படித்தவர்களை ஏன் ‘பேய்’ பிடிப்பதில்லை?

பேய், பிசாசு உண்மையா? அறிவியல் ரீதியான ஒரு அலசல். பேய், பிசாசு, ஆவிகளை அச்சத்தால் மக்கள் நம்புகிறார்கள். பூசாரிகளைக் கொண்டு அவற்றை விரட்ட முயல்கிறார்கள். தற்கொலை செய்து கொண்டவர்கள், பிறரால் கொல்லப்பட்டவர்கள், விபத்தால் இறந்தவர்கள் ஆகியோரே பேயாக, ஆவியாக உலவுவதாகப் பொதுவாக நம்பப்படுகிறது. விபத்தால் அல்லது

உணவுக்காக கொல்லப்படும் ஆடுகள், கோழிகள், மாடுகள் போன்ற பிராணிகள் ‘ஆவியாக, பேயாக’ உலவுவதாகப் பொதுவாக யாரும் அதேபோல் நம்புவதில்லை. கொல்லப்படும் தாவரங்கள் பேயாக, ஆவியாக உலவுவதாக யாரும் நம்புவதில்லை. இந்தப் பேய், பிசாசு, ஆவிகள் யாரை தொந்தரவு

செய்கின்றன தெரியுமா? படித்த அய்.ஏ.எஸ். அதிகாரிகளை, அய்.பி.எஸ். அதிகாரிகளை, மருத்துவர்களை, பொதுவாக படித்த ஆண்களை தொந்தரவு செய்வதில்லை. அதேபோல் பார்ப்பன ஆண்களையும் பெண்களையும் தொந்தரவு செய்வதில்லை. இன்று வரை இவர்களையெல்லாம் ஏன் பேய், பிசாசு, ஆவிகள் தொந்தரவு செய்யவில்லை என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதே “பேய், பிசாசு, ஆவிகள், கிராமப்புற மக்களை அதிலும் படிப்பு அறிவு இல்லாதவர்களை அதிலும் பெரும்பாலும் பெண்களையே தொந்தரவு செய்வது ஏன்?” இவையெல்லாம் தந்தை பெரியார் இந்நாட்டு மக்களை நோக்கி எழுப்பிய கேள்விகள் ஆகும். அடுத்து இந்தப் பேய், பிசாசு, ஆவிகள்

ஆகியவற்றின் தொந்தரவுக்கு உள்ளானவர்கள் நிலையைப் பார்ப்போம். இவர்களில் சிலர் பேய், பிசாசு, ஆவியைப் பார்த்ததாகவும் சலங்கை ஒலியைக் கேட்டதாகவும் கடவுள் காட்சி கொடுத்ததாகவும் சொல்வார்கள். இவர்கள் பொய் சொல்லவில்லை. தாம் உணர்ந்ததைச் சொல்கிறார்கள். அப்படியென்றால் இவை யெல்லாம் உண்மையா? அதாவது பேய், பிசாசு,

ஆவிகள் இருப்பது உண்மையா? என்ற கேள்விகள் எழலாம்.

 

மேற் சொன்னவை எல்லாம் புலன்களை ஏய்க்கும் உணர்ச்சிகளே (Deceptive perceptions)

ஆகும். இவற்றை அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் மூன்று வகையாகப் பிரிக்கின்றன.

  1. மாயப் புலன் உணர்ச்சி (lllusion)
  2. மயக்கப் புலன் உணர்ச்சி (Hallucination)
  3. மருட்சி (Delusion)

மாயப்புலன் உணர்ச்சிகள்

கண், காது, மூக்கு உள்ளிட்ட அய்ந்து புலன் உணர்வுகளின் அடிப்படையில் மாய உணர்ச்சிகள் அய்ந்து வகையாகப் பிரிக்கப்படுகின்றன. நல்ல வெயிலில் நீண்ட தார்ச் சாலையில் நடக்கும்போது

மிகத் தொலைவில் நீர் இருப்பதுபோல் தெரியும். உண்மையில் இருக்காது. இதனைக் கானல்நீர் என்பர். இது கண் உணரும் மாயக் காட்சியாகும்.

