தேசிய விருதுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ்த் திரைப்படங்கள்

திரைப்படங்களுக்காக இந்திய அரசால் வழங்கப்படும் 66ஆவது தேசிய விருதுப் பட்டியல் ஆகஸ்ட் 9 அன்று வெளியாகியிருக்கிறது. எந்த விருது அறிவிப்புக்கு பின்னரும் பாராட்டுகள், கைகுலுக்கல்கள் ஆகியவற்றுக்கிடையே சில சர்ச்சைகளும் எட்டிப்பார்ப்பது வழக்கம். ஆனால் இந்த விருது அறிவிப்பு தமிழ்த் திரையுலகினர், பார்வையாளர்கள் மத்தியில் அதிகப்படியான சலசலப்பையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி யுள்ளது.

இந்தியாவில் மூன்றாவது பெரிய திரையுலகமாக இருப்பது தமிழ்த் திரையுலகம் தான். அதிகளவிலான கலைஞர்கள், தொழி லாளர்கள் பணியாற்றும் இதிலிருந்து ஆண்டுக்கு சராசரியாக 200 படங்கள் வரை வெளியாகின்றன. பெரும் வணிகத்தை தன்னுள் வைத்துள்ள தமிழ்த் திரைத்துறையில் தரமான படங்களும் மற்ற மொழிகளைவிட அதிகமாகவே வெளியாகி வருகின்றன.

முன்பைவிட சர்வதேச தளத்தில் தமிழ்ப் படங்கள் விருதுகளை அள்ளிவருகின்றன. ஆனால் தேசிய விருது அறிவிக்கும்போது மட்டும் ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமா புறக்கணிக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுவது வாடிக்கையாகிறது. சிறந்த படம், சிறந்த கதை, சிறந்த திரைக்கதை, சிறந்த இயக்குநர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை ஆகிய பிரிவுகளில் இந்திப் படங்களே கோலோச்சுகின்றன. இசை, பாடல், பாடகர், ஆடை வடிவமைப்பு போன்ற இதர துறைகளில் தமிழ் போன்ற பிராந்திய மொழிப் படங்கள் தேர்வாகின்றன. இது வழக்கமாக இருக்கும் குற்றச்சாட்டு. ஆனால் இந்த முறை எந்தப் பிரிவின் கீழும் ஒரு தமிழ்ப் படம்கூட தேர்வாகவில்லை. பிரியா கிருஷ்ணஸ்வாமி இயக்கிய ‘பாரம்’ என்ற படத்திற்கு ஒரு விருது வழங்கப்பட்டது.

சிறந்த தமிழ்ப் படம் என்ற பிரிவின் கீழ் கட்டாயம் ஒரு தமிழ்ப் படத்திற்குதான் விருது கொடுக்கவேண்டும் என்பதால் அதற்கு அளித்துள்ளார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பாரம் திரைப்படம் இந்தியன் பனோரமா வில் திரையிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகியாக வலம் வரும் கீர்த்தி சுரேஷ் சிறந்த நடிகைக்கான விருதை ‘மகா நடி’ என்ற தெலுங்கு படத்திற்காகப் பெற்றுள்ளார். தமிழ்த் திரையுலகைச் சேர்ந்த சண்டைப் பயிற்சி கலைஞர்கள் கூட்டணிக்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழ்ப் படத்திற்காக அல்ல. கேஜிஎஃப் என்ற கன்னட படத்திற்காக.

தமிழ் சினிமா பொழுது போக்கு அம்சத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறது என்ற குற்றச்சாட்டை உதறித்தள்ளிவிட்டு தரமான படங்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட் டுள்ளது என அனைத்து தரப்பினராலும் சமீப காலமாக பேசப்படுகிறது. அதற்கு வலுசேர்க்கும் விதமாக பரியேறும்பெருமாள், மேற்குதொடர்ச்சி மலை, 96, வட சென்னை, ராட்சசன் என பல நல்ல படங்கள் கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர் களிடையேயும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

அப்படியிருக்க எந்தப் பிரிவின் கீழும் தமிழ்ப் படங்கள் தேர்வாகாதது ஏன் என விவாதங்கள் கிளம்பியுள்ளன.

“பத்து கோடி மக்கள் வாழும் ஒரு மாநிலத்தை, நல்ல சினிமாவுக்கான முயற்சி நடைபெறும் காலகட்டத்தில் புறக்கணிப்பது வேதனை மட்டுமல்ல,’விருது குழுவின் போதாமையும்கூட. தமிழ் சினிமா துறையினர் ஒற்றுமையாக இந்த பாகுபாட்டிற்கு எதிராக பேச வேண்டும். செயல்பட வேண்டும். பரியேறும்பெருமாள், மேற்குதொடர்ச்சி மலை உள்ளிட்ட படங்கள் கண்டிப்பாக விருதுப் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும்” என்கிறார் மாற்று சினிமாவுக்காக இயங்கிவரும் தமிழ் ஸ்டூடியோ அமைப்பின் நிறுவனர் அருண்.

