‘முன்னோடி-பின்னோடி’ வாதங்களுக்கு மறுப்பு (2) சைவம் ‘பார்ப்பன புரோகிதத்தை’ மறுத்ததா?

‘தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டம்’ இதழில் வெளியான தோழர் வெ.மணியரசன் கட்டுரைக்கு மறுப்பு. சென்ற இதழ் தொடர்ச்சி.
தமிழர் வாழ்க்கை நிகழ்வுகளில் புரோகிதர்களை நீக்கிட வேண்டும் என்ற இயக்கத்தை 1916 ஆம் ஆண்டிலேயே மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கம் தொடங்கிவிட்டது என்றும், அதற்குப் பிறகு 1926இல் தான், பெரியார் அதைக் கையில் எடுத்தார் என்றும் தோழர் பெ.மணியரசன், ‘தமிழ்த் தேசிய தமிழர் கண்ணோட்டத்தில்’ (2014, மே 15) எழுதியிருந்தது உண்மைக்கு மாறானது என்பதை கடந்த இதழில் விளக்கியிருந்தோம். ‘புரோகிதர் விலக்கு’ பெரியாருக்கு முன்பே தொடங்கிவிட்டது என்று நிலைநாட்ட பெ.மணியரசன் செய்த ‘ஆராய்ச்சி’யை மறுத்து கீழ்க்கண்ட கருத்துகளை முன் வைத்தோம்.
முதலாவதாக ‘புரோதர் விலக்கை’ 1916இல் தொடங்கிய மறைமலையடிகள் 1927இல் நடந்த அவர் மகளின் திருமணத்தை பார்ப்பன புரோகிதரை வைத்தே நடத்தினார். இரண்டாவதாக பார்ப்பனப் புரோகிதர்கள் என்பவர்களே ஆதித் தமிழர்கள்தான் என்பதே மறைமலை அடிகளின் கருத்து. ‘பார்ப்பன புரோகிதர்கள்’ ஆதித் தமிழர்கள் என்று கருதிய மறைமலை அடிகள், ‘புரோகித விலக்கு’ கொள்கை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும்? கா.சு.பிள்ளை போன்ற தமிழறிஞர்கள்கூட மறைமலை அடிகள் தனது வீட்டுத் திருமணத்தை பார்ப்பனரை வைத்து நடத்தியதை விரும்பவில்லை.
மறைமலை அடிகள், மகள் திருமணம் முடிந்து ஓரிரு மாதங்களுக்குப் பிறகு தமிழறிஞர்களைச் சந்தித்து ‘புரோகித விலக்கம்’ குறித்து விவாதித்தனர்.
இந்தச் சந்திப்பு பற்றி ‘குடிஅரசு’ இதழில் (26.12.1928) மதுரை அ.சொ. அருணாசலம் என்பவர் ‘தமிழில் புரோகிதம் வேண்டும்’ என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில் குறிப்பிடுகிறார். அதில் சிங்காரவேலர், கா.சு. பிள்ளை, மறைமலையடிகள், கஜேந்திர முதலியார், ஈ.வெ.ராமசாமி சந்தித்துப் பேசிய பிறகும் புரோகித விலக்குக்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிடுவ தோடு, இந்த முயற்சி வெற்றி பெற புரோகித நம்பிக்கையாளர்கள் வட மொழியைத் தவிர்த்து தமிழில் வேண்டுதல் செய்வது அவசியம். அதன் மூலம் புரோகிதர் கொள்ளையைத் தடுக்க முடியும் என்று வலியுறுத்துகிறார்.
இவ்வளவுக்கும் பிறகு புரோகித பார்ப்பன எதிர்ப்பை தீவிரமாக நடத்தி வந்த சுயமரியாதை இயக்கத்தை ஒழிப்பதற்கே இந்த “புரோகித எதிர்ப்பு வீரர்கள்” தொடை தட்டிக் கிளம்பினார்கள் என்பதை ‘சைவ சமயம்’ என்ற தலைப்பில் பெரியார், ‘குடிஅரசு’ இதழில் (7.10.1928) எழுதிய தலையங்கம் வெளிச்சப்படுத்துகிறது.