நெல்லிக்காய் தின்றபின் நீரைக் குடித்தால் இனிப்பதுபோல் உணர்வர். அதனால் நீர் இனிப்பானது ஆகாது. இது நாக்கின் ஒரு வகை மாய உணர்ச்சியாகும். இதுபோல் மாய உணர்ச்சிகளை நமது அய்ம்புலன்கள் உணர

வாய்ப்பு உண்டு. சரியான ஆய்வின் மூலம் இந்த மாய உணர்ச்சிகளை வெளிப்படுத்தலாம்.

 

மயக்கப் புலன் உணர்ச்சி

இயற்பியல் (Physical), வேதியியல் (Chemical), உயிரியல் (biological) மற்றும் உளவியல் (Physchological) காரணங்களால் உண்டாகும் உணர்ச்சிகளே மயக்கப் புலன் உணர்ச்சிகளாகும்.

 

இயற்பியல் காரணங்களால் உண்டாகும் மயக்கப் புலன் உணர்ச்சி சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவால்டர்ஹெஸ், அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜேம்ஸ் ஓல்ட்ஸ்,யேல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜே, டெல்காடோ ஆகியோர் மின் துடிப்புகள்(Electric impulses)மூலம் மூளையில் பல்வேறு கட்டுப்பாட்டுப் பகுதிகளை (controls) தூண்டிவிட்டு சினம், அச்சம், பசி, வருத்தம், துக்கம், துயரம், எக்களிப்பு, காதல், காமம், ஆர்வம், ஆக்கிரமிப்பு உணர்ச்சி, நட்பு, விருப்பு, வெறுப்பு, இன்பம், துன்பம் போன்றவற்றை சாதாரண நடைமுறையில் வாழ்வில் உணர்வதுபோல் செயற்கையாகத்

தூண்டும் முயற்சியில் இறங்கி அதில் வெற்றி பெற்றுள்ளனர்.

தாளக் கட்டமைந்த பறையோசை, சீராகக் கைதட்டும் ஓசை, மந்திர உச்சாடணம், பண்ணோடுஇசைந்த பாடல், பாடல் ஒப்புவித்தல், ஒலி முழக்கமிடல், நடனம், அங்க அசைவுகள், கண்களில் மாற்றி மாற்றி வெளிச்சத்தையும் இருட்டையும் உருவாக்குதல், ஒரு பொருளை

உற்றுநோக்கல், ஜோதி, படிகம் (crystal), மை போன்றவற்றை உற்றுநோக்கல் போன்ற செயல்கள் மூலம் மயக்கப்புலன் உணர்ச்சி அனுபவங்களை உண்டாக்க முடியும். பேய்ஆட்ட அங்க அசைவுகள், முகச்

சுழிப்புகள், காவடியாட்டம், கரக ஆட்டம், ஆலய பூசை, அங்க அசைவுகள், பெந்தகோஸ்ட் எனும் கிறித்துவப் பிரிவினரின் பக்தி அசைவுகள், உடல்

முறுக்கு நடனம், பாப் இசை நடனம் போன்றவை நரம்பு மண்டல இயக்கத்தின் சந்த இசைத் தூண்டல்களே (Rythmical stimulations of the nervous system) ஆகும். இதற்குப் பெயர் மயக்கப்புலன் உணர்ச்சி.

 

உளவியல் காரணங்களால் தோன்றும்

மயக்கப் புலன் உணர்ச்சிகள்

மனிதர்களின் குறிப்பிட்ட வித்தியாசமான

நடத்தைப் போக்குகள் அவர்கள் உடலிலுள்ள குரோமோசோம்கள் (Chromosomes) உடன் தொடர்புடையவை என்று கனடா நாட்டைச்

சேர்ந்த ஆர்லண்டோமில்வரும், பேரா. ஆலன்பிஷரும் கண்டுபிடித்துள்ளனர்.

