அறிவியலாளர்களை கொலை செய்த மதவெறி

  • சந்திரன் ஒரு தெய்வம் அல்ல; அது அறிவியல் பார்வையில் ஒரு கோள்! சந்திரன் மீது பூமியின் நிழல்படுவதே (கிரகணம்) என்று கூறினார், கி.மு. 5ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அறிவியலாளர் ஆனக்ஸாகரஸ். ஏதன்சு நகரத்து மதவாதிகள் இவரது கருத்து மத விரோதமானது என்று கூறி இவரைக் கொல்ல முயன்றனர். ஏதன்சு நகர மன்னர் பெரிக்ளீஸ் இவரது நண்பராக இருந்ததால், கொலை முயற்சி தடுக்கப்பட்டது. இவரை ஏதன்சு நகரை விட்டே துரத்தி விட்டனர்.
  • சூரியன் தான் இயங்குகிறது என்ற மத நம்பிக்கைக்கு மாறாக, சூரியனைச் சுற்றி பூமிதான் இயங்குகின்றது என்ற உண்மையை வெளியிட்டார், கோபர்நிகஸ். மதவாதிகள் கடுமையாக எதிர்த்தனர்; கலகம் செய்தனர். புராட்டஸ்டண்ட்  மதத்தை நிறுவிய மார்ட்டின் லூதர், கோபர்நிகசை ‘முட்டாள்!’ என்று கூறி  இழிவுபடுத்தினார். எதிர்ப்புக்காக தனது முடிவை விட்டுக் கொடுக்காத  கோப்பர்நிகஸ், படுத்த படுக்கையாக கிடக்கும் போதும் தனது கொள்கைகளை நூலாக வெளியிட்டுப் பரப்பினார்.
  • விண்வெளியில் விண் கோள்களின் இயக்க விதிகளைக் கூறியவர், அறிவியல் அறிஞர் யோவான் கெப்ளர். இவரது கருத்தை மதத்துக்கு எதிரானது என்று கூறி கண்டித்தனர். இவர் சில காலம் பேரரசர் அவையில் கணித வல்லுனராக இருந்தார். அதனால் அவரை நேரிடையாக எதிர்க்க முடியாததால், 75 வயதான இவரது தாயார் காத்தரீனா கெப்ளரை, தன் மகனுக்கு இவர்தாம் மதவிரோதக் கருத்தினைச் சொல்லிக் கொடுத்தார் என்று குற்றம்சாட்டி, அவரைக் கைது செய்து இரும்புச் சங்கிலிகளால் கைகால்களைப் பிணைத்து, இருட்டுச் சிறைக் கிடங்கில் தள்ளிப் பூட்டி அடைத்துச் சித்திரவதை செய்தனர். 14 மாதங்கள் இவ்வாறு சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டார். எனினும் அவர், தான் குற்றவாளி என்று ஒப்புக் கொள்ளவே இல்லை. இறுதியில் கெப்ளரின் தாயாரை ஊரைவிட்டு வெளியேற்றி, மீண்டும் நகர் திரும்பக் கூடாது என்று கூறி துரத்திவிரட்டினர்.
  • கோப்பர்நிகஸ் கூறிய கோள்களைப் பற்றிய கொள்கையை உண்மைதான் என்று கூறியதற்காகவும், தமது புரட்சிகரமான கருத்துகளுக்காகவும் சித்ரவதையை அனுபவித்தவர் இத்தாலி நாட்டு அறிஞர் ஜியார்டனோ புருனோ! இவரை எட்டாண்டு காலம் சிறைக்குள் அடைத்து, பின் நீதிமன்றத்தில் நிறுத்திக் குற்றம் சாட்டி, மத விரோதி என்று கூறி மன்னிப்புக் கேட்கக் கூறினார். புருனோ மன்னிப்புக் கேட்க மறுத்தார். இவரைச் சுட்டுப் பொசுக்கிக் கொல்ல வேண்டும் என்று நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டு ரோமாபுரி நகரின் முக்கிய சதுக்கத்தில் ஒரு கம்பத்தில் கட்டிவைத்து நெருப்பிட்டு உயிருடனே கொளுத்திக் கொன்றனர்.
