பால்.பிரபாகரன் கண்டனம்! நீட் எதிர்ப்பை நீர்த்துப் போகச்செய்கிறார் முதல்வர் விஜய்!
கழகப் பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன் விடுத்துள்ள அறிக்கை: நீட் போராட்டத்தின் நியாயத்தை உணராமல் மாணவர்களை வாட்டி வதைக்கிறது ஜோசப் விஜய் அரசு. நீட் தேர்வை எதிர்க்கிறோம் என ஒரு வார்த்தையில் சொல்லிவிட்டுப் போராடிய மாணவர்களைத் தாக்கியது மட்டுமல்ல; போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் பணியைத் தனது அமைச்சர்களைக் கொண்டு செய்கிறார்.
மாணவர் போராட்டத்தைத் திசை திருப்பி ஜூலை 23-ம் தேதி வெளியான ஜனநாயகன் திரைப்படத்தை கோலாகலமாக கொண்டாடுங்கள் என ஒரு அமைச்சர் அறிக்கை கொடுக்கிறார். ஜூலை-22ம் தேதி இரவு தமிழ்நாடு முழுவதும் திரையரங்கம் முன்பு தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்கள் பாலாபிசேகம் செய்வதும் 150 ரூபாய் டிக்கெட்டை 1000, 1500-க்கு வாங்கி செல்வதுமான அவலநிலையைக் காண முடிந்தது. முற்போக்கான மாநிலம் தமிழ்நாடு என்றும் அது உரிமைகளுக்கு முதலாவதாக போராடும் என்ற வரலாற்றை மாற்றி தமிழ்நாட்டு மாணவர்கள் இளைஞர்களைத் தற்குறிகளாக மாற்றும் வேலையை ஜோசப் விஜய் அரசு செய்கிறது.
வடமாநிலங்களைப் பிற்போக்கு சிந்தனை கொண்டவர்கள் என வசை பாடினோம் அவர்கள் தங்கள் உரிமைக்காக உயிரைப் பணயம் வைத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் குத்தாட்டம் போட வைக்கிறது இந்த அரசு. தூய்மைப் பணியாளர் போராட்டத்தின் போது மேனாள் முதலமைச்சர் கூலி படம் பார்க்கப் போகலாமா? என கேட்ட அன்றைய நடிகர் ஜோசப் விஜய் இன்று முதலமைச்சர் ஆன பின்பு ஜனநாயகன் திரைப்படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.
ஒரு அமைச்சர் திரைப்படம் பார்க்க விடுமுறை கேட்கிறார், கல்வியில் முன்னணி மாநிலமான தமிழ்நாட்டை விஜய் அரசு கீழ் நோக்கி இழுத்துச் செல்கிறது. தமிழ்நாட்டின் அமைச்சரவை இன்று திரையரங்கில் சென்று கேக் வெட்டுவதும் திருவிழா போன்று தான்வகிக்கும் பொறுப்பை மறந்து கூத்தடிக்கிறார்கள். அமைச்சர்கள் திரைப்படம் பார்க்கக் கூடாது என்பதல்ல; ஒரே நாளில் அனைத்து அமைச்சர்களும் திரைப்படம் காண திரையரங்கில் கிடப்பது தமிழ் மக்களைத் திசைதிருப்பும் செயலாகும்.
புதிதாக எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றாமல் முந்தைய அரசின் திட்டங்களைப் பெயர் மாற்றம் செய்யும் பணியை மட்டுமே செய்யும் இந்த மைனாரிட்டி குதிரை பேர அரசு தமிழ்நாட்டின் இளைஞர்கள் மாணவர்களைத் தவறாக வழி நடத்துவதைக் கண்டிக்கிறோம்.
பெரியார் முழக்கம் இதழ் 30072026
