போக்கிரித்தனமான புகார்

 

சென்ற வாரம் நமது “”குடிஅரசு” பத்திரிகையின் தலையங்கத்தில் தோழர் சுந்தராம்பாள் அம்மாள் விஷயமாகப் பார்ப்பனர்கள் பொறாமை கொண்டு தம் பத்திரிகைகளில் செய்து வரும் விஷமத்தனமான பிரசாரத்தைப் பற்றி எழுதியிருந்தோம்.

இவ்வாரம் பார்ப்பனர்களுடையவும், பார்ப்பனப் பத்திரிகை களினுடையவும், போக்கிரித்தனமான புகார்களைப் பற்றி எழுத வேண்டிய அவசியம் ஏற்பட்டதற்கு மிகுதியும் வருந்துகின்றோம்.

நம் நாட்டு பார்ப்பனர்களை நாம் பகைக்கவோ, வெறுக்கவோ, சிறிதுகூட ஆசைப்படுவது கிடையாது என்பதோடு, எப்படியாவது அவர்களுடன் கலந்து ஐக்கியப்பட்டு தொண்டாற்ற ஏதாவது ஒரு சந்தர்ப்பம் கிடைக்காதா என்றே சிறப்பாக சிறிது காலமாய் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

இந்நிலையில் பார்ப்பன விஷமம் எல்லைக்கடங்காது. மேலும் மேலும் பெருகிக் கொண்டே  போவதுடன் இந்நாட்டில் இனி தமிழ் மக்கள் வாழ்வதா? அல்லது பார்ப்பனர் வாழ்வதா? என்கின்ற இரண்டிலொன்றைக் கரைகாண பார்ப்பனர் ஒருங்கே கூடி முனைந்து விட்டார்கள். அது பற்றி எதையுஞ் செய்யத் துணிந்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டியிருக்கிறது.

நாடகக் கலையில் ஒரு தமிழ் மாது பெரும் புகழ் பெறக் கூடாது என்று எப்படி விஷமப் பிரசாரம் செய்தார்களோ அதுபோலவே இந்த வாரத்தில் தமிழ் கலையில் ஒரு தமிழ் பெரியார் பேரும், புகழும் பெறுவதற்கு இடையூறாய் தங்கள் விஷத்தைக் கக்க ஆரம்பித்து விட்டார்கள்.

தென்னாட்டுக் கலா வல்லவருள் தலைசிறந்து விளங்கும் சுவாமி வேதாசலமென்னும் மறைமலை அடிகள் அவர்களை தமிழ் உலகமும், சிறப்பாக சைவ உலகமும் நன்கறிந்திருக்கும் என்பதில் யாருக்கும் ஐயமிருக்காது.

சுவாமிகள் ஒரு பெரும் ஆஸ்திகர் என்பதோடு தமிழ் பாஷையில் இணையில்லாத பண்டிதர் என்பதும் தமிழ் பாஷையுடையவும், தமிழ் பாஷையின் வளர்ச்சியின் எதிரிகளும் அறிந்ததேயாகும். அதோடு மாத்திரமல்லாமல் சுவாமிகள் சுயமரியாதைக் கொள்கைக்கு மாறானவர் என்பதோடு சுயமரியாதைக் கொள்கையானது, மக்களுக்குக் கேடு விளைவிக்கத் தக்கது என்கின்ற அபிப்பிராயமும் உடையவர்.

அன்றியும் சுவாமிகளின் தோளானது ஒரு முப்பிரி நூலைச் சுமந்து யிருக்குமானால் இத் தென்னாட்டுப் பார்ப்பனர்கள் இன்று அவரை அகஸ்தியராக்கியிருப்பார்கள். ஏனெனில் அவரினின்று எத்தனையோ மடங்கு தாழ்ந்த ஞானமுடையவர்கள் பருத்தி நூலைத் தாங்கிய பண்பினாலேயே மகாமஹோபாத்தியாயரானதோடு மாத்திரமல்லாமல் தமிழ் “”கடவுளான சுப்பிரமணியனுக்கு” ஒப்பாகப் பேசியும், எழுதியும் விளம்பரப்படுத்தி இருக்கிறார்கள்.