உடலில் சிலவகை வைட்டமின்கள், நொதிகள் (Enzymes) போன்ற பற்றாக்குறையின் காரணமாகமனக் கோளாறுகள் உண்டாக முடியும்.

வைட்டமின் ‘பி’ குறைவின் காரணமாக ‘பெரி பெரி’ என்னும் மனநோய் உண்டாகும். மனப் பிறழ்வான நடத்தை இந்நோயின் இன்றியமையாத

அறிகுறியாகும். வைட்டமின் குறைவால் ஏற்படும் நோய்களில் ஒன்று ‘பெல்லாக்ரா’ ஆகும். உடலில் உள்ள சில சுரப்பிகளின் கோளாறு காரணமாகவும் சில மன நோய்கள் உண்டாகும். எண்டாக்கிரினல் சுரப்பிக் (Endocrinal Gland) கோளாறு காரணமாக ஒரு குறிப்பிட்ட மன நோய்உண்டாகும். பாரா தைராய்டு சுரப்பி (Parahroid Gland) குறைவாகச் சுரப்பதால் மயக்கக் காட்சிகள் அதிகம் தெரியும். மனித மனமானது கருத்தேற்றங்களினால்

(Suggestions) பாதிக்கப்படக் கூடும் என்பது உளவியல் உண்மையாகும். இத்தகைய கருத்தேற்றங்கள் தன் கருத்தேற்றம் (Auto- Suggestions), அல்லது தன் வசியம் (Auto-hypnosis) என்றும், அயல்வசியம் (Hetero-hypnosis) என்றும் இரு வழியில் நடைபெறும். மதக் கருத்துக்களை ஊட்டுதலும், மூளைச் சலவை (Brainwashing) செய்தலும் மெதுவான தொடர்ச்சியான மன வசிய முறையாகும். பேய், பிசாசு, ஆவி தொடர்பான கருத்துகள் இத்தகைய முறையில் சிறு பிள்ளையிலிருந்தே மனதிற்குள் திணிக்கப்படுகின்றன.

பேய்பிடித்தவரைப்போல் பிதற்றுதல், வேற்று மொழியில் பேசுதல், சாமி வந்து ஆடுதல் போன்றவை எல்லாம் மேற்சொன்ன கருத்தேற்றங்களின் விளைவுகளே ஆகும். இதில் பேய்பிடித்து வேற்று மொழியில்பேசுபவர் குளோசோலேலியா (Clossolalia) எனும் மனநோயால் பாதிக்கப் பட்டவர் ஆவார். இவர்கள் வாயில் ‘அயல் மொழி’ போல் வெளிப்படுவது

உண்மையில் அயல்மொழி அல்ல என்பதனை அந்தக் குறிப்பிட்ட மொழி தெரிந்தவரை அருகில் வைத்து நிரூபிக்கலாம். சாதாரணமாகக் கண் சம்பந்தப் பட்ட நோய்களுக்கு கண் மருத்துவரை அணுகுவர். தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு தோல் மருத்துவரை அணுகுவர். ஆனால் மனம் சம்பந்தப்பட்ட

நோய்களுக்கு மனநோய்மருத்துவரை அணுகாமல் பேய், பிசாசு, ஆவி விரட்டும்  செயலில் ஈடுபடுவது அறிவுடைமை ஆகாது.

மருட்சிகள்

சிறு பிள்ளையிலிருந்து பொய்யான கருத்துகளை மனதில் திணித்து வந்ததன் விளைவாக ஏற்படுவதே மருட்சியாகும். பேய், பிசாசு, ஆவிகள், ஜோதிடம், கைரேகை, மறுபிறப்பு, மந்திரம் போன்றவையெல்லாம் இந்த மருட்சிகளில்

