பாஜகவின் உண்மை முகம் அம்பலம்!

தேர்தல் முடிந்தவுடன் பாஜக தனது உண்மையான முகத்தை காட்டத் துவங்கி இருக்கிறது.

புதுச்சேரியில் சி.பி.எஸ்.இ பள்ளிகளில் ஏற்கனவே மும்மொழிக் கொள்கையை முதல்வர் ரங்கசாமி அனுமதித்து விட்டார். மூன்றாவது மொழியாக இந்தியும் படிக்கலாம் ; பிரெஞ்சும் படிக்கலாம் என்ற நிலை இருந்தது; இப்போது ஆறாம் வகுப்பில் இருந்து இந்தி கட்டாயம் என்றும், ஒரு வாரத்திற்குள் இதை அமல்படுத்த வேண்டும் என்றும் ஒன்றிய அரசு உத்தரவிட்டதோடு பிரெஞ்சு மொழியும் படிக்கலாம் என்ற வாய்ப்பை பறித்து விட்டது.
இந்திய ரயில்வேயில் 29,608 வேலை வாய்ப்புகளை குறைப்பதாக ஒன்றிய ஆட்சி அறிவித்துள்ளது. இதனால் தெற்கு ரயில்வேயில் 2,000 பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட இருக்கிறார்கள்.
மற்றொரு மாநில உரிமை பறிப்பு அறிவிப்பு வந்திருக்கிறது. இந்தியாவில் உள்ள ஒன்றிய அரசுக்கு சொந்தமான அனல் மற்றும் அணு மின் நிலையங்களில் உற்பத்தியாகும் மின்சாரத்தின் பெரும் பகுதியை அந்த மின் நிலையங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கே குறைந்த விலையில் வழங்கப்பட்டு வந்த நிலையை திடீரென்று ஒன்றிய ஆட்சி மாற்றி உள்ளது.
உற்பத்தி செய்யப்படும் ஒட்டுமொத்த மின்சாரத்தையும் போட்டி ஏல முறையில் விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்ய முடிவெடுத்துள்ளார்கள். இந்தப் போட்டி ஏலமுறையால் பல மடங்கு கூடுதல் விலை கொடுத்து தமிழ்நாடு அரசு மின்சாரத்தை வாங்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. நேற்று வரை மோடிக்கு பல்லக்கு தூக்கிய அன்புமணியே இன்று இதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டின் நலன்களை மோடி பார்த்துக் கொள்வார் என்று பேசி வந்த சரணாகதி எடப்பாடி இப்போதும் இந்த முக்கிய பிரச்சினைகளில் முதலாளியிடம் கைகட்டி வாய் பொத்தி நிற்கிறார்.
விடுதலை இராசேந்திரன்
27.04.2026
பெரியார் முழக்கம் இதழ் 30042026

You may also like...