உதாரணமாக இன்று தமிழ் பாஷையின் பேரால் பெரு நிதி திரட்டிக் கொண்டவரும் பெரும் புகழ் அமைத்துக் கொண்டவரும் தமிழுக்குத் தாயகமெனவும் விளம்பரப்படுத்தப்பட்டு மகாமஹோபாத்தியாயர் எனப் பட்டம் சூட்டப் பெற்றவருமான தோழர் உ.வே.சாமிநாதையர்  அவர்களை ஒரு தட்டில் வைத்து சுவாமி வேதாச்சலமவர்களை மற்றொரு தட்டில் வைத்து நிறுக்கப்படுமானால், எத்தனை சுவாமிநாதய்யர்களைப் போட்டால் சுவாமி வேதாச்சலம் வீற்றிருக்கும் தட்டை அசைக்க முடியும் என்பதை, ஒவ்வொரு நேர்மையான மகனும் தன் தன் நெஞ்சில் கையை வைத்து உண்மை உணர்வோடு பார்ப்பானானால் நன்றாய் விளங்கிவிடும்.

தோழர் சுவாமிநாதய்யர் அவர்கள் வெகுகாலமாக பல தமிழ்ப் பெரியாரும், தமிழ் அபிமானிகளும் சேர்த்து வைத்திருந்த தமிழ் இலக்கியச் சுவடிகளையும், அவற்றிற்கு அவ்வப்போது பல அறிஞர்களும், பண்டிதர்களும் குறித்து வைத்து இருந்த உரைகளையும், கருத்துகளையும் கைப்பற்றி அவற்றில் பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூலமாகவும், பார்ப்பனர்களுக்கு பிரதிகூலமாகவும் இருந்த கூற்றுகளை மாற்றியமைத்து ஆற்றிய நூல்கள் போலவே எல்லாவற்றையும் பார்ப்பனீயத்துக்கு அரணாக்கிப் பதிப்பித்துப் பயன் பெற்றார் என்பதல்லாமல் தன் சொந்த மனோதர்மத்தில் யாவருக்கும் பயன்படும்படி பார்ப்பன முறையில்  ஏதாவது புத்தகமோ, வியாசமோ எழுதி இருக்கின்றாரா என்று பார்த்தால் நாம் கூறுவதில் உண்மை இருக்கின்றதா? இல்லையா? என்பது செவ்வன விளங்கும்.

சுவாமி வேதாச்சலமவர்கள் அவ்வாறின்றி எத்தனையோ நூல்கள் தாமாகவே இயற்றியதுடன் தமதாராய்ச்சித் திறத்தால் எவ்வளவோ அறிய விஷயங்கள் கண்டுபிடித்து சகல மக்களும் பயன்படத்தக்க பல அறிய கருத்துக்களையும் வெளியிட்டு வந்திருக்கிறார் என்பதை தமிழின் “”கூற்றுவர்”களும் உணருவார்கள்.

இப்படிப்பட்ட சுவாமி வேதாச்சலமவர்களைப் பற்றி நமது பார்ப்பனர்கள் விஷமப் பிரசாரம் செய்ய இப்போது ஏன் புறப்பட்டார்கள் என்பது சிலருக்கு அதிசயமாகத் தோன்றலாம்; ஆனால் நமக்கு அது அதிசயமாய்த் தோன்ற வில்லை. ஏனெனில் இதற்கு முன்னாலேயே செய்திருக்க வேண்டியவர்கள் இத்தனை நாள் எப்படி சுவாமி வேதாச்சலத்தைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்யாதிருந்தார்கள் என்பதுதான் ஒருவருக்கு ஆச்சரியமாகத் தோன்றலாம்.

இரண்டைப் பற்றியும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை என்பதே நமதபிப்பிராயம். ஏனெனில் மறைமலையடிகளைப் பற்றி நம் பார்ப்பனர்கள் முன்னும் விஷமப் பிரசாரம் செய்துதான் வந்திருக்கிறார்கள், இப்போதும் செய்துதான் வருகிறார்கள், இனியும் செய்யத்தான் போகிறார்கள்.

எப்பொழுது அவர் சுவாமி வேதாச்சலமானாரோ அப்போது முதலும், எப்பொழுது சுவாமி வேதாச்சலமவர்கள் சுவாமி வேதாச்சலமென்னும் மறைமலை அடிகள் என்பதாக ஆனாரோ அப்பொழுது அதைவிட அதிகமாகவும் அவரைப் பற்றி விஷமப் பிரசாரம் செய்து கொண்டேதான் இருக்கிறார்கள்.