அடங்கும். மேற்சொன்னவற்றிலிருந்து படிப்பு, அறிவு இல்லாத கிராம மக்களே பெரும்பாலும் பேய், பிசாசு, ஆவி தொந்தரவுகளுக்கு உள்ளாவதன் காரணங்கள் தெளிவாகின்றன. இத்தகைய நிகழ்ச்சிகள் நடக்கும் கிராமங்களுக்குப் பகுத்தறிவாளர் குழு நேரில் சென்று ஆய்வு செய்ததும் உண்டு. உதாரணமாக ஆந்திர மாநிலத்தில் 1983இல் மேடக் மாவட்டத்தில் ‘பனிமதி’ என்ற பெயரில் பேய், பிசாசு, பில்லி சூனியங்களுக்கு பல கிராமங்களில் மக்கள் பலியாகி, பலர் உயிருடன் எரிக்கப்பட்டும் சிலர் இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றி பணம் பறிக்க மாவட்ட காவல்துறைக்கு இது ஒரு பெரும் சட்ட ஒழுங்கு பிரச்சினையாகிவிட்டது. உடனே மாவட்ட காவல் அதிகாரி விஜயவாடாவில் உள்ள நாத்திக மய்யத்திற்கு அழைப்பு விடுத்தார். அங்கிருந்து ஒரு மனநோய்மருத்துவர், இரண்டு பொது மருத்துவர்கள், ஒரு இயற்பியல் அறிஞர், ஒரு சமூகவியல் அறிஞர், ஒரு மனோவசிய அறிஞர்,

ஒரு ‘மாஜிக்’ நிபுணர் மற்றும் சில சமூக சேவகர்கள் அடங்கிய ஆய்வுக் குழு மேற்சொன்ன கிராமங்களுக்குச் சென்று ஆய்வு செய்தது. யார், யார், என்னென்ன நோய்களுக்கு உள்ளாயினர், எவையெவை மோசடி வேலை என்பதையெல்லாம் கண்டறிந்து அறிக்கை மூலம் வெளிப்படுத்தினர்.

பேய், பிசாசு, பில்லி சூனியம் ஒரு சமூகக் கலாச்சார நம்பிக்கையாக இருந்தது என்றும் பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் மற்றும் உளவியல் காரணங்களே இந்த மூடநம்பிக்கைகளை உருவாக்கின என்றும் ஆய்வின் முடிவில் வெளிப்படுத்தினர். படிப்பறிவற்ற கிராமப்புறப் பெண்களை ‘பேய்பிடிப்பதற்கு’ ஒரு குறிப்பிட்ட காரணம் உண்டு. பருவம் அடையும் கிராமப்புறப் பெண்ணுக்குத் தனது உடலில், உணர்வில் ஏற்படும் மாற்றங்களைப்பற்றி சரியான விளக்கம் பெறுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் அதனால் மனநோய்க்குள்ளாகி ‘பேய்’ பிடிப்பது உண்டு. அடுத்து ‘பாலியல்’ உடலுறவு, குழந்தை பிறப்பு பற்றிய அடிப்படைத் தகவல்கள் சரியாகத் தெரியாத பெண் திருமணம் செய்து கொண்டு, விவரமற்ற கணவனால் கட்டாய உடலுறவுக்குள்ளாகி, திகில் அடைந்து மனநோய்க்குள்ளாகி ‘பேய்’ பிடிப்பதும் உண்டு. இரண்டு, மூன்று குழந்தைகள் பிறந்தவுடன் இந்த ‘பேய்’கள் ஓடிவிடும். ஆக இவையெல்லாம் அறியாமை யால் விளைந்த மனக்கோளாறுகளே சரியான மனநோய்மருத்துவரை அணுகி எளிதில் குணப்படுத்தக்கூடிய இந்த வகைக் கோளாறுகளை ‘பேய்’ பிடித்ததாகச் சொல்லி ஏமாறுவதும், ஏமாற்றுவதும் இனியும் நடைபெற நாம் அனுமதிக்கக் கூடாது. இத்தகைய அறிவியல் கருத்துகளை மக்களிடம் பரப்பி வந்த மராட்டிய பகுத்தறிவாளர் தபோல்கர், மதவெறியரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

பெரியார் முழக்கம் 22072016 இதழ்

You may also like...