பெரியாரின் தலையங்கம் – சைவ மதக்காரர்களின் பார்ப்பன புரோகித எதிர்ப்பையே கேள்விக் குள்ளாக்குகிறது. பெரியார், அத் தலையங்கத்தில் அழுத்தமாக எழுப்பும் கேள்விகள் முன் வைக்கும் வாதங்கள் என்ன?
1. பார்ப்பன வேதம், பார்ப்பன புராணம், பார்ப்பன வேள்வி மற்றும் சங்கராச்சாரிகளை எதிர்ப்பதாக வும் அவற்றோடு தங்களுக்கு ஒட்டு உறவு கிடை யாது என்றும் கூறும் சைவ சமயத்துக்காரர்கள் தங்கள் கடவுளான ‘சிவனு’க்குமட்டும் கந்த புராணம், சிவ மகாபுராணத்திலிருந்து ஆதாரம் தேடுவது ஏன்?
2. இந்தப் புராணங்களை ஒதுக்கிவிட்டால், சைவத்தில் சிவனுக்கு ஏதாவது இடம் இருக்கிறது என்று கூற முடியுமா?
3. சைவம் உட்பட இந்து, வைணவக் கடவுள்களை எல்லாம் எடுத்துக் கொண்டால் அந்தக் கடவுள்கள் எல்லாம் தேவர்களின் யாகத்தை எதிர்த்து வந்த ‘அரக்கர்’களை அழித்த வர்கள் என்கிற அடிப்படையில் சித்தரிக்கப்படுபவர் களாகவேத் தானே இருக்கிறார்கள்? தேவர்கள் யாகத்தைக் காப்பது என்ற ஒன்று மட்டுமே கடவுள் கோட்பாடாக இருப்பது ஏன்?
4. சைவ சமயத் தலைவர்கள் என்பவர்களும்கூட வேதங்களையும் யாகங்களையும் காப்பாற்று வதற்கும் அவற்றை எதிர்த்தவர்களை அழிப் பதற்கும் தோன்றியவர்கள்தான் என்பதை மறுக்க முடியுமா?
5. வேதம், யாகம், அவற்றைக் காப்பாற்ற வந்த கடவுள் கள், ஆரியர்களால் புனையப்பட்ட புராணங்கள் இவற்றை ஒதுக்கி விட்டால் ‘சைவம்’ என்ற ஒன்றே வேறு இல்லை என்பதை மறுக்க முடியுமா?
6. தேவாரத்துக்கோ திருவாசகத்துக்கோ ‘தமிழ் மறைக்கோ’ சைவத்தில் எங்கேயாவது இட மிருக்கிறதா?
7. சைவம், ஆகமம், தேவாரம், திருவாசகம் என்ற வார்த்தைகளும் சைவக் கடவுள்களின் பெயர் களும் கடவுள்களின் மனைவி, பிள்ளைகளின் பெயர்களும் முழுதும் ஆரிய மொழியிலேயே இருப்பது ஏன்? அப்பெயர்களுக்கு புனையப்படும் கதைகளும் புராணங்களும் பெரும்பாலும் ஆரிய மூலத்திலிருந்து மொழி பெயர்க்கப்பட்டதாக இருப்பது ஏன்?
– என்ற கேள்விகளை எழுப்பும் பெரியார் சமயம்-சைவம்-வைணவம் என்பவை பார்ப்பன ஆதிக்கத் துக்கு உழைக்கும் நிறுவனங்களாகவே இருக்கின்றன என்றும், இதை தெரிந்தோ, தெரியாமலோ துணைப் போய்க் கொண்டிருக்கிறார்கள் என்றும் எடுத்துக் காட்டுகிறார்.
(பெரியார் தலையங்கம் கீழே வெளியிடப் பட்டுள்ளது)
தமிழ் மதம் எனக் கூறப்படும் சைவச் சமயத்தில் உள்ள ஆரியக் கூறுகளை விளக்கிக் கூறி தமிழர் மரபும், இந்து மதமும் – மரபு எது, மதம் எது என்று பிரித்துப் பார்க்க இயலாத வகையில் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன என்பதை பெரியார் விளக்கியுள்ளார்.