நமது பார்ப்பனர்களுக்கு ஒருவன் விரோதியாக வேண்டுமானால் தமிழ் பாஷையில் இணையில்லாப் பற்றும், இணையில்லா ஞானமும் இருந்து வருவது ஒன்றே போதுமானதாகும்.

அப்படிக்கிருக்க நமது சுவாமி வேதாச்சாலமவர்களை பார்ப்பனர் எப்படி வெறுக்காமலும், பழித்துக் கூறாமலும் இருக்க முடியும்.

இப்பொழுது சுவாமி வேதாசலம் அவர்களைப் பற்றி பார்ப்பனக் குழாத்திலும் அவர்களது பத்திரிகைகளிலும் நடந்து வரும் பிரசாரத்தை நாம் விஷமப் பிரசாரம் என்று மாத்திரம் சொல்வதல்லாமல் அதை ஒரு போக்கிரித்தனமான புகார் பிரசாரம் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

ஏனெனில் சுவாமிகள் எழுதிய அறிவுரைக் கொத்து என்னும் ஒரு சிறிய நூலில், “”தமிழ் நாட்டவரும் மேல் நாட்டவரும்” என்ற தலைப்பின் கீழ் எழுதியுள்ள ஒரு கட்டுரையைக் குறிப்பாக கொண்டு அது தேச நலனுக்கும் மக்கள் நலனுக்கும் கேடானது என்பதாகச் சொல்லி அவரது பெயருக்கு இழுக்கு உண்டாகும்படியாக பிரசாரம் செய்கின்றார்கள்.

இரண்டு வாரகாலமாக இந்தப்பிரசாரம் பத்திரிகைகளில் அடிபடுவதோடு பல பார்ப்பனப் பத்திரிகைகள் இவ்விஷயத்திற்கு ஆக தலையங்கமும் உப தலையங்கமும் எழுதுவதோடு வழக்கம் போல் ஆங்காங்கு கூட்டம் போட்டு கண்டித்ததாக சூட்சிச் செய்திகளும் பிரசுரமாகின்றன. அவற்றுள் ஒரு பத்திரிகை “”விஷமத்தனமான புத்தகம்” என்கின்ற தலைப்பிலும், மற்றொரு பத்திரிகை மறைமலை அடிகள் சுயமரியாதைக் கட்சியில் சேர்ந்து விட்டார் என்பது ஆகவும், மற்றும் பல தங்களுக்கு தோன்றிய விதமாகவும் எழுதி அப்புத்தகத்தை பள்ளிகளில் பாடமாக  வைத்தது பிசகு என்றும் அதை எடுத்து விட வேண்டும் என்றும் எழுதி இருக்கின்றன.

இந்தக் கூற்றுகளை வேண்டுமென்றே செய்யப்படும் போக்கிரித் தனமான விஷமக் கூற்று என்று சொல்லி தீர வேண்டிய நிலையில் இருக்கிறோம்.

ஏனெனில் சுவாமி வேதாசலம் அவர்களால் எழுதப்பட்ட அறிவுரைக் கொத்து என்னும் புத்தகத்தில் தமிழ் மக்களை இழிவுபடுத்தியும் அடிமைப்புத்தி ஏற்படும்படியும் துவேஷம் ஏற்படும்படியும் கட்டுரை எழுதி தமிழ் மக்களை கேவலப்படுத்தி இருப்பதாக எழுதி ஓலமிடுகின்றன. அதில் என்ன எழுதப் பட்டிருக்கிறது, எதற்காக இப்படி ஓலமிட வேண்டியதாயிற்று என்பதற்கு உதாரணம் காட்டும் போது ஒரு பத்திரிகையானது,

  1. “”தமிழருக்கு சுய அறிவு கிடையாது”
  2. “”ஒற்றுமைக் குணம் கிடையாது”
  3. “”கல்வியில் விருப்பம் கிடையாது”
  4. “”மேல்நாட்டார் இங்கு வருமுன் உயர்ந்த பள்ளிக்கூடம் கிடையாது”
  5. “”தமிழர்கள் கைக்கூலி (லஞ்சம்) கொடுக்கிறார்கள்”
  6. “”உத்தியோகம் பெற எதையும் செய்கிறார்கள்”

அப்படி என்றால் என்ன? என்றும் கேட்கின்றது.

  1. “”பணம் சேர்ப்பதற்கே கல்வி கற்கிறார்கள்”

என்ற வாக்கியங்களை எடுத்துக் காட்டி இவை அடிமைப்புத்தியையும் துவேஷத்தையும் விளைவிக்கும் என்று சொல்லி இப்புத்தகத்தை பள்ளிப் பிள்ளைகள் படிக்கும்படியாக அனுமதிக்கக் கூடாது என்று எழுதியிருக்கின்றது.

