மாநில உரிமைகளில் மற்றொரு குறுக்கீடு

மாநிலத்தில் உள்ள நிலங்களும் கனிமங்களும் மாநில உரிமைகளுக்கு உட்பட்டவை என்று சட்டத்தின் ஏழாவது அட்டவணையில் 18 வது பிரிவு திட்டவட்டமாக கூறுகிறது. இந்த மாநில உரிமையை பறிக்கும் மசோதாவை கடந்த ஆக-13, அன்று எந்த விவாதமும் இல்லாமல் நிறைவேற்றி இருக்கிறது ஒன்றிய ஆட்சி.

சுரங்கம் மற்றும் கனிமவள சட்டத் திருத்தத்தின் படி வரிவிதிப்பு உரிமையை ஒன்றியஆட்சி கையில் எடுத்து இருக்கிறது. மாநில அரசுகளின் வரி விதிக்கும் உரிமையை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கிறது. மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள உரிமையைப் பறித்து கூட்டாட்சி தத்துவத்தையே குலைக்கிறது இந்தச் சட்டத் திருத்தம்!

முதலமைச்சர் விஜய் தனது சுதந்திர நாள் உரையில் ஒன்றிய ஆட்சியோடு நிர்வாக ரீதியாக ஒத்துழைப்போம் என்றும் மாநில உரிமையை விட்டுத்தர மாட்டோம் என்றும் பேசியிருக்கிறார். மாநிலங்களின் பட்டியலில் உள்ள ஒரு பிரச்சனையில் ஒன்றிய அரசு இப்படி தலையிடுவது மாநில உரிமையைப் பறிப்பதாகும் என்பதை தமிழ்நாடு முதலமைச்சர் உணர்வாரா? இதற்கான கண்டனக் குரலை எழுப்புவாரா? இது நிர்வாக ஆணையா? அல்லது மாநில உரிமைப் பறிப்பா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.

திமுக எம்.பி கனிமொழி இந்தச் சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். கேரளாவில் ஆளும் காங்கிரஸ் கட்சியும் எதிர்க்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டாக இந்தச் சட்டத் திருத்தத்தை கடுமையாக எதிர்த்து வருகின்றன.
மாநில உரிமைப் பட்டியலில் உள்ள ஒவ்வொரு துறையிலும் தலையிட்டு உரிமைகளைத் தொடர்ச்சியாகப் பறித்து வருகிறது பாஜக ஆட்சி!
பெரியார் முழக்கம் இதழ் 27082026

You may also like...