• இப்போது கூட ‘முருகனை’ தமிழ்க் கடவுளாகக் காட்ட சிலர் முனையும்போது சுப்பிரமணியன் வேறு முருகன் வேறு என்று பிரித்துக் காட்ட முடியாமலும், முன்னர் மனைவியாக இருந்த வள்ளி, ஆரிய ஊடுறுவலுக்குப் பின்னர் தெய்வானை என்ற சட்டபூர்வ மனைவிக்குப்
பிறகு முருகனுக்கு வந்து சேர்ந்த வைப்பாட்டியாகத்தான் தமிழர் மனதில் ஆழ வேரூன்றியுள்ளார் என்பதையும் அறியமுடிகிறது.
• ‘மாயோன்’ என்பதில் மா என்ற சொல்லுக்குள்ள கருப்பு எனும் பொருளைக் கருதி திருமாலாக – கருமைநிறக் கண்ணனாக – விளக்குகிறார்கள். அந்த கண்ணன் எனும் தலைவனும் கூட நப்பின்னை என்ற தலைவியைத் தான் இணையாகக் கொண்டிருந்ததாகக் கூறுகின்றன பழந்தமிழ் நூல்கள் சில. இப்போது கண்ணனும் கிருஷ்ணனும் கலந்து போயுள்ள சூழலில் தலைவிகளாக பாமா, ருக்குமணியையும், அதைவிட வேடிக்கையாக பிறன் மனைவியாகிய இராதாவையும்தான் கருதும் போக்குள்ளதே தவிர நப்பின்னையை நினைப்போர் ஒருவரும் இலர்.
• பரிபாடல் திருமுருகாற்றுப்படை போன்ற சங்க இலக்கியங்கள் கூற்றுப்படி முருகனுக்கு வயது 2000. ஆனால், 1300 ஆண்டுகளுக்கு முன்பு மட்டுமே அறிமுகமான ‘வினாயகன்’ எப்படி முருகனுக்கு அண்ணன் ஆனான்?
இப்படி ஆரியம் சைவத்தை விழுங்கியுள்ள நிலையில் ‘புரோகித விலக்கு’ கொள்கையில் தனித் தமிழ் இயக்கம் தான் பெரியாருக்கு முன்னோடி என்பது புரட்டல் வாதமல்லவா? அதுமட்டுமல்ல, ‘புரோகித’ எதிர்ப்பை முன்னெடுத்த பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தையே எதிர்த்தவர்கள் இந்த சைவர்கள்.

சைவம் : பெரியார் எழுப்பும் கேள்விகள்!
சமயம் என்பதைப்பற்றி சென்ற வாரம் ஒரு தலையங்கம் எழுதியிருந்தோம். இவ்வாரம் சைவ சமயம் என்பது பற்றி எழுதுகின்றோம்.
கொஞ்ச காலமாக சைவ சமயத்தின் பேரால் சிலர் போடும் கூச்சல் அளவுக்கு மேல் போகின்றது. சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக வேண்டும் என்று கட்சி சேர்க்கின்றார்களாம். அரசியல் பிழைப்புக்காரர்கள் சிலர் அப்படித்தான், அதாவது, “சுயமரியாதை இயக்கத்தை ஒழித்தாக வேண்டும் , அதை ஒழிக்காவிட்டால் சுயராஜ்யம் தடைபட்டுப் போகும்” என்று கூச்சல் போட்டார்கள். கூலி கொடுத்தும் கூச்சல் போடச் சொன்னார்கள். அவ்வளவு கூச்சல்களையும் அடக்கிக்கொண்டு இப்போது நமதியக்கம் தலைநிமிர்ந்து நிற்கின்றதையும் அரசியல்காரர்களில் பெரும்பாலோரும் இதை ஆதரிப்பதையும் பார்த்து ஒருவாறு அடங்கிவிட்டார்கள். இப்போது சைவ சமயத்தார்கள் என்று சொல்லிக் கொள்ளுபவர்களில் சிலர் கிளம்பி சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க வேண்டுமென பிரச்சாரம் செய்து வருகின் றார்கள். இச்சைவ சமயத்தார்கள் என்பவர்கள், சுயமரியாதை இயக்கம் பார்ப்பனீயத்தையும், பார்ப்பனர்களையும் கண்டிக்கும் பொழுதும், வைணவ சமயத்தையும் வைணவர்களையும் கண்டிக்கும் பொழுதும் ஆனந்தக் கூத்தாடிக் கொண்டு நம்மீதும் சுயமரியாதை இயக்கத்தின் மீதும் புகழ் புராணமும் கவியும் பாடிக்கொண்டிருந்தார்கள்.