இவற்றிற்கு சமாதானம் கூறியே இப்பத்திரிகைகளின் போக்கை போக்கிரித்தனமான புகார் கூறும் குணமுடையவை என்று எடுத்துக் கூற ஆசைப்படுகின்றோம்.

  1. தமிழருக்கு சுய அறிவு கிடையாது என்பதில் ஏதாவது குற்றமிருக்கிறதா என்று கேட்கின்றோம்.

கோடிக்கணக்கான தமிழ்நாட்டுத் தமிழ் மக்களில் நூற்றுக்கு 10 அல்லது 5 வீதமான மக்களுக்கு ஆவது சுய புத்தி இருக்கின்றது என்று யாராவது கூற முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம். ஒருவர் இருவருக்கு சுய புத்தி இருப்பதாக வைத்துக் கொண்டாலும் அது அச்சமூகம் முழுமைக்கும் இருப்பதாகக் கொள்ளக் கூடியதாகிவிடுமா என்று கேட்கின்றோம்.

தமிழனுக்குப் புத்தியிருந்தால் அவன் “”மோக்ஷ”மடைய மலத்தையும் மூத்திரத்தையும் சாப்பிடுவானா?

தமிழனுக்குப் புத்தியிருந்தால் அவன் தன் மகளைச் சாமி பேரால் பொட்டுக் கட்டி பார்ப்பனனுக்கு மாத்திரம் குறைந்த விகிதத்துக்கு கலவிக்கு விடுவானா?

தமிழனுக்குப் புத்தியிருந்தால் பார்ப்பான் காலில் பவுன் பவுனாக நாணையம் கொட்டிக் கொடுத்து அவன் காலைக் கழுவின தண்ணீரைக் குடிப்பானா?

தமிழனுக்குப் புத்தியிருந்தால் காப்பிக் கடையில் எச்சைக் கிண்ணம் கழுவும் பார்ப்பானையும், கூட்டிக் கொடுக்கும் பார்ப்பானையும் சுவாமி என்று கூப்பிடுவானா?

தமிழனுக்குப் புத்தியிருந்தால் கடுகளவாவது சுயபுத்தியிருந்தால் அரிசி, பருப்பு, காய் கரியை பார்பானுக்குப் படைத்து விழுந்து கும்பிட்டு “”இவற்றை இறந்து போன என் பெற்றோர்களுக்குக் கொண்டு போய் சேர்த்து அவர்களை மோக்ஷத்திற்கு அனுப்புங்கள்” என்று சொல்லுவானா?

தமிழனுக்குப் புத்தியிருந்தால் தன்னை சூத்திரன் என்றும், தீண்டப் படாதவன் என்றும் அழைக்கிற, கருதுகிற பார்ப்பானை, சகோதரன் என்றும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளை என்றும் ஒரு தேச மக்கள் என்றும் கருதி அவனோடு நட்புக் கொள்வானா?

தமிழனுக்குப் புத்தி இருந்தால் தன்னை தொட்டால் பாவம், தன் பாஷையைக் கேட்டால் தோஷம், தன்னை கோவிலுக்குள் கடவுள் இருக்கும் அறையில் அனுமதித்தால் தோஷம் என்று சொல்லும் பார்ப்பானுடன் கூடிக் கொண்டு தமிழ் மக்கள் கழகத்தைக் கெடுக்கவும் அவர்கள் முன்னேற்றத்தைத் தடுக்கவுமான தொண்டைச் செய்து ஒற்றுப் பார்ப்பானிடம் பிச்சை வாங்கிப் பிழைப்பானா?

தமிழ் மக்களுக்குப் புத்தியிருந்தால் கெஜம் 3 அணாவுக்கு விற்கும் அருமையான, நயமான துணியை வாங்கிக் கட்டுவதை விட்டு விட்டு கெஜம் 6, 7 அணாப் போட்டு ஆபாசத் துணியை தேசாபிமானம் என்னும் பேரால் வாங்கிக் கட்டிக் கொண்டுத் திரிவானா?

