கு தேவாங்கு முதலிய ஜாதிகளுக்கு இருக்கின்றனவோ அதுபோல் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத ஒரு அளவு அறிவின் சிந்தனா சக்தி மனிதனுக்கு இருக்கின்றது என்கின்ற அளவு  வித்தியாசம் மாத்திரம்தான் உண்டே தவிர மற்றபடி தனிப்பட்ட மேன்மை ஏதும் சொல்லுவதற்கில்லை. ஏனெனில் மனிதனுக்கு இல்லாத பல சக்திகள் விசேஷ குணங்கள் முதலியவை மற்ற ஜீவராசிகளிடத்தில் இருப்பதையும் காணலாம்.

அதுபோலவே மற்ற ஜீவராசிகளிடம் இல்லாத சில கெட்ட குணங்களும், பல அசவுகரியங்களும், துன்பங்களும், கவலைகளும், திருப்தி அற்ற தன்மைகளும் பகுத்தறிவுடைய மனிதனிடத்தில் இருப்பதையும் காணலாம்.

உதாரணமாக மனிதனுடைய ஆசைக்கும், மற்ற ஜீவராசிகளுடைய ஆசைக்கும் எவ்வளவோ வித்தியாசமுண்டு.

மனிதனுடைய ஆசை எல்லையற்றது. அவசியமில்லாதது, வெறும் கற்பனையையும், மூடநம்பிக்கையையும் பொறாமையையும் பலவீனத்தையும் அஸ்திரவாரமாகக் கொண்டதுமாகும். தனது தேவைக்கு மேலும் எவ்வளவு இருந்தாலும் தனது பின் சந்ததியையும் தான் இறந்த பிறகு மோட்ச லோகம் என்பதில் பயன்படவும் வேண்டும் என்கின்ற அவிவிவேகமான ஆசையாகும்.

உதாரணமாக நாடு பிடித்து ஆட்சி செய்ய வேண்டும் என்று கருதுகிறவனுக்கு எவ்வளவு நாடு இருந்தாலும் உலகமே அவனது ஏக சக்ராதிபத்திய சர்வாதிகாரத் தன்மைக்குக் கீழ் வந்து விட்டாலும்கூட மேல்லோகமும் கீழ்லோகமும் தனது ஆட்சிக்குள் வந்தால் நல்லது என்று முட்டாள்தனமான கற்பனைக்கு அடிமையாகி திருப்தியற்றவனாகிறான். எவ்வளவு பூமி இருந்தாலும் சமுத்திரப் பரப்பெல்லாம் பூமியாகி அதற்கும் தானே மிராசுதாரனாக இருந்தால் நல்லது என்கின்ற ஆசைக்கு அடிமையாகி குறைபாட்டுக்குக் கட்டுப்பட்டவனாகிறான்.

அதுபோலவே செல்வம் எவ்வளவுதான் கோடிக்கணக்காக இருந்தாலும்  எண்ணிக்கைக்கு எப்படி ஒரு அளவு கிடையாதோ அதுபோல் எவ்வளவு பெருகினாலும் மேலும் மேலும் சொத்து சேர வேண்டும், வருவாய் பெருக வேண்டும் என்கின்ற ஆசையில் இருந்து விலக முடியாதவனாகி போத வில்லையே போதவில்லையே என்கின்ற தரித்திரத்துக்கு அடிமை ஆகிறான்.

இந்த குணங்கள் பகுத்தறிவில்லாத ஜீவராசிகள் என்பவைகளிடம் காணக் கிடையாது.

தன் பிள்ளைக்குட்டி, பேத்து, பிதுர் ஆகிய பின் சந்ததிகளைப் பற்றிய முட்டாள்தனமான கவலை பகுத்தறிவுள்ள மனிதனுக்குத்தான் இருக்கிறதே ஒழிய பகுத்தறிவில்லாதவைகளுக்கு இல்லை. அனேக ஜீவராசிகள் தன் பிள்ளை குட்டிகளைக் கவனிப்பதே இல்லை. அனேக ஜீவராசிகள் தன் பிள்ளை குட்டிகள் தனியே இரை தேடிக் கொள்ளும் பருவம் வந்தவுடன் வெறுத்துத் தள்ளி விடுகின்றன. எவையும் அவைகளைப் பற்றி சதா கவலைப்படுகிறதில்லை.

பகுத்தறிவில்லாத எந்த ஜீவராசியும் தன் இனத்தை வருத்தி வாழ்வ தில்லை. தன் இனத்தைக் கீழ்மைப்படுத்துவதில்லை. தன் இனத்தின் உழைப் பாலேயே வாழ்வதில்லை. தன் இனத்தின் மீது சவ்வாரி செய்வதில்லை.

