அன்பு தனசேகர் பணி ஓய்வு பாராட்டு விழா!
கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர் வருமான வரித் துறையில் அதிகாரியாகப் பணியாற்றி 36 வருட பணிக்குப் பின் ஓய்வு பெற்றுள்ளார். பணி ஓய்வு பாராட்டு விழா கடந்த ஜூலை 5ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் சிறப்புடன் நடைபெற்றது. உடன் பணியாற்றிய அலுவலர்கள், உறவினர்கள், கழகத் தோழர்கள் நண்பர்கள் திரண்டு வந்திருந்தனர். அன்பு தனசேகர் மகள் வழக்கறிஞர் இளவேனில் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.
உரையாற்றியவர்கள் அன்பு தனசேகரின் சமூகத் தொண்டுகளை சமூக தொண்டாற்றுவதில் அவரின் ஆர்வத்தையும் பாராட்டினர். தனது பெண் மக்களை முழு சுதந்திரத்துடன் வளர்த்தார். அலுவலகத்தில் ஆளுமைகளை அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்தினார். அதிகாரியாக இருந்தும் ஒரு அதிகாரியாக நடந்து கொள்ளாமல் எளிமையான மனிதராக எல்லோரிடமும் பழகியவர். தனக்கு கீழே பணியாற்றும் ஊழியர்களுக்கு உதவியவர். அமைப்புகளை உருவாக்கி வழி நடத்தியவர்.
பிற்படுத்தப்பட்டோர் சமூக உரிமைக்காக தொடர்ந்து களத்தில் நின்றவர். பல ஊர்களுக்கு சென்று பயிற்சி வகுப்புகளை நடத்தியவர். நடைபயிற்சி நண்பர்களை ஒருங்கிணைத்தவர், ஒவ்வொரு நாளும் நடைபயிற்சிப் பூங்காவில் திருக்குறளை எழுதியவர் என்ற சிறப்புகளை பகிர்ந்து கொண்டனர். டெல்லியில் ராகுல் காந்தியை சந்தித்தபோது இட ஒதுக்கீட்டு பிரச்சினைகளில் பல்வேறு பரிணாமங்களை நுட்பமாக விளக்கிய போது ராகுல் காந்தி தனது சந்திப்பு நேரத்தை மேலும் அதிகரித்து ஆர்வத்துடன் கருத்துக்களை கேட்டுக் கொண்டதையும் சுட்டிக் காட்டினர்.
1996 இல் பெரியார் திராவிடர் கழகம் தொடங்கப்பட்டதிலிருந்து, பெரியார் திராவிடர் கழகம், பிறகு திராவிடர் விடுதலைக் கழகம் வரை, ஒன்றிய அரசுப் பணியில் இருந்து கொண்டே தீவிரமாக களப்பணியாற்றி வந்தார். அதுவும் பார்ப்பன அதிகாரம் நிறைந்த வருமான வரித்துறையில் இருந்து கொண்டே அவர் பணியாற்றியதை தோழர்கள் பலரும் பாராட்டினர்.
இறுதியாக பேசிய பொதுச் செயலாளர் விடுதலை ராசேந்திரன் அன்பு தனசேகருக்கு கிடைத்த பாராட்டுகள் அனைத்தும் திராவிடர் விடுதலைக் கழகத்திற்கு கிடைத்த பாராட்டு, பெருமை என்று கூறினார். தனது பெரியார் கொள்கை அடையாளத்தை அவர் மறைக்கவில்லை. அந்த நேர்மையும் துணிவும் தான் எந்த பழிவாங்கலுக்கும் இடம் தரவில்லை என்று கூறினார் தமிழ்நாடு மாணவர் கழகம் உருவாக்கி வரும் இசை குழுவுக்கு மூன்று பறை இசைக் கருவிகளை மாணவர் கழக ஒருங்கிணைப்பாளர் பேரன்பு, தோழி மற்றும் சர்மிளாவிடம் வழங்கினார்.
எப்போதும் அன்பு தனசேகர் உடன் இருக்கும் கழகத் தோழர் லட்சுமணன் குடும்ப நிதியாக ஒரு லட்சம் ரூபாயை விழா நினைவாக தனது தந்தையின் வழியாக வழங்கினார். 102வயது நிறைந்த தனது பாட்டியின் நீண்ட நாள் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் அவருக்கு மோதிரம் ஒன்றை அணிவித்தார். விழாவில் சென்னை மாவட்ட தோழர்கள் திராளாக கலந்து கொண்டனர்.
– நமது செய்தியாளர்
பெரியார் முழக்கம் 10072025இதழ்
