பகவத்துக்குப் பதிலடி

● ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருப்பதற்கு `இந்து’ மட்டுமே; தகுதி ஜாதி தடையல்ல! -மோகன் பகவத்
ஆனால் இந்துவாக இருப்பதற்கு ஜாதி மட்டுமே தகுதி; இதை எதிர்க்க மாட்டீர்களா?
● பாரம்பரியமாக ஜாதிக்கும் தொழிலுக்கும் இருந்த தொடர்பு தற்போது மறைந்து விட்டது. -மோகன் பகவத்
மறைந்துவிடக் கூடாது என்பதால் தான் மோடிஜி ‘விஸ்வகர்மா திட்டத்தை’ கொண்டு வந்து இருக்கிறார். அர்ச்சகர் தொழிலை ஜாதியிலிருந்து பிரித்து விடக்கூடாது என்பதால் தான் நீங்கள் கட்டிய ராமர் கோயிலில் பிராமணர்கள் மட்டுமே அர்ச்சகர்களாக இருக்கின்றார்கள்.அந்த பாராம்பரிய தொழிலை உருவாக்கியதே, நீங்கள் பேசும் `இந்து’ மதம் தானே!
● ஜாதிப் பாகுபாடுகளை அகற்ற மக்கள் மனதிலிருந்து ஜாதியை அகற்ற வேண்டும் -மோகன் பகவத்
மிக்க நல்லது. அதேபோல் வர்ணாஸ்ரமப் பாகுபாடுகளை வலியுறுத்தும் மனு சாஸ்திரங்களையும், பகவத் கீதையும், வேத உபநிடங்களையும் இந்து மதத்தில் இருந்து அகற்ற தயாரா?
● சமூகப் பாகுபாடுகளைக் களைய வேண்டும் -மோகன் பகவத்
சபாஷ். உங்கள் அமைப்பில் பெண் சமூகம் மீதான பாகுபாடுகளை ஒழித்து அவர்களையும் முதலில் உறுப்பினர் ஆக்குங்கள்.
எனக்கு 75 வயதாகிவிட்டது; பதவி விலக தயாராகி விட்டேன்.-மோகன் பகவத்
யாருக்காக கூறுகின்றீர்கள் என்பது புரிகிறது, மோடி இதை எல்லாம் காதில் வாங்க மாட்டார்.
சாவர்க்கருக்கு ‘பாரத ரத்னா’ பட்டம் வழங்க வேண்டும். -மோகன் பகவத்
சாவர்க்கரின் தேசபக்தி என்ன தெரியுமா?
● லண்டனில் சித்பவன் பார்ப்பனர்களுக்கு மட்டுமே தனி அமைப்பைத் தொடங்கியவர்.

● வெடிகுண்டு தயாரித்த தனது உடன்பிறந்த அண்ணன் பாபா ராவ் என்பவரை கைது செய்ததற்காக பிரிட்டிஷ் அதிகாரி கர்சான் வில்லி கொலையிலும், அவரை காப்பாற்ற ஓடோடி வந்த டாக்டர் கோவாஸ்லால் காகா கொலையிலும் குற்றம் சாட்டப்பட்டு தண்டிக்கப்பட்டவர்.

● மன்னித்து விடுதலை கோரியதோடு பிரிட்டிஷ் ஆட்சிக்கு விசுவாசமாக இருப்பேன் என்று மன்னிப்பு கடிதங்களை எழுதி வந்தவர்.

● காந்தி அரசு வேலைகளைப் புறக்கணிக்குமாறு வேண்டுகோள் விடுத்த போது; பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக வேலை புறக்கணிப்பை எதிர்த்தவர்.

● விடுதலைக்குப் பிறகு `மராத்தா’ பத்திரிக்கையில் சாவர்க்கர் எழுதிய ஒரு கட்டுரையில் ‘சுயராஜ்யம்’ என்ற வார்த்தை இடம் பெற்றதற்காக பிரிட்டிஷ் ஆட்சி விளக்கம் கேட்டது. அப்போது ஒரே ஒரு இடத்தில் மட்டும் பயன்படுத்தினேன் அதுவும் “சுயராஜ்யம் வேண்டுமென்ற நோக்கத்திற்காக அல்ல மன்னித்து விடுங்கள்” என்று கடிதம் எழுதியவர்.

● 1947 அரசியல் நிர்ணய சபை தேசிய மூவர்ணக் கொடியை அறிவித்தபோது அதை அடுத்த வாரத்திலேயே இந்துஸ்தானின் தேசியக்கொடியாக மூவர்ணக் கொடியை ஏற்க முடியாது ஒரே தேசியக் கொடி காவிக்கொடி என்று அறிவித்தவர். (1947-சூலை 29).
இவர் ஆர்.எஸ்.எஸ் பார்வையில் தேசபக்தர் இவருக்குத்தான் பாரத ரத்னா பட்டமா?
● ஒவ்வொருவரும் மூன்று குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும். -மோகன் பகவத்
இது இந்து மதத்திற்கு மட்டும் விடுத்த கோரிக்கை. இந்து மக்கள் தொகை அதிகரிக்க வேண்டும். அவர்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்தாலும் பரவாயில்லை….. ஆனால் குழந்தையைப் பெற்றெடுக்கும் பெண்களை மட்டும் சுயம் சேவக்குகளாக அங்கீகரிக்கவே மாட்டார்கள். காந்தியை கொன்றவர்களின் கபட நாடகங்களைத் தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது.
-விடுதலை இராசேந்திரன்
பெரியார் முழக்கம் இதழ்12022026.

You may also like...