கூடங்குளம் போராளிகள் மீதான தாக்குதலுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி கண்டனம்

பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை:

கூடங்குளம் அணுஉலை தொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஜனவரி 31 ஆம் தேதி நடக்கவிருந்த பேச்சுவார்த்தைக்கு விடுக்கப்பட்டிருந்த அழைப்பை ஏற்று அதில் கலந்து கொள்ளச் சென்ற போராட்டக் குழுவின் தலைவர் சுப. உதயக்குமார், புஷ்பராயன், மைபா ஆகியோர் மற்றும் மகளிர் உள்ளிட்ட போராட்டக் குழுவினரை இந்து முன்னணி, காங்கிரஸ் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே கடுமையாகத்தாக்கியுள்ளனர். போராட்டக் குழுவினரின் வாகனமும் தாக்கப்பட்டுள்ளது.

பேச்சு வார்த்தைக்கு அழைக்கப்பட்ட நேரத்திலேயே பேச்சு வார்த்தைக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்த இடத்திலேயே ஒரு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள்ளேயே போராட்டக் குழுவினர் தாக்கப்பட்டிருப்பதும், தாக்குதல் நடந்து முடிந்த பின்னரே காவல்துறை வந்து தடுப்பு நடவடிக்கைகள் எடுப்பதும் தற்செயலாக நடந்தவைகள் அல்ல.

போராட்டத்தைச் சீர்குலைக்க சாதி ரீதியாகவும், மத ரீதியாகவும் போராட்டக் குழுவைப் பிளவுபடுத்தும் முயற்சிகளை மேற்கொண்டது ஆளும் வர்க்கம். அதன் பிறகு தனி மனித தாக்குதல்களை நடத்தி போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் பரப்புரைகளை மேற்கொண்டது. அடுத்த கட்டமாக போராடும் மக்கள் மீது வன்முறையை ஏவுகிறது.

இந்தத் தாக்குதலின் நோக்கம் வெறும் தாக்குதலாக மட்டும் இருக்காது. தாக்கப்பட்ட மக்கள் தாக்கியவர்கள் மீது எதிர்வினை ஆற்றுவார்கள். அதன் பிறகு வன்முறையைக் கட்டுப்படுத்தப் போகிறோம் என்ற பெயரில் காவல்துறையை வைத்து அணுஉலைக்கு எதிராகப் போராடும் மக்களை முடக்கி விடலாம் என்ற நோக்கில் நடத்தப்பட்ட முயற்சி என்றே கருத வேண்டியுள்ளது.

அணுஉலைக்கு ஆதரவாக போராட விரும்புபவர்கள் அறவழியில் போராடலாம்; அல்லது அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினர் கேட்கும் கேள்விகளுக்கு அறிவியல் ரீதியாக பதில் அளிக்க முயற்சிக்கலாம். அதை விட்டு விட்டு அமைதியாகப் போராடும் மக்கள் மீது பேச்சு வார்த்தைக்குச் சென்ற இடத்தில் தாக்குதலை நடத்தும் காங்கிரஸ் மற்றும் இந்து முன்னணி அமைப்புகளை வன்மையாகக் கண்டிக்கிறோம். அறவழியில் போராடும் மக்களுக்கும் அணுஉலை எதிர்ப்புப் போராட்டக் குழுவினருக்கும் உரிய பாதுகாப்பை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பெரியார் முழக்கம் 09022012 இதழ்

You may also like...