  • “நமது பூமி, பேரண்டத்தின் நடுநிலையில் உள்ள ஒன்று அன்று; அது சூரியனைச் சுற்றி வருகின்றது” என்ற கருத்துக்களை வெளியிட்டதற்காக கலிலியோவை ரோம் நகரத்து மதவாதிகள் சிறையிலடைத்தனர். சித்திரவதை செய்தனர். பைபிளில் கூறியதற்கு மாறான கருத்தைக் கூறிய மாபாவி என்று குற்றம்சாட்டப்பட்டு மத நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். “தமது கொள்கை தவறு என்று ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், இன்றேல் உயிரிழக்க வேண்டி வரும்” என்றும் தீர்ப்பளிக்கப்பட்டார். முதுமையின் கோலத்தாலும், உடல் நலிவாலும் தனது கொள்கைகள் தவறு என்று முழந்தாளிட்டு மன்னிப்பு வேண்டிக் கர்த்தரை மன்றாட வேண்டிய இக்கட்டுக்கு ஆளானார். எனினும் இவர் நீதிமன்றத்தை விட்டு வெளியே வந்தவுடன், “நீதிமன்றத்தினருக்காக உண்மை மாறி விடாது; பூமி தான் சூரியனைச் சுற்றி வருகின்றது” என்று கூறினார். எனவே இவரை மீண்டும் கொடுமைப்படுத்தினர். கண் பார்வை இழந்த நிலையிலும் இவரை வீட்டுச் சிறையிலே சாகும் வரை வைத்திருந்தனர். இவர் இறந்த பின் நினைவுச் சின்னம் எழுப்பக்கூட அரசு அனுமதிக்கவில்லை.
  • ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த செர்வீடஸ் இரத்தம் இதயத்திலிருந்து நுரையீரல்களுக்கு எப்படிச் செல்கிறது என்பதை மனித உடலைக் கீறி, தேடிப் பார்த்து அந்தப் பாதையைக் கண்டுபிடித்தார். ஆனால் மனித உடலைக் கீறியது மத விரோதம் என்றுக் கூறி அவரை கம்பத்தில் கட்டி வைத்து உயிருடன் கொளுத்திக் கொன்றனர்.
  • உயிர் இயல் அறிஞர் டார்வின் – மனிதன் – பரிணாம வளர்ச்சியை அறிவியல்ரீதியாக ஆய்ந்து வெளியிட்டார். கடவுள்தான் மனிதனை படைத்தான் என்ற படைப்புக் கொள்கையை அடியோடு அறிவியல் மறுத்ததால் மதவாதிகளின் கடும் எதிர்ப்புக்கும், இழிமொழிக்கும் அவர் ஆளானார். பிற்போக்குவாதிகள் அவரை, “மனிதனை விலங்கு நிலைக்குக் கீழே தள்ளிவிட்டார்” என்று கூறிக் கண்டித்தனர்.
  • சிக்மண்ட் பிராய்ட் எனும் அறிஞர் உளவியல் பிரச்சினைகளை அறிவியல் மூலம் ஆராய்ந்தார். அவரை மனிதனின் ஆன்மாவை அழித்துக் கொள்ளை கொண்ட பாதகன்” என்று வசைபாடினர் மதவெறியர். இப்படி கொடுமையை சந்தித்தவர்கள் அறிவியல் அறிஞர்கள் மட்டுமல்ல; தத்துவ ஞானிகளும், சிந்தனையாளர்களும் இதனைச் சந்தித்துள்ளனர். சிந்திக்கத் தூண்டிய ‘குற்றத்துக்காக’ சாக்ரடீஸ் நச்சுக் கோப்பையை பரிசாகப் பெற்று உயிர்நீத்தார். பெரியார், “அறியாமை, நிறைந்த நம் மக்கட் சமுதாயத்துக்கு அறிவுச் சுடரைக் கொளுத்தியதற்காக” அவர் வாழ்வில் சந்தித்த கொடுமைகள் ஏராளம்! இழிமொழிகள், கல்லடி, செருப்பு, பாம்பு, அழுகல் பொருள்கள், மலம் வீச்சு, செருப்புத் தோரணம் கட்டி இழிவுபடுத்துதல், கழிவுப் பொருள்களைப் பார்சலில் அனுப்புதல், ஆபாச வார்த்தைகளைக் கொட்டி கடிதம் எழுதுதல், பொதுக் கூட்டத்தில் பன்றி, மாடு, பாம்பு, கழுதைகளை விட்டு பீதி கிளப்பி விடுதல், பொய் வழக்குப் போடுதல், அபராதம், சிறை, சொத்து ஏலம், கொலை முயற்சி, குடும்பத்தாரை அவதூறு பேசுதல் என்று எண்ணிறந்த கொடுமைகளை ஏற்றும், தந்தை பெரியார், தனது கொள்கையிற் பின் வாங்கினார் இல்லை.

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

You may also like...