மோக்ஷத்திற்கு போக மலமூத்திரங்களை உண்பதற்கும் சுயராஜ்ஜியம் பெற கோணி ரட்டைக் கட்டுவதற்கும் என்ன வித்தியாசம் என்பதைக்கூட உணராமல் இருப்பானா என்று கேட்பதோடு தமிழ் மக்களுக்கு பெரும்பான்மை யானவர்களுக்குப் புத்தியும் இல்லை, சுயமரியாதையும் இல்லை என்பதற்கு இன்னும் இது போன்ற எத்தனை ஆயிரம் எடுத்துக் காட்டுகள் வேண்டுமானாலும் இருக்கின்றது என்று கூறத் தயாராய் இருக்கிறோம்.

  1. தமிழ் மக்களுக்குள் ஒற்றுமைக் குணம் கிடையாது என்பது பொய்யா என்று கேட்கின்றோம்.

தமிழ் மக்கள் தங்களைப் பார்ப்பனரால் 1008 ஜாதியாராகப் பிரிக்கப் பட்டு அவர்கள் முன்னோர்களால் செய்த புராண சரித்திர ஆதாரத்தோடு ஒவ்வொருவருக்கும் கீழ் மேல் நிலை கற்பிக்கப்பட்டு ஒருவருக்கொருவர் உண்பனை, தின்பனை, கொடுப்பனை, கொள்வனை, கூடி உறவாடுவன முதலிய ஐக்கிய பாவமற்றவைகளைச் செய்து கொண்டு ஒருவன் உண்பதை ஒருவன் பார்க்கக்கூட கூடாது என்கின்ற நியதி ஏற்படுத்தி ஒவ்வொருவன் தொழிலையும் ஜாதியையும் இழிவாக்கி ஒருவனிடம் ஒருவனுக்கு சரித்திரப்பூர்வமாகவே துவேஷமும் வெறுப்பும் உண்டாகும்படி செய்து மக்களைப் பிரித்து வைத்து ஒரு சிறு சோம்பேறிக் கூட்டத்தார் நோகாமல் பாடுபடாமல் வயிர் வளர்க்க வேண்டி சதாகாலமும் எல்லாத் தமிழ் மக்களும் ஒருவரோடு ஒருவர் விருப்பற்று துவேஷத்துடன் இருக்கும்படி செய்து இருப்பது பொய்யென்று யாராவது சொல்ல முடியுமா என்று பந்தயம் கட்டிக் கேட்கின்றோம்.

  1. தமிழ் மக்களுக்கு கல்வியில் விருப்பம் கிடையாது என்பது முழுதும் உண்மையற்றது என்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

இந்நாட்டுத் தமிழ் மக்களில் எத்தனைப் பேர் கல்வி கற்று இருக்கிறார்கள்? ஆரிய மக்களில் எத்தனை பேர் கல்வி கற்று இருக்கிறார்கள் என்கின்ற கணக்கைப் பார்த்தால் சுவாமிகளின் வாக்கு எத்தனை பரிசுத்தமானது என்பது விளங்கும். இன்று பள்ளி உபாத்தியாயர்கள் பெரிதும் பார்ப்பனர்களானதினாலும் பார்ப்பனர்களே தமிழ் மக்கள் பலருக்குக் குல குருவாய் இருப்பதாலும் இவ்விரு கூட்டத்தாரும் பார்ப்பனரல்லாத மக்களைப் பார்த்து “”உங்களுக்கு படிப்பு எதற்கு, நீங்கள் மாடு கன்று மேய்த்து ஏர் உழுபவர்கள் தானே, அன்றியும் உங்களுக்கு படிப்பு வருமா, உங்களுக்கு நாக்குத் திரும்புமா” என்றெல்லாம் கேட்டு அவர்களது தன்னம்பிக்கையைக் கெடுத்து உச்சாஹத்தைத் தடுத்து மனச் சோர்வை உண்டாக்கி மாடு மேய்ப்பதில், வண்டி ஓட்டுவதில், மோகத்தை உண்டாக்கி தமிழ் மக்களுக்கு கல்வி ஆசையில்லாமலும் கல்வி கற்க முடியாமலும் செய்ததை எந்த ஒரு யோக்கியமான பார்ப்பனராவது மறுக்க முடியுமா என்று கேட்க்கின்றோம்.