பகுத்தறிவுள்ள மனிதன் தன் இனத்தைக் கீழ்ப்படுத்துகிறான், வருத்துகிறான், வாகனமாய் உபயோகப்படுத்துகிறான். சோம்பேறியாய் இருந்து, தன் இனத்தின் உழைப்பிலேயே வாழுகிறான். பாடுபட ஒரு கூட்டமாகவும் பயனனுபவிக்க ஒரு கூட்டமாகவும் பிரிந்து கொள்ளுகிறான்.

உதாரணமாக நாய், கழுதை, பன்றி என்கின்ற “”இழிவான” மிருகக் கூட்டத்தில் பார்ப்பன ஜாதி, பறை ஜாதி, நாயுடு ஜாதி, முதலி ஜாதி என்கின்ற பிரிவு கிடையாது. ஆனால் மனித வர்க்கத்தில் தன் இனத்தையே பிரித்து இழிவுபடுத்தப்படுகின்றது.

மனிதன் மீது மனிதன் சவ்வாரி செய்கிறான். மனிதன் உழைப்பை மனிதன் கொள்ளை கொள்ளுகிறான். மனிதனை மனிதன் வஞ்சிக்கிறான்.

பகுத்தறிவின் பயன் இதுவாயிருக்கும்போது பகுத்தறிவு இருப்பதாலேயே மேன்மையானவன் என்று எப்படி சொல்ல முடியும்?

மனிதன் வாழ்க்கை நிலை

பொதுவாகவே மனித வாழ்க்கையின் தன்மை மிக்க குறைபாடும், கவலையும், அதிருப்தியும் கொண்டதாகவே இருக்கிறது. இந்த குணம் எல்லா தேசத்திலும், எல்லா மனிதர்களிடையும் அரசன், குடிகள், பணக்காரன், ஏழைமேல் ஜாதிக்காரன், கீழ் ஜாதிக்காரன், முதலாளி, தொழிலாளி என்கின்ற பேதங்களாக தாராதம்மியங்களாக இல்லாமல் எல்லா மக்களிடமுமே இருந்து வருகின்றது.

அறிவில்லாததால் கஷ்டப்படுகிறான் என்று சொல்லுவதற்கு இல்லாமல் பகுத்தறிவு என்பது இருந்தும் மனிதன் ஏன் இத் தன்மையில் இருக்க வேண்டும்? மனிதன் காட்டுமிராண்டியாயும் சமூக வாழ்க்கை இல்லாமலும் காட்டில் தனித்தனியாய் திரியும்போது இல்லாத கஷ்டங்கள், கெட்ட எண்ணங்கள் எல்லாம் சமூக வாழ்க்கைக்கு வந்த பின்பு அனுபவிக் கின்றவனாகவும், உடையவனாகவும் இருந்து வருகிறான்.

மனிதன் காட்டுமிராண்டித் தனி வாழ்க்கைக்கு வரும்போது ஒவ்வொரு மனிதனும் சமுதாய வாழ்க்கையில் ஒருவனுக்கொருவன் உதவி செய்து வாழ்க்கை நிலையை மேம்படுத்திக் கொள்ளலாம் என்று கருதி வந்திருப்பானே ஒழிய மற்ற மனிதனைக் கொடுமைப்படுத்தி, இழிவுப்படுத்தி, கஷ்டப்படுத்தி, அதன் பயனாய் தான் வாழலாம் என்று கருதி இருக்க மாட்டான். அப்படி கருதி இருந்தால் சமூக வாழ்க்கை ஏற்பட்டே இருக்காது.

பரஸ்பர உதவிக்காக ஏற்பட்ட சமூக வாழ்க்கை பரஸ்பர தொல்லைக்கும், உபத்திரவத்துக்கும் ஆளாக ஏற்பட்டுவிட்டது.

சமுதாயத் துறையில் இன்று உள்ள வேற்றுமை, பகைமை, துவேஷம், இழிவு, தரித்திரம், மடமை முதலிய குணங்கள் மனிதன் அறிவுக் குறைவினால் பகுத்தறிவு இல்லாததால் அல்லது பகுத்தறிவை செவ்வனே பயன்படுத்தாததால் ஏற்பட்டவை என்றுதான் சொல்ல வேண்டுமே ஒழிய காலக் கொடுமையாலேயோ கடவுள் தன்மையாலோ அரசாட்சியாலோ ஏற்பட்டது என்று எவரும் சொல்லிவிட முடியாது.

ஏனெனில் சமூக வாழ்க்கையின் சரித்திர ஆரம்ப காலம் எதுவோ அக்காலத்திலிருந்தே இக் குணங்கள் மனித சமூகத்தில் இருந்து வந்திருப்பதை சரித்திர ஆதாரங்களில் பரக்கக் காணலாம்.