அறம் படத்தின் இயக்குநர் கோபி நயினார், “விருதுக்கு தேர்வான படங்களின் பட்டி யலைப் பார்க்கும் போது மத அரசியல் திரைத்துறைக்குள்ளும் வந்துவிட்டதோ எனத் தோன்று கிறது. ஒரு கட்சி மத அரசியலை பேசிவிட்டு போகட்டும். ஆனால் ஒரு அரசு அதை முன்னெடுக்ககூடாதல்லவா? இவர்களது இந்த அரசியலையும் நாம் நம் படங்களில் பேச வேண்டும். பொதுவாக தமிழ் சினிமாவில் நிகழ்கால அரசியலைப் பேசும் படங்கள் அதிகளவில் வரவேண்டும். தமிழ் சினிமா புறக்கணிக்கப்படுகிறதா என்று கேள்வி எழுப்புகிறோம்; இது போன்ற பல விஷயங் களுக்கு சேர்ந்து குரல் கொடுக்க இங்கு கலைஞர்கள் மத்தியில் ஒரு ஒருங்கிணைப்பு ஏற்படவேண்டும்” என்றார்.

இந்த விவகாரம் குறித்து நாம் பேசிய பலரும் தேர்வுக்குழுவினரின் ஆதிக்கத்தை குற்றம் சாட்டுகின்றனர். “எந்த மாநிலத்தவர்கள் தேர்வுக் குழுவில் அதிகம் உள்ளனரோ அந்த மாநிலத்தவர் களுக்கு விருதுகள் அதிகம் கிடைக்கின்றன. தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தேர்வுக்குழு உறுப்பினர்களாக சென்ற போது நம்மவர்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதையும் மறுக்க முடியாது. இது கண்டிக்கப்பட வேண்டிய முறை” என்று அருண் எடுத்துரைத்தார்.

இயக்குநர் அமீர், “கடந்த பத்தாண்டுகளில் தேசிய விருதுகள் வழங்கு வதில் ஒரு அரசியல் சார்பு உள்ளது” என்றார். மேலும் அவர், “2007ஆம் ஆண்டு எனது பருத்திவீரன் திரைப்படம் சிறந்த நடிகை, சிறந்த படத்தொகுப்பு என இரு விருதுகளைப் பெற்றது. ஆனால் அப்போது நான் விருதுக்காக எந்த முயற்சியும் எடுக்கவில்லை. என் படமே முட்டி மோதி அதுவே தனக்கான விருதைப் பெற்றுக் கொண்டது. நம்மவர்களும் தேர்வுக் குழுவில் இடம்பெற வேண்டும். சிறந்த நடிப்புக்கான விருது சிவாஜி கணேசனுக்கு வழங்கப்படவேயில்லை. பாலு மகேந்திரா போய்தான் ஸ்பெஷல் ஜூரி பிரிவின் கீழ் அவருக்கு விருதைப் பெற்றுத் தர முடிந்தது. அதற்காக அவர் தேர்வுக் குழுவில் கடும் வாக்குவாதம் செய்ய வேண்டியிருந்தது.

தயாரிப்பாளர்கள் சங்க ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஜே.எஸ்.கே சதிஷ், பரதேசி, தங்கமீன்கள், குற்றம் கடிதல் உள்ளிட்ட தேசிய விருதுபெற்றப் படங்களைத் தயாரித்தவர்.

அவரிடம் பேசும் போது, “நம்மிடமிருந்து நல்ல படங்கள் சென்றுள்ளன. ஆனால் நமது மொழியை, கலாச்சாரத்தை புரிந்து கொள்ளக் கூடிய, உள்வாங்கக் கூடிய தேர்வுக்குழு உறுப்பினர்கள் அமையாமல் போனது துரதிர்ஷ்டவசமானது. இது தேர்வுக்குழுவினரின் போதாமையா என்றால் அதுவும் இல்லை. ஏனென்றால் தேசிய விருது பெற்றவர்கள்தான் தேர்வுக் குழுவுக்கு செல்ல முடியும். எனக்கும் கடந்தமுறை தேர்வுக் குழுவில் கலந்துகொள்ள அழைப்புவிடுக்கப்பட்டது. ஆனால் எதிரபாராத விதமாக கலந்துகொள்ள முடியாமல் போனது. நாமும் அதில் கலந்துகொண்டால் மற்ற உறுப்பினர்களிடம் படம் கூறும் விஷயங்களை எடுத்துச் சொல்லி அடுத்த சுற்றுக்கு கொண்டு செல்ல முடியும்” என்றார்.

“தேர்வுக்குழு உறுப்பினர்களின் முடிவுதான் இந்தப் பட்டியல் என்பது இருக்கட்டும். அவர்கள் எந்த அடிப்படையில் இவர்களை தேர்ந்தெடுத் தார்கள். போட்டியிட்ட மற்ற படங்கள் எதில் தவறியுள்ளன என்பது பற்றியும் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். அப்போது படத்தைப் பார்த்த மக்களும் தெரிந்துகொள்வார்கள் தானே” என்று தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார் கோபி நயினார்.

தமிழ்ப் படங்களை ஏன் தேர்வு செய்ய வில்லை என்ற குற்றச்சாட்டை விடுத்து விருது பெற்ற படங்களின் தரங்களைப் பற்றி பேசலாம் என்றாலும் அதுவும் சொல்லிக்கொள்ளும்படி இல்லை என்பதையே பலரும் வலியுறுத்துவதைப் பார்க்க முடிகிறது.

– ‘மின்னம்பலம்’

நிமிர்வோம் ஆகஸ்ட் 2019 மாத இதழ்

You may also like...