மற்றும் பார்ப்பனரல்லாத மக்கள் சூத்திரராகவும், கீழ் ஜாதியாராகவும் கற்பிக்கப்பட்டு விட்டதாலும், பார்ப்பனரல்லாதாருக்கு கல்வி கற்பிக்கப்படாது என்றும், கல்வி கற்பதும் கூடாததென்றும், மனுதர்ம நூல் முதலியவைகளில் இருப்பதால் அதனாலும் பார்ப்பனரல்லாதார் கல்வி கற்கவும் ஆசைப்படவும் முடியாமல் போனதோடு மற்றும் பார்ப்பனரல்லாத மக்கள் பெரிதும் 5 வயது முதலே பாடுபட்டால்தான் அவர்களது குடும்பம் வாழ முடியும் என்கின்ற மாதிரியில் வாழ்க்கை ஏற்படுத்தப்பட்டு விட்டதாலும், தமிழ் மக்களுக்கு கல்வி ஏற்படவும் ஆசை உண்டாகவும் இடமில்லாமல் போய்விட்டது என்பது பொய்யா மெய்யா என்று கேள்க்கின்றோம்.

சமஸ்கிருத நீதி நூல் ஒன்றில் “”குளித்த குதிரை, மதம் பிடித்த யானை, படித்த சூத்திரன்  இம் மூன்றையும் கிட்ட சேர்க்கலாகாது” என்று ரிஷிகள் வாக்கே இருக்க, இந்நிலையில் எந்தப் பார்ப்பனரல்லாதாரையாவது படிக்க பார்ப்பனர்கள் வசதி செய்து கொடுத்திருப்பார்களா என்றும் கேட்கின்றோம்.

  1. மேல் நாட்டார் இங்கு வருமுன் உயர்ந்த பள்ளிக்கூடம் இங்கு கிடையாது என்பது.

இப்படி எழுதின அப்பத்திரிகையாவது ஆங்கிலேயர் வருவதற்கு முன்னோ, அல்லது ஆரிய அரசர்கள் காலத்திலோ ஏதாவது பள்ளிக்கூடங்கள் இருந்ததாக இரண்டு ஒரு பள்ளிக்கூடத்தின் பெயர்களையாவது குறிப்பிட்டதா அல்லது இனியாவது குறிப்பிட முடியுமா? என்று கேள்க்கின்றோம். இதைப் பற்றி மிஸ் மேயோ அம்மையாரே எழுதி இருக்கிறார்கள். பார்ப்பனரல்லாத மக்கள் படிக்கக் கூடாது என்றும், படித்தால் நாக்கை அறுக்கவும், கேட்டால்கூட காதில் ஈயத்தைக் காச்சி ஊற்றவும் ஏற்படுத்தி இருக்கும் சாஸ்திர தர்மம் யாரும் அறியார்கள் என்று நினைத்துக் கொண்டு இப்பத்திரிகை மனப்பால் குடிக்கின்றதா என்று கேட்கின்றோம்.

முதலாவது ஆங்கிலேயர்களுக்கு முன் புஸ்தகம், காகிதம், சிலேட்டு ஏதாவது இருந்தது என்று யாராவது சொல்ல முடியுமா? படிக்கும் விஷயம் தான் ஏதாவது இருந்ததா?

குறள், தொல்காப்பியம் என்பது போல் ஏதோ சில நூல்கள் இருக்கின்றதே அது எப்படி வந்தது என்று சொல்லுகின்றது அப்பத்திரிகை.

இது மனதறிந்த அக்கிரமமான சமாதானம். ஏனெனில் தொல்காப்பியம், குறள் படித்தவர்கள் லட்சத்தில் ஒருவர் இருப்பார்கள். அதுவும் பள்ளிக்கூடத்தில் படிக்காமல் யாரோ ஒருவர் மூலம் ஒருவர் பாட்டாகக் கேட்டு நெட்டுருப் பண்ணி வைத்திருந்தால் அவர்கள் பெரிய வித்வான்களாக ஆகி விடுவார்கள். அவ்வளவு தான் படிப்பே ஒழிய பள்ளிக்கூடம் வைத்து பிள்ளைகள் அங்கு போய் எழுதுவது, படிப்பது என்பவைகள் தாராளமாய் இருந்ததாக எந்த ஆதாரத்திலும் எவராலும் சொல்லப்படவே இல்லை. அதனாலேயே தான் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் தாராளமாய் 10000க்கு ஒருவர் இருவர் படித்ததாகவும் காணப்படவில்லை.

  1. தமிழர்கள் கைக்கூலி கொடுக்கிறார்கள் என்பது?