கடவுள் தன்மை என்பதிலும், எப்படிப்பட்ட கடவுள் காலத்திலும், அவதாரங்களின் காலத்திலும் கடவுள் தன்மை பெற்ற தூதர்கள், ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள், சமய குறவர்கள் என்பவர்கள் காலத்திலும் இக் கொடுமைகளும், குறைவுகளும், இழி குணங்களும் நிலவி வந்திருக்கின்றன.

அதுபோலவே அரசாங்க விஷயத்திலும் இன்றுள்ள அன்னியர் “”வெள்ளைக்காரர்” “”வியாபார உணர்ச்சியோடும், பொருப்பில்லாமலும் ஆளுகின்ற ஆட்சி” என்பன மாத்திரம் அல்லாமல் கடவுள் அவதார ஆட்சி, கடவுள் அருள்பெற்ற ஆட்சி, தர்ம தேவதைகள் ஆட்சி, மனு நீதி ஆட்சி, மற்றும் சேர சோழ பாண்டியன், பார்ப்பனர், நாயக்கர், மகமதியர் ஆகிய எல்லா ஆட்சி காலத்திலும் இருந்து வந்த குறைகளேதான் இன்று காணப்படுகின்றன.

எந்தக் காலத்திலும் எப்படிப்பட்ட கடவுளாலும் யாருடைய ஆட்சியிலும் இக் குறைபாடுகள் நீங்கி இருந்ததாகவோ, நீக்கப்பட்டதாகவோ காண முடியவில்லை.

ஆகவே இதற்கு என்ன காரணம் என்று கண்டுபிடிப்பதாய் இருந்தால் இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

ஒன்று மனிதனுக்கு பகுத்தறிவு ஏற்பட்ட காரணத்தினாலேயே மனிதன் இத்யாதி கொடுமைக்கும், துக்கத்துக்கும், இழிவுக்கும் ஆளானான் என்று சொல்ல வேண்டும்.

இதை அறிஞர் ஒப்புக் கொள்ள முடியுமா? முடியாது. மற்றென்ன வென்றால் மனிதன் அறிவை தப்பாய் பயன்படுத்தி இயற்கையையும் மனித சுபாவத்தையும் மனிதன் தவறுதலாய் கற்பித்துக் கொண்டு மனித ஜன்மமே அளவற்ற ஆசைக்கு அடிமைப்பட்டதென்றும், மனித ஜன்மமே துக்கம் அனுபவிக்கவும், கவலையால் மூழ்கவும் ஏற்பட்டதென்றும் மனிதன் சமூக வாழ்க்கையே (சம்சாரம் சாகரம்) துக்கம் என்றும் கருதி அதையே இயற்கை யாக்கிவிட்டதால் இந்நிலையில் இருக்கிறான் என்றுதான் சொல்ல வேண்டும்.

மனித வாழ்க்கைநிலை முழுவதையும் கட்டுப்படுத்திக் கட்டுப்பாட்டுக்கு அடிமைப்படுத்திக் கொண்டான். மனிதனுடைய இந்த சிந்தனா சக்தியையுங் கூட கட்டுப்படுத்திவிட்டான். இயற்கைக்கு மாறாக இன்னின்னபடிதான் நடக்க வேண்டும் இன்ன இன்னபடிதான் சிந்திக்க வேண்டும் என்கின்ற கட்டுப்பாட்டுக்கும் கூட ஆளாகி விட்டான். மனிதன் தனக்கு என்று ஏற்படுத்திக் கொண்ட கடவுள், மதம், மதக் கட்டளை, கடவுள் கட்டளை என்பவைகள் முதலியவைகள் எல்லாவற்றையும் பெரிதும் இயற்கைக்கும், உண்மைக்கும் விரோதமாகவும், அனுபவத்திற்கு முடியாததாகவுமே கற்பித்துக் கொண்டான்.

இந்தத் தவறுதலோடு மாத்திரம் நிற்காமல் மனித சமூகத்தையே தேசம், பாஷை, மதம், ஜாதி என்பவைகளால் பிரித்து வேற்றுமைப்படுத்திக் கொண்டான். அதோடு நிற்காமல் பல மதம், பல கடவுள், பல வேதம் என்பதாக ஒன்றுக்கொன்று மாறுபட்ட குணங்களுடன் கற்பித்துக் கொண்டான். இவற்றில் ஒன்றுக்காவது பகுத்தறிவை சுதந்திரமாய் பயன்படுத்த உரிமை இல்லாதவனாகி விட்டான். வஸ்துக்களை உனது எனது என்று பிரித்துக் கொண்டான். மனிதனின் ஓய்வு எல்லாம் மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்தி அடிமைத்தனத்திற்குப் போவதற்கே பயன்பட்டதே தவிர பகுத்தறிவால் பயன்படவோ, மேன்மை அடையவோ முடியவில்லை.

