நீதிபதியின் திமிர்ப் பேச்சு தலைமை நீதிபதி கண்டனம்
ஜே.பி. ப்ர்திவாலா குஜராத் நீதிமன்ற நீதிபதியாக இருந்தபோது வழக்கு ஒன்றில் இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிரான மோசமான கருத்துக்களை கூறினார். ‘பட்டேல்’ சமூகத்தினருக்கு தனி இட ஒதுக்கீடு கேட்டு போராடிய ஹர்திக் பட்டேல் மீது தொடுக்கப்பட்ட தேசத் துரோக வழக்கு இந்த நீதிபதிக்கு முன் 2015 டிசம்பரில் விசாரணைக்கு வந்தது. அப்போது
“இந்த நாட்டை சீரழிப்பது எவை என்று என்னிடம் கேட்டால் ஒன்று இட ஒதுக்கீடு; மற்றொன்று ஊழல் என்று கூறுவேன்” என்று அவர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
அப்போது 58 மாநிலங்களவை உறுப்பினர்கள் கையெழுத்திட்டு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வந்தனர். தீர்மானம் மாநிலங்களவையில் தாக்கல் செய்ததை அறிந்து அடுத்த சிலமணி நேரங்களிலேயே குஜராத் மாநில பாஜக ஆட்சி நீதிபதியை அவசரமாக காப்பாற்றுவதற்கு முன் வந்தது. நீதிபதியின் முன் ஒரு மனுவை தாக்கல் செய்து அவர் இட ஒதுக்கீடு பற்றிய கருத்தை நீதிமன்ற குறிப்பேடுகளிருந்து நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டது. அந்த குறிப்பு நீக்கப்பட்டது. தொடர்ந்து அவரது பதவி நீக்கத் தீர்மானம் திரும்பப் பெறப்பட்டது.
அதே நீதிபதி இப்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கிறார். கடந்த ஆகஸ்ட் 4ஆம் தேதி அவர் அலகாபாத் நீதிபதி குறித்து திமிராக கருத்துக்களைத் தெரிவித்தார். ஒரு கிரிமினல் வழக்கில் அலகாபாத் நீதிபதியை கடும் சொற்களால் வசை பாடினார். நீதிபதி வழங்கிய உத்தரவைப் படுமோசமான மிக தவறான உத்தரவு. “கிரிமினல் வழக்குகளை விசாரிக்கவே இந்த நீதிபதி தகுதியற்றவர்” என்றும் அவர் கூறியிருந்தார். இந்த அமர்வில் நீதிபதி மகாதேவனும் உடன் இருந்தார்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு இப்படிப் பேச உரிமை இல்லை என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் இப்போது இடித்து க்கூறி இருக்கிறார். நீதிபதிகளின் தவறுகளை சுட்டிக் காட்டலாம்; ஆனால் அவர்களை இப்படி அவதூறு பேசக்கூடாது. அதற்கு உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு உரிமை இல்லை. உயர்நீதிமன்ற நீதிபதிகளும் அரசியல் சட்டத்தால் ஏற்கப்பட்டவர்கள் தான் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உயர் நீதிமன்ற நீதிபதியின் கருத்து தனக்கு உடன்பாடு இல்லை என்று அறிவித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி உள்ளார்.
பெரியார்முழக்கம்இதழ்14082025