பார்ப்பனர்கள் அதிகாரம் வகிக்க ஆரம்பித்தது முதல் கொண்டே இந்நாட்டில் லஞ்சம் எவ்வளவு தாராளமாகக் கடையில் கத்தரிக்காய், பீடி, சிகரெட் வாங்குவது போல் எவ்வளவு மலிவாக இருந்து வருகின்றது என்பதை நாம் எடுத்துச் சொல்லவும் வேண்டுமா?

பார்ப்பனர்களே அதிகாரிகளானதாலும், பார்ப்பனர்களே வக்கீல்கள், குமாஸ்தாக்கள் ஆனதினாலும், லஞ்சம் எவ்வளவானாலும் பெரிதும் எப்படியாவது பார்ப்பனர்களுக்கே போய்ச் சேரக்கூடியதாய் இருந்தாலும் லஞ்சத்தைத் தாராளப்படுத்தவும் அவசியமாய் செல்வாக்குப் படுத்தவும் ஏற்பட்டதோடு அது மக்களைக் கவர்ந்தும் விட்டது.

லஞ்ச விஷயத்தைப் பற்றி சுவாமிகள் மாத்திரமல்ல, நாம் மாத்திரமல்ல, அனேக பெரியார்கள், அதிகாரிகள், ஐரோப்பிய உத்தியோகஸ்தர்கள் என்பவர்களெல்லாம் வண்டி வண்டியாய் சொல்லி இருக்கிறார்கள்.

மற்றும் ஹைக்கோர்ட்டு முதல் அரசாங்க தலைமை ஸ்தாபனங்கள் முதல் ரயில்வே, காபீஸ்ட் இலாக்கா, பஞ்சாயத்து கோர்ட், கிராமக் கோர்ட்டு உள்பட அவற்றிற்குள் நுழைகின்றவர்கள் ஒவ்வொருவரும் 100க்கு 90க்கு மேம்பட்டவர்கள் லஞ்சம் கொடுத்து காரியத்தைச் சாதிக்கும் வக்கீல்களையே தேடிப் பிடிக்கிறார்கள் என்பதும் அதற்குண்டான சகல வழிகளையும் வக்கீல் களும், அவர்களது சிப்பந்திகளும் கற்றுக் கொடுத்து அவர்களை நடத்து கிறார்கள் என்பதும் ஒரு சிறிதாவது மறுக்கக் கூடியதா என்று கேட்கின்றோம்.

  1. உத்தியோகம் பெற எதையும் செய்கிறார்கள் என்பதை உண்மை அல்ல வென்று சொல்ல முடியுமா என்று கேட்கின்றோம்.

இந்த விஷயம் வெளிப்படையான இரகசியமாகும்.

கொஞ்சகாலத்துக்கு முன் திருச்சியில் ஒரு சின்ன அதிகாரி ஒரு பெரிய அதிகாரி ஒருவருக்கு தன் மனைவியை அனுப்பியதில் அப்பெரிய அதிகாரி அப்பெண்ணின் மார்பின் முனையைக் கடித்து விட்ட சேதி யாரும் அறியாததா.

மற்றும் கும்பகோணத்தில் ஒரு உயர்தர அதிகாரிக்கு ஒரு கீழ்த்தர அதிகாரி தன் சகோதரியை அனுப்பி அந்தம்மாள் அவரோடு கூடவே இருந்து கொண்டு வர மாட்டேன் என்று சொன்னது யாரும் அறியாததா. மற்றும் சில ஜில்லா பெரிய அதிகாரிகள் செல்லுமிடங்களுக்கெல்லாம் ஒரு குறிப்பிட்ட சின்ன அதிகாரியை தன்னுடைய சாமான்கள் போலவே கூட அழைத்துக் கொண்டு போவது என்பதும், அதனால் அந்த சின்ன அதிகாரி தனது யோக்கியதைக்கு மீறின பதவிகள் பெறுவதும் கோவை ஜில்லாவில் பல தடவை நடந்த சம்பவங்களாகும்.

மற்றும் வேறு எத்தனையோ விதங்களில் இம்மாதிரியான பிரஸ்தாபங்கள் சர்வ சாதாரணமாகவே பலவிடங்களிலும் வழங்கி வருவதானது யாரும் அறியாதது என்று சொல்லிவிட முடியுமா?

  1. பணம் சேர்ப்பதற்கே கல்வி கற்கின்றார்கள் என்பது.

இதைக்கூட தப்பு என்று சொல்ல வந்ததானது வேண்டுமென்றே செய்யப்படும் போக்கிரித்தனமான புகார் என்பதற்கு வெளிப்படையான உதாரணமாகும்.