அதாவது, பார்ப்பன ஆதிக்கத்தை கண்டித்து சங்கராச்சாரியாரை தாக்கி வரும் போது நமக்கு உதவியும் செய்தார்கள். பிறகு வைணப் புராணங்களின் வண்டவாளங்களை வெளியாக்கும் போதும் நமக்கு உதவி செய்து வந்தார்கள். இதுமாத்திரமல்லாமல், இந்து மதம் என்பதாக ஒரு மதம் இல்லையென்றும் இந்துமதம் என்று சொல்லப்படுவது பார்ப்பனாதிக்கக் கொள்கைகள் கொண்டது என்றும் சொல்லும் போதும் அதை ஆதரித்து அதற்கும் வேண்டிய ஆதாரங்கள் உதவி வந்தார்கள்.
கடைசியாக சைவ மதப் புராணங்கள் என்பவைகளின் முறையில் அவற்றின் யோக்கியதைகளை வெளியாக்க நேரிட்டபோது மாத்திரம் ‘சுயமரியாதை இயக்கம் சமயங்களுக்கு ஆபத்தை விளைவிக்கின்றது; மோட்சத்திற்குத் தடையாய் நிற்கின்றது’ என்று சொல்ல வந்து விட்டார்கள்.
எனவே சைவ மதம் என்றால் என்ன? அது பார்ப்பன மதமல்லாமல் வேறு தனி மதம் என்றோ அல்லது தமிழ் மக்கள் மதம் என்றோ யாராவது சொல்ல முடியுமா? என்பதை முதலில் கவனிக்க விரும்புகின்றோம்.
நம் நாட்டு சைவர்கள் பெரும்பாலும் தாங்கள் ‘பார்ப்பன மதத்தை வெறுக்கின்றோம்’ என்கின்றார்கள். அன்றியும் பார்ப்பனர்களது மத ஆதாரம் என்பவைகளாகிய நான்கு வேதங்கள் என்பதையும் சைவர்கள் தங்களுக்கு சம்பந்தப்பட்டதல்ல என்கின்றார்கள். பார்ப்பனர்களின் “மோட்ச” சாதனமான வேள்விச் சடங்குகளையும் தாங்கள் ஒப்புக் கொள்ளுகின்றதில்லை என்கின்றார்கள். மற்றும் புராணங்கள் என்பவைகளையும் ஆரிய சா°திரங்கள் என்பவைகளையும் தாங்கள் ஒப்புக்கொள்ள முடியாது என்பதுடன் அவைகள் பொய் என்றும் கற்பனை என்றும் சொல்ல முன் வந்திருக்கின்றார்கள். பார்ப்பன ஆச்சாரியார்களும் அதாவது சங்கராச்சாரி போன்றார்களும் தங்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் அல்ல என்றும் சொல்லுகின்றார்கள்.
மற்றும் எவ்வளவோ, அதாவது, “ஆரியன் கண்டாய்! தமிழன் கண்டாய்!” என்று ஆரியத்தையும் தமிழையும் பிரித்து ஆரியத்திற்கும், தங்களுக்கும் தங்கள் சைவ மதத்திற்கும் சிறிதும் சம்மந்தமில்லை என்றும் தாங்கள் தனித் தமிழ்ச் சமயத்தார் என்றும் சொல்லிக்கொள்ளுவதுடன் அதற்கு வேண்டிய ஆதாரங்களையும் கண்டு வைத்திருக்கின்றார்கள். உதாரணமாக ‘தென்னாட்டு சிவனே போற்றி’ என்றும் பிரித்துச் சொல்லுகின்றார்கள். எனவே இந்நிலையில், சைவ மதம் என்றால் என்ன?