மனித சமூக நன்மைக்காக, அதாவது மக்கள் சமூகம் சரீர உழைப்பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றபடவும், அதிக பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட யந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு ஆளாகி உழைப்பாளி, பாட்டாளிகட்கும் பட்டினியாக பயன்படுத்தப்படுகின்றதோ, அதுபோலவே மனிதனுக்கு மேன்மையையும், திருப்தியையும் கவலையற்ற தன்மையையும் உண்டாக்கித் தீர வேண்டிய பகுத்தறிவானது சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி மக்களுக்கு துக்கத் தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகின்றது.

இவற்றாலும் இன்னும் இவை போன்ற காரணங்களாலேயும் மனிதன் பகுத்தறிவு பெற்றதால் மற்ற ஜீவராசிகளுக்கு இல்லாத தொல்லையும், கவலையும், குறைவும், அதிருப்தியும், தரித்திரமும் அடையக் காரணஸ்தனாகி விட்டான் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

எனவே மனிதன் இப்படிப்பட்ட கீழ்மை நிலையில் இருந்து மேம்பாடு அடைய வேண்டுமானால் முதலாவதாக தன்னம்பிக்கை உடையவனாகவும் தனது சக்தி என்ன என்பதை உணர்ந்தவனாகவும் இருக்க வேண்டும்.

இன்று மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னைத்தான் நடத்துவதாக அவன் நினைப்பதில்லை. தனது காரியத்துக்குத்தான் பொருப்பாளி என்பதில் நம்பிக்கை இல்லை. மனிதன் தான் கற்பித்துக் கொண்ட கடவுளையும், கடவுள் கட்டளையையும் கடவுள் சித்தாந்தத்தையும் வெகு குளறுபடி ஆக்கிக் கொண்டான்.

அதோடு மாத்திரமல்லாமல் தனது சௌகரியத்துக்கு ஏற்றப்படி யெல்லாம் மாற்றிக் கொள்ளுகிறான். பெரிதும் சோம்பேறி வாழ்க்கைக்கே கடவுளை பயன்படுத்திக் கொள்ளுகிறான். இவ்வளவோடு அல்லாமல் தலைவிதி, முன் ஜன்ம கர்ம பலன் என்பவைகளை கற்பித்துக் கொண்டு தனது முட்டாள்தனத்துக்கும், அயோக்கியத்தனத்துக்கும் பரிகாரமாக்கிக் கொண்டான்.

மனிதன் முதல் முதல் தவறிப் போன இடம் இதுவேயாகும். கடவுளும் கருமமுமே மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்திப் பகுத்தறிவற்ற ஜீவராசிகளைவிட கேவலமாக்கி இன்று மனிதனைத் துக்க ரூபமாகவும், கவலைக் களஞ்சியமாகவும் ஆக்கிவிட்டது.

பகுத்தறிவுக்குக் கடவுளும் கருமமும் நேர் விரோதிகளாகும். ஏனெனில் கடவுளுக்கும், கருமத்துக்கும் அடிமைப்பட்டவனிடம் சொந்தமாக ஒன்றுமே கிடையாது. அவன் மரக்கட்டை தண்ணீர் அலையில் அலைவது போன்றவனேயாவான்.

ஆதலால் இந்த உணர்ச்சிகளில் இருந்து விடுபடுவதே பகுத்தறிவின் வெற்றிக்கு முதல் படியாகும்.

இந்தப்படி சொல்லுவதை மக்கள் நாஸ்திகம் என்கின்றார்கள். இதனாலேயே பகுத்தறிவுவாதிகள் நாஸ்திகர்கள் என்று உலகமெங்கும் பழிக்கப்படுகிறார்கள். பகுத்தறிவு மேம்பாட்டிற்காக ஏற்படுத்தப்பட்ட சங்கமானது நாஸ்திகப் பழிப்புக்கு பயப்படக் கூடாது. மற்ற விபரம் நாளை பிரசங்கத்தில் பேச இருக்கிறேன்.

குறிப்பு:            18.05.1935  ஆம்  நாள்  திண்டிவனம்  இராஜாகுளம்  வடகரைத்  திடலில்  நடைபெற்ற  திண்டிவனம்  வட்ட  பகுத்தறிவுக்  கழகத்தின்  முதலாவது  ஆண்டு  விழாவில்  தலைமை  யேற்று  ஆற்றிய  தலைமை  முன்னுரை.

குடி அரசு  சொற்பொழிவு  26.05.1935

You may also like...