இன்றைய கல்வி, அறிவுக்குப் பயன்படாததென்றும் வயிற்றுப் பிழைப்பிற்கு அதுவும் அடிமை பிழைப்பு பிழைத்து வயிறு பிழைப்பதற்கு என்றும் சொல்லாதவர்கள் யாருமே இல்லை. அப்படிப்பட்டவர்களும், அவர்களது பிள்ளை குட்டிகளும் மறுபடியும் அக் கல்வியையே கற்கின்றார்கள் என்றால் வேறு எதற்காக அவர்கள் கற்கிறார்கள் என்பதை அப் பத்திரிகை யாவது கூறி இருக்க வேண்டாமா?

இன்று கல்வி கற்றவர்கள் என்கின்ற கூட்டத்தில் சேர்ந்த எவராவது அக்கல்வியை பணம் சம்பாதிப்பதைவிட வேறு காரியத்துக்கு உபயோகப் படுத்துகிறார்களா? அல்லது கற்ற  ஆ.அ., M.அ., டாக்டர்கள் என்பவர்களுக்காவது அறிவு ஏற்பட்டிருக்கிறது என்று சொல்ல முடியுமா? எத்தனை டாக்டர்கள் தூரமான தன் பெண்ணை தெருவில் தள்ளி கதவைச் சாத்துகிறதைப் பார்க்கிறோம்.

எத்தனை பூகோள சாஸ்திரிகள் கிரகணத்துக்கு சமுத்திரக்கரையில் மூக்கைப் பிடித்து உட்கார்ந்திருப்பதைப் பார்க்கிறோம்.

எத்தனை பிரபல நியாயவாதிகள், தர்க்கவாதிகள் தாங்கள் மோட்சம் போக கல்லைக் கும்பிடுவதைப் பார்க்கின்றோம். இவர்கள் எல்லாம் புத்திக்காக படித்தவர்களா பணம் சம்பாதிக்கப் படித்தவர்களா என்று கேட்கின்றோம்.

உரலை நினைத்து அவலை இடிப்பது போல் பார்ப்பனப் பத்திரிகைகள் வேறு ஏதோ காரணம் வைத்துக் கொண்டு இந்தப் போக்கிரித்தனமான வேலையில் பிரவேசித்து இருக்கின்றன.

அவர்களது சூட்சித் திரமும், விஷமத் திரமும் இப்புத்தகத்தைப் படிக்கக் கூடாது என்று செய்வதில் வெற்றி அளித்துவிடலாம்.

அல்லது சில வாக்கியங்களை எடுத்துவிட வேண்டுமென்று செய்தாலும் செய்து விடலாம்.

பிறகு பாட புத்தக விஷயத்தில் எப்படிப்பட்ட கொள்கை அனுசரிக்க வேண்டும் என்பதில் என்ன செய்ய வேண்டும் என்பது நமக்குத் தெரியும்.

தமிழ் மக்களும், தமிழ் பண்டிதர்களும் தமிழ் ரத்தமோடும் தமிழ் அபிமானிகளும் இத்தகைய சீர்கேட்டை நிவர்த்தித்து சரியான நடைமுறையில் நடத்த அமைக்கப்பட்ட அதிகார வர்க்கங்களும் அவைகளை நிர்வகிக்கும் மந்திரி வர்க்கங்களும் பின்னால் என்ன செய்வார்கள், அல்லது அவர்கள் என்ன கதி அடைவார்கள் என்பதைப் பார்க்கவே காத்திருக்கிறோம்.

இதற்கு ஆக ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் கிளர்ச்சி செய்து இதன் காரணமாகவாவது பாட புத்தக அமைப்புக்கு ஒரு நல்ல காலம் வரட்டும் என்று ஆசைப்படுகின்றோம்.

பார்ப்பனர்களில் ஒருவருக்கு ஒரு விஷயம் பட்டால் அது கம்பியில்லாத தந்தி போல் ஒவ்வொரு பார்ப்பனர் உள்ளத்திலும் படிகின்றது.

பார்ப்பனரல்லாதாரோ சிலர் இதன் மூலம் வயிறு கழுவ பார்ப்பனருக்கு அடிமையாகிறார்கள்.

வெட்கம்!  வெட்கம்!!

எதற்கென்று அழுவது!!!

குடி அரசு  தலையங்கம்  11.08.1935

You may also like...