முதலாவதாக, கற்பனை என்றும் பொய் என்றும் ஆபாசமென்றும் அசம்பாவிதம் என்றும் சொல்லும்படியான கந்தபுராணம், சிவமகா புராணம் முதலாகிய புராணங்களை ஒதுக்கி விட்டு பார்த்தால் சிவனுக்கோ, சைவத்திற்கோ ஏதாவது கடுகளவு இடம் இருக்கின்றதா என்பதை கூர்ந்து நோக்கும்படி வாசகர்களை கேட்டுக் கொள்ளுகின்றோம்.
இரண்டாவதாக, இந்து மதத்தையோ, வைணவ மதத்தையோ, சைவ மதத்தையோ தனித்தனியாகவோ பொதுவாகவோ எடுத்துக் கொண்டு பார்ப்போமேயானால் அவைகளிலுள்ள பொதுவான கடவுள்களும், வைணவ, சைவ கடவுள்களும், சுரர்கள் என்னும் “தேவர்”களின் வேள்வி என்னும் யாகத்தை அழித்து வந்த அசுரர்கள் என்னும் “அரக்கர்களை” கொன்று வென்று யாகத்தைக் காக்க வந்தது என்கின்ற அ°திவாரம் தவிர வேறு மார்க்கத்தில் வந்த கடவுள்கள் ஏதாவது எங்காவது இருக்கின்றனவா? என்று பார்க்கும்படி வேண்டுகின்றோம்.
அல்லது பார்ப்பனர்கள் என்னும் ஆரியர்களின் வேதத்தை ஒப்புக் கொள்ளாததினாலோ, நிந்தித்ததினாலோ உலகம் “நீதியும் ஒழுக்கமும் கெட்டுப் போய்விட்டது” என்று சொல்லிக் கொண்டு அவதாரம் செய்ததாகவோ தோன்றியதாகவோ அல்லாமல் வேறுவழியில் வந்த ஏதாவது கடவுள்கள் உண்டா? இருக்கின்றனவா?
இந்து, வைணவ, சைவ சமய சம்மந்தமான எந்த புராணமும் இதைத் தவிர வேறு என்ன காரணங்களாவது கற்பிக்கின்றனவா?
உதாரணமாக, சைவ சமயச்சாரியார்கள் என்பவர்களும், “வேத வேள்வியை மக்கள் நிந்தனை செய்ததால் தோன்ற வேண்டியவர்களானார்கள். வேத வேள்வியை நிந்தனை செய்த மக்களையும் அழித்து வேத வேள்விச் சமயத்தையும் கடவுள்களையும் ஆதரிக்க வேண்டியவர்களானார் கள்” என்பதை யாராவது மறுக்க முடியுமா என்று கேட்கின்றோம்.
மற்றும் வேதத்தையும் வேள்வியையும் தள்ளிவிட்டு அவற்றைக் காப்பாற்ற வந்த கடவுள்களையும் தள்ளிவிட்டு ஆரியர்களால் புனையப்பட்டது என்கின்ற புராணங்களையும் தள்ளிவிட்டால், தேவாரத்திற்கோ, திருவாசகத்திற்கோ மற்றும் “தமிழ் மறை”க்கோ எங்காவது இடமிருக்கிறதா என்று கேட்கிறோம்.
சிவம், சைவம், ஆகமம், தேவாரம், திருவாசகம் என்ற வார்த்தைகளும் ஆரியத்தை அடிப்படையாகக் கொண்டவை என்னும் வழக்கை சுலபத்தில் தள்ளிவிட முடியாது. மற்றும் சைவக் கடவுள்கள் பெயரும் அக் கடவுள்களின் பெண்ஜாதி பிள்ளைகளின் பெயரும் அனேகமாய் முழுதும் ஆரியபாஷைப் பெயர்களே தவிர வேறில்லை. மற்றும் அப் பெயர்களுக்கு ஏற்ற காரணங்களும் அக்காரணங்களுக்கு ஆரியர்களால் கற்பிக்கப்பட்ட கதைகள்தான் ஆதாரமே ஒழிய வேறில்லை. மற்றும் அப்பெயர்களுக்கும் கதைகளுக்கும் ஏற்படுத்தப்பட்ட புராணங்கள் என்பவைகளும் பெரிதும் ஆரிய மூலத்திலிருந்து மொழி பெயர்த்ததாகச் சொல்லப்படுப்பவைகளே யல்லாமல் வேறல்ல.
