அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடி-ஜாதி அமைப்பே தேசவிரோதி
ஜாதிப் பெருமையை உயர்த்திப் பிடிப்பதுதான் தேச விரோதம் என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது. கடந்த செப்டம்பர் 16-ஆம் தேதி காவல்துறை தொடர்பான ஒரு வழக்கில் இத்தீர்ப்பை வழங்கியுள்ளது. தீர்ப்பை நீதிபதி வினோத் திவாகர் வழங்கி உள்ளார். தீர்ப்பில் கூறியுள்ளதாவது:
தேச விரோதம் எது என்று கேட்டால் அது ஜாதிப் பெருமையை பேசுவது தான் (Glorifying Caste Anti-National). சமூகத்தில் ஆழமாக புரையோடி உள்ள ஜாதி அமைப்பை முற்போக்கான சட்டங்கள், கடுமையான பாகுபாடு எதிர்ப்பு சட்டங்கள், முற்போக்கு கொள்கைகள் வழியாக சமூகத்தை மாற்றி அமைக்க வேண்டும்.
அரசியல் சட்டத்தின் பார்வையில் இதுதான் உன்னதமான தேசபக்தி என்று நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை பதிவு செய்யும் வழக்கு புகார் மனு, சாட்சிப் பதிவுகள்
காவல்துறை அறிவிப்புகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களிலும் ஜாதி அடையாளங்களை முழுமையாக நீக்க வேண்டும். படிவங்களிலேயே ஜாதி என்ற குறிப்பு இருக்கக் கூடாது. தந்தை பெயர் மற்றும் கணவர் பெயர்களை அடையாளங்களாக குறிப்பிடும்போது கட்டாயம் தாயார் பெயரையும் சேர்க்க வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தனியார் மற்றும் அரசுக்கு சொந்தமான வாகனங்களில் ஜாதி அடையாளமோ, ஜாதி முழக்கங்களோ இடம் பெறக் கூடாது. அப்படி பதிவு செய்த வாகனங்களில் உரிமையை ரத்து செய்ய வேண்டும்.
நகரங்களில் கிராமங்களில் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் பெயர் அறிவிப்பு பலகைகளில் ஜாதிப் பெயர் இடம் பெறக்கூடாது.
ஜாதியை பெருமைப்படுத்தும் சமூக ஊடகங்கள் மீது அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜாதி அமைப்பையும் அதன் சமூக செல்வாக்கையும் துடைத்தெறியக்கூடிய ஒருங்கிணைந்த ஒரு சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று நீதிபதி தீர்ப்பு அளித்துள்ளார்.
பெரியார் முழக்கம் இதழ் 25092025
