திருப்பூரில் அனுமதியின்றி வைக்கப்பட்ட விநாயகர் சிலை அகற்றம்
திருப்பூர் மாஸ்கோ நகரில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் புதிதாக விநாயகர் சிலை வைப்பதற்கு இந்து முன்னணி அமைப்பினர் முயற்சித்தனர். திராவிடர் விடுதலைக் கழகத்தோழர்கள் வடக்கு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.
அரசு வழிகாட்டுதல் முறையில் சிலையை அகற்றுவதாக காவல்துறை தெரிவித்தது.
உடனடியாக இந்தச் செய்தி புகைப்பட ஆதாரங்களுடன் காவல் துறைக்கு திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் இணைய வழியாக புகாராக தெரிவிக்கப்பட்டது. ஆனாலும் சிலையை இந்து முன்னணியினர் அகற்றவில்லை.
இதை அறிந்த திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்டத் தலைவர் முகில் ராசு, மாநகரச் செயலாளர் மாதவன் ஆகியோர் உடனடியாக காவல் நிலையத்திற்கு சென்று விதிகளை மீறி வைக்கப்பட்டிருக்கும் சிலையை அகற்ற வலியுறுத்தி எழுத்துப்பூர்வமாக முறையான புகார் மனுவை அளித்தனர்.
அதன் அடிப்படையில் 27.08.25 அன்று காலை வைக்கப்பட்ட சிலை அன்று மாலையே காவல்துறையால் அகற்றப்பட்டது..
திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் அளிக்கப்பட்ட மனுவின் மீது நடவடிக்கை எடுத்த திருப்பூர் மாவட்ட காவல்துறைக்கு கழகம் சார்பில் நன்றி.
பெரியார் முழக்கம் இதழ் 25092025