நிற்க. சைவ சமயம் தென்னாட்டில் பரவி இருக்கின்ற அளவு மற்ற நாட்டில் அதாவது வடநாட்டில் பரவி இருப்பதாக சொல்ல முடியுமா? வட நாடு முழுவதும் ஏறக்குறைய வைணவ மதம் என்றே சொல்ல வேண்டும்.
தென்னாட்டில் மாமிசம் சாப்பிடாதவனுக்கு எப்படி சைவன் என்று சொல்லப்படுகின்றதோ அதுபோல வடநாட்டில் மாம்சம் புசிக்காதவனுக்கு வைஷ்ணவன் என்று சொல்லுவதுண்டு.
தென்னாட்டிலும் சமயத்தை ஏற்றுக் கொண்டவர்கள் சிலர் என்றுதான் சொல்லவேண்டும். அதிலும் சைவ சமயத்தார்களோ சைவ சமயம் இன்னது என்று அறிந்தவர்களோ வெகு சிலர் என்றுதான் சொல்லவேண்டும். பாக்கியுள்ள மக்கள் அதாவது 100 – க்கு 90 – பேர்கள் மாரி, கருப்பன், மாடன், மதுரை வீரன், பேச்சி என்பது போன்ற கடவுள் வணக்கக்காரரும் மற்றும் ஒரு சிலர் சைவ வைணவக் கடவுள்களையும் இக்கூட்டத்தில் சேர்த்துக் கொண்டிருக்கின்றவர்களுமே தவிர வேறல்ல.
ஏதோ பழைய காலத்து அரசர்கள் தங்கள் மடமையினால் கட்டி வைத்த கோவில்களும் அவர்கள் விட்ட சொத்துக்களால் நடக்கும் உற்சவங்களும், இப்போது சில கொடுமைக்காரர்கள் மக்களிடத்திலிருந்து அநியாய வழிகளில் கொள்ளையடித்து சம்பாதித்த பணத்தைக் கொண்டு கீர்த்திக்கும் தங்களை உயர்த்திக் கொள்வதற்கும் சிலர் தாங்கள் செய்த கொடுமையினால் ஏற்படும் பாவத்தைத் தொலைப்பதற்கும் என்று பழுது பார்ப்பதும் புதுப்பிப்பதும் இல்லாவிட்டால் இவ்வளவு பெருமைகள் கூட சொல்லிக் கொள்ள வகை இருக்காது என்றே சொல்லலாம்.
சமயம் என்பதும், வைணவம் என்பதும், சைவம் என்பதும் என்ன என்று பொதுவாக யோசிக்குமிடத்தில் பார்ப்பனர்களுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு தங்களை அறியாமல் பார்ப்பனியத்திற்கும் பார்ப்பன ஆதிக்கத்திற்கும் உழைக்கும் சாதனங்களா அல்லவா என்பதை நிதானித்து நடுநிலைமையில் இருந்து பார்த்தால் யாருக்கும் விளங்காமல் போகாது.
எனவே இப்படிப்பட்ட சைவத்தைப்பற்றியோ சமயத்தைப் பற்றியோ ஏதாவது எழுத நேரிடுவதால் “நாட்டின் ஷேமத்திற்கோ மக்களின் மோட்சத்திற்கோ” எவ்விதமான ஆபத்துக்கள் எப்படி நேரிட்டு விடும் என்பதைப்பற்றி விருப்பு வெறுப்பின்றி நிதானமாய் யோசித்துப் பார்க்கும்படி வாசகர்களை வேண்டிக் கொள்ளுகின்றோம். (பெரியார், ‘குடிஅரசு’ 7.10.1928)

இது குறித்து அடுத்த இதழில் எழுதுவோம்.

தொடரும்

பெரியார் முழக்கம் 03072014 இதழ்

You may also like...